
பிரபல தயாரிப்பாளரும் கதைவசனகர்த்தாவுமான கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும், களவாணி படத்தின் நிர்வாகத் தயாரிப்பளாரகவும் பணியாற்றியவர் எஸ்.பரித்.
இவர் தனது ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வீரையன்.
கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர் — நாயகியாக இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி இருவரும் நடிக்க, இவர்களுடன் கயல் வின்சென்ட், தென்னவன், வேல. ராமமூர்த்தி, ஆரண்ய காண்டம் வசந்த் , விஜய் டிவி ஹேமா.. இவர்களுடன் பிரீத்திஷா என்ற திருநங்கை ஆகியோர் நடித்து இருக்கும் படம் இந்த வீரையன் .
என்ன சொல்கிறான் இந்த வீரையன். இயக்குனர் சொல்கிறார் .
” 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்ட கதை .
தகப்பன் மற்றும் மகன்…. மகனுடன் வெட்டியாக சுற்றித் திரியும் நண்பர்கள்… அப்பாவுக்கு மகன் மேல் மிகப் பெரிய நம்பிக்கை .
மகனின் வாழ்க்கை முறை அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றும்படியாக இல்லை. ஒரு நிலையில் மானம் மரியாதையைக் காப்பாற்றப் போராட வேண்டிய கட்டாயம் அப்பனுக்கு வருகிறது . ஆனால் மகன் இருக்கும் நிலைமை ?
அதையும் மீறி மகன் அவற்றைக் காப்பாற்றினானா ? அப்பனின் நம்பிக்கையை நிறைவேற்றினானா? இல்லையா? இல்லை எனில் அப்பன் என்ன செய்தான் என்பது படத்தின் கதை .
அனால்நான் இதை வழக்கமாகச் சொல்லவில்லை .
மானம் மரியாதை என்பது கதையின் முக்கிய அம்சம் . அதற்கேற்ப படத்தின் பின்புலத்தைப் பயன்படுத்தி இருக்கிறேன் ” என்கிறார் பரித்.
‘அதற்கேற்ப பயன்படுத்தி இருக்கிறேன்’ என்றால்….. எப்படி ?
தொடர்கிறார். ”சோழ மன்னர்கள் வாழ்ந்த மாபெரும் புகழ்பெற்ற பூமி தஞ்சை. ஆனால் இந்த மண். கால ஓட்டத்தில் தடம் புரண்டு, இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்கிறேன் .
பொதுவாக தஞ்சையின் வரலாற்று சின்னம் என்றால் கோவில் மற்றும் அரண்மனை இவற்றைதான் சொல்கின்றனர் . இவற்றைதான் காட்டுகின்றனர். ஆனால் சோழர்களின் சிறப்பு இவ்வளவுதானா? பாண்டியர்கள் படை எடுப்பாலும் , காலப் போக்கில் பரமாரிப்பு இன்றியும் எவ்வளவோ அழிந்து போனது உண்மைதான் .
அதன் பின்னரும் நவீன அரசாங்க செயல்பாடுகளால் எவ்வளவோ அடையாளங்கள் சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இன்னும் எவ்வளவோ சிறப்பான சோழ சாம்ராஜ்ய அடையாளங்கள், தஞ்சை மண்ணின் பல்வேறு பகுதிகளிலும் காவிரிக் கரையோரங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன .
அணு தினமும் அவை அழிந்து கொண்டே இருக்கிறது . அவற்றை எல்லாம் தேடித் தேடிப் போய், அந்த பகுதிகளைப் பின்புலமாக பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்து இருக்கிறேன் . அவற்றில் சுமார் எண்பது சதவீதம் இதுவரை கேமராக் கண்களிலேயே படாதவை .
அப்படி நான் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்திய ஒரு பகுதியில்தான் தாரை தப்பட்டை படத்தை அடுத்து எம் சசிகுமார் உருவாக்கும் புதிய படம் படமாக்கப்படுகிறது
எனவே எனது வீரையன் படத்தின் பின்புலமாக வரும் ஒவ்வொரு இடமும், சோழப் பேரரசின் மிச்சங்களைக் காட்டும்.
படத்தின் கதையின் முக்கிய அங்கமாக வரும் மானம் மரியாதை குடும்பப் பெருமை , பரம்பரைப் பெருமை போன்ற விசயங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்தப் பின்புலங்கள் அமையும் .
அவை படத்துக்கான உணர்வு ஆக்கத்துக்கு உதவும் அதே நேரம் , பின்புல ரீதியாகவும் ரசிகர்களை பெருமித உணர்வுக்கு ஆளாக்கும் ” என்கிறார் .
நல்ல விஷயம் !
வாழ்த்துகள் பரித் .