ஹீரோ சினிமாஸ் சார்பில் சி மணிகண்டன் வழங்க,
அஜித் நடித்துப் மாபெரும் வெற்றி பெற்று விவாதங்களையும் கிளப்பிய சிட்டிசன், பரபரப்பாப் பேசப்பட்ட ஏ பி சிடி ஆகிய படங்களுக்குப் பிறகு ஷரவணன் சுப்பையா மீண்டும் இயக்கி இருக்கும் படம் …. படத்தின் பெயரும் இதற்குள்ளேயே சொல்லப்பட்டு விட்டது… எஸ் .. மீண்டும் . !
படத்தில் கதிரவன் கதாநாயகனாக நடிக்கிறார் . இரண்டாவது நாயகனாக சரவணன் சுப்பையாவே நடிக்கிறார் .
அனகா என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர் ஆகியா இயக்குனர்களும் நடிக்கிறார்கள்.
முக்கியமான கதாபாத்திரங்களில் பிரணவ் ராயன், யார் கண்ணன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, கலைவாணி, துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள் .
இவர்கள் தவிர மிக வித்தியாசமான பாத்திரங்களில் சுபா பாண்டியன் , அனுராதா நாகராஜன் ஆகிய இருவரை இந்தப் படத்தில் அறிமுகப் படுத்துகிறார் ஷரவணன் சுப்பையா .
இவர்களில் அனுராதா நடிக்க அழைத்தபோது சினிமா ஷூட்டிங் எப்படி இருக்கும் என்று கேட்டவராம். “அதனாலோ என்னவோ ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். . அதே போல சுபாவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்” என்கிறார் ஷரவணன் சுப்பையா.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து படத்தைப் பாராட்டி சிலாகித்துப் பேசினார் . ஷரவணன் சுப்பையாவின் கதை சொல்லும் திறமையைக் கொண்டாடினார் . படத்தின் சிறப்புகளை பேசி விட்டு , ”இந்தப் படம் ஷரவணன் சுப்பையாவுக்கு பல வெற்றிக் கதவுகளைத் திறக்கும்” என்று உறுதி கூறினார் .
பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுப்பிரமணிய சிவா, ஸ்டான்லி, கேபிள் சங்கர் ஆகியோரும் ஷரவணன் சுப்பையாவின் திறமைகளை உழைப்பை சினிமா மீதான நேசத்தை மனதாரப் பாராட்டினார்கள் .
கதிரவன் ” இந்தப் படம் என்னை அடுத்த கட்ட வெற்றிகளுக்குக் கொண்டு போகும். காரணம் ஷரவணன் சுப்பையா சார் தான்” என்றார் .
விரிவாகப் பேசிய இயக்குனர் சரவணன் சுப்பையா, ” இரண்டு பேரோடு வாழ வேண்டிய சூழலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த மீண்டும் .
ஆனால் ஆபாசப் படம் இல்லை . பெண்ணியம் , மனிதம் குறித்த கேள்விகளை எழுப்பி உறவு சிக்கல்களை உரசிப் பார்க்கும் படம் இது .
அஜித் நடித்த சிட்டிசன் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்தேன். ஏ பி சி டி படத்தை அதை வித குறைவான பட்ஜெட்டில் எடுத்தேன் . இது இன்னும் குறைவான பட்ஜெட் தான் . ஆனால் இது மிகப் பெரிய படம் . காரணம் படத்தின் பேசு பொருள் .
அதற்கு ஏற்ற குழு எனக்கு அமைந்தது .
கவிப் பேரரசு வைரமுத்துவின் பாடல்கள் படத்துக்குப் பெரும்பலம் . ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக வந்துள்ளது.எடிட்டர் ராஜா முகமதுவின் படத் தொகுப்பு எனக்கு சிறப்பான துணை .
மிகுந்த புகழும் அனுபவமும் கொண்ட சூப்பர் சுப்பராயன் இந்தப் படத்துக்கு சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார் . மிக ரசித்துப் பாராட்டிப் பணி செய்தார்.
என் இயக்குனர் நண்பர்கள் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தனர். ராதிகாவின் நடனம் சிறப்பாக வந்துள்ளது .
அனுராதா , சுபா என்ற இருவரை — சினிமா பற்றி எதுவும் தெரியாத- ஐ டி மற்றும் நிர்வாக அலுவலில் இருந்த இரண்டு பெண்களும் மிகச் சிறப்பாக நடித்து அசத்தினார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது .
எல்லோரையும் சிந்திக்க வைக்கிற விவாதிக்க வைக்கிற நல்ல படமாக இது அமையும் ” என்றார் .
மீண்டும் மூலம் மீண்டும் வெல்லுங்கள் .. ஷரவணன் சுப்பையா .
