
எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் மற்றும் ரம்யாவும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையாவும் தயாரிக்க,
கலையரசன், காளி வெங்கட், புதுமுக நாயகிகள் ஷாலின் , வைஷாலி , பால சரவணன் ஆகியோர் நடிக்க,
அறிமுக இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ராஜா மந்திரி ,
நிஜ ராஜ்யமா? கூத்து மேடையா ? பார்க்கலாம் .
சின்ன வயது முதல் வளர்ந்து இளைஞனாகி விட்ட பிறகும் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டாலும் , உள்ளுக்குள் நிஜமான பாசம் காட்டும் அண்ணன் தம்பிகள்,
சூர்யாவும் (காளி வெங்கட்) கார்த்தியும் (கலையரசன்) .
அந்த புத்திசாலித்தனமான பாசத்தைப் பார்த்து வெள்ளந்திக் கண்ணீர் விடுவதே அவர்களது அப்பாவின் (நாடோடிகள் கோபால் ) வாழ்நாள் செயல்பாடு.
சூர்யாவுக்கு பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்க, சூர்யாவுக்கு பெண் அமையாத நிலையில் , அது அவனது பெற்றோருக்கு மட்டுமல்ல , ஒரு நிலையில் சூர்யாவுக்கே அது விரக்தியை ஏற்படுத்துகிறது .
இந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்ணும் ஜோசியர் (கஜராஜ்) மகளுமான மகாலட்சுமியை (வைஷாலி) காதலிக்க ஆரம்பிக்கிறான் சூர்யா .
‘எனக்கும் அவளை பிடிக்கிறது யார் கரெக்ட் பண்றாங்களோ அவங்களுக்கே அந்த பொண்ணு’ என்று வம்பு இழுக்கிறான் தம்பி
இவர்களது அம்மா மீனாட்சிக்கும் (ஜெயந்தி) மகாவின் அம்மாவுக்கும் குப்பை கொட்டுவதில் வந்த சண்டை , தொடர்ந்து நாறுகிறது .
தம்பி இங்கே இருந்தால் தனது காதல் நிறைவேறாது என்று எண்ணும் அண்ணன் சூர்யா , தம்பி கார்த்தியை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறான் . அங்கு அவனது விடுதி அறை நண்பன் சதீஷ் (பால சரவணன்)
கல்லூரியில் உடன் படிக்கும் சுபாவுக்கும் (ஷாலின்) கார்த்திக்கும் காதல் வருகிறது . .
கல்லூரி விடுமுறைக்குப் எல்லோரும் ஊருக்கு போக, ஊரில் கார்த்தி செய்த ஒரு கோபச் செயலால் சூர்யா வீட்டுக்கும் மகா வீட்டுக்கும் பெரிய சண்டை வருகிறது .
ஊரையே காலி செய்து விட்டுப் போகிறது மகாவின் குடும்பம்.
அந்த நேரம் பார்த்து சூர்யாவுக்கு புரோக்கர் மூலம் ஒரு பெண் வர, எல்லோரும் பெண் பார்க்கப் போகிறார்கள் .
அங்கே போனால் அந்தப் பெண் , தம்பி கார்த்தி காதலிக்கும் சுபா !
அதிர்ந்து போன கார்த்தியும் சுபாவும் கல்யாணத்தை நிறுத்த, நண்பன் சதீஷோடு போடும் திட்டங்கள் எல்லாம் சொதப்ப ,
ஒரு நிலையில் ‘இந்தக் கல்யாணம் நின்று போனால் என் அண்ணன் செத்துடுவான்’ என்று சுபாவிடம் கார்த்தி கூற,
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த ராஜா மந்திரி
முழு நீள கிராமியப் படம் . அதற்கேற்ற பல முகங்கள்.
“கனகாம்பரத்துக்கு இங்க்லீஷ்ல என்னங்க பேரு ?”
“ம்ம்ம்ம்…. இங்க்லீஷ் கனகாம்பரம் “
— உள்ளிட்ட சில இடங்களில் உஷா கிருஷ்ணனின் வசனத்தில் ரசனை மணம் .
பால சரவணன் சம்மந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன .
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவில் ஆந்த ஆரம்பகட்ட, பறவைப் பார்வை காட்சிகள் அட்டகாசம் . பசுமை இல்லாத காட்சிகளில் கூட குளுமை தருகிறது ஒளிப்பதிவு .
ஜஸ்டின் பிரபாகரன் இசை மற்றும் வரிகளில் ”எதிர்த்த காலிஃபிளவரே..” பாடல் ஆகா .. ஆகா .. ஆ..ககா ! சூப்பர் , (தினமலரிலும் கண்டிப்பா பாராட்டுவாங்க ஜஸ்டின்).
லெகுவா லெகுவா பாடல் நன்று . ஆனால் அதை ‘லெகுவா லெகு லெகுவா … மெதுவா மெது மெதுவா ….” என்று அமைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .அதற்கான இடம் அங்கே கிடக்கு .
காளி வெங்கட்டுக்கு அட்டகாசமான கேரக்டர் . ரசித்து ருசித்து நடித்து இருக்கிறார் . படத்தில் முதலில் கவர்பவர் இவரே . கலையரசன் ஜஸ்ட் லைக் தட் கேஷுவலாக நடித்து விட்டுப் போகிறார் .
மகாவாக வரும் வைஷாலி பாங்கு … குடும்பப் பாங்கு.! குரல் அருமை …. சாரி , குரலும் அருமை . !
யார் அந்த ஷாலின் ? புதரில் இருந்து முதல் முதலாக எட்டிப் பாக்கும் முயல் குட்டி மாதிரி ஒரு முகம் ! நடிப்பும் ஒகே .
நிறுத்தி நிதானமாக காமெடி பஞ்ச் அடிக்கிறார் பால சரவணன் .
மீனாட்சியாக வரும் ஜெயந்தி நல்ல தேர்வு . சித்தப்பாவாக நடித்து இருக்கும் சரவண சக்தி அந்த கேரக்டருக்காக செய்தது மாதிரியே இருக்கிறார் .
அந்த அப்பா கேரக்டர், டைரக்டோரியல் காமெடி . சிறப்பு
இந்த அண்ணன் தம்பி பாத்திரங்களுக்கு சூர்யா கார்த்தி என்று பெயர் வைதததற்குப் பின்னால் எந்த உள்குத்தும் இல்லையே ? (no worries plz … just for fun ! )
அண்ணனுக்குப் பெண் பார்க்க போன இடத்தில் தம்பியின் காதலி இருக்கிற டுவிஸ்ட் ஒகே . ஆனா அந்த சூழலை கொண்டு வந்த விதத்தில் யதார்த்தம் இல்லையே…
தூக்கத்தில் கார்த்தி ஒரு போனை மிஸ் பண்ணி விட்டதால் அந்த விஷயம் தெரியாமலே போச்சு என்றால் , அப்புறம் ஒரு நிலையில் கார்த்தி சொல்வது போல , ‘என்ன பெருசா லவ் பண்ணிட்டாங்க ரெண்டு பேரும்?’
அதே போல கல்யாணத்தை நிறுத்த கார்த்தி செய்யும் முயற்சிகளில் சின்சியாரிட்டி இல்லை.
“இருங்க பாஸ் ,, இன்னும் அரைமணி நேரம் படம் ஓடட்டும் . அதுக்குள்ள என்ன அவசரம் ?’ என்பது மாதிரியான அலட்சியம். மகாவை கண்டு பிடிப்பதிலும் அதே அலட்சியம்
விளைவு ?
கார்த்தி மேல் கோபித்துக் கொண்டு போன சுபாவை, ”டைமாச்சு. படத்த முடிக்கணும் … சீக்கிரம் சீக்கிரம்…” என்று அவசரப்படுத்தி, ஒரு கட்டிப் பிடிப்பு , ஒரு குளோசப்பில் சமாதானப்படுத்தியது அநியாயம் .
ஒரு பெண் இயக்குனராக இருந்து கொண்டு அந்த இடத்தில், கார்த்தியிடம் சுபா கேரக்டரை நறுக்கென்று நாலு கேள்வியாவது கேட்கவைக்க வேணாமா உஷா கிருஷ்ணன் ?
இப்படி சில திரைக்கதையில் சில புற முதுகு காட்டல்கள் இருந்தாலும் இருந்தாலும் ,
கிராமிய மணம், அண்ணன் தம்பி பாசம் , ஃபிரஷ்ஷான முகங்கள், சென்டிமெண்டில் கலக்கி ஊற்றிய காமெடி இவற்றால் ஊடுருவுகிறது படம் .
ராஜா மந்திரி …. குறு நில ஆட்சி !