சிம்புவின் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மூன்று பிளஸ் ஆண்டுகள் ஆகிவிட்டன
— என்ற நீண்ட இடைவெளியை உடைத்து, வாலு படத்தின் சக்சஸ் மீட்டில் தன் அப்பா டி.ராஜேந்தருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், இப்போது எஸ் டி ஆர் ஆகிவிட்ட சிம்பு . !
நிறைந்த தாடி வெறிக்கும் கண்கள் என்று தெறிப்பாக இருந்தார் .
வாலு படத்துக்கு நடிகர் விஜய் மற்றும் அவரது புலி படத் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், விஜய் படங்களின் விநியோகஸ்தர் காஸ்மோஸ் சிவகுமார் ஆகியோர் உதவிய விதத்தை மீண்டும் ஒரு முறை விளக்கி நன்றி சொல்லி ராஜேந்தர் அமர ,
” வாலு படத்தின் வெற்றிக்கு எஸ் டி ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் காரணம் . படம் தள்ளிப் போய் நான் மனம் உடைந்த போது கூட பெரிய ஆறுதலாக எனக்கு எஸ் டி ஆர் இருந்தார் ” என்று வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் நெகிழ்வாகப் பேச ..
அடுத்து மைக்கை பிடித்தார் எஸ் டி ஆர் .
” இதுவரை என் படங்கள் வராமல் போனதற்கும் ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் நானே காரணம் என்று கூறிக் கொள்கிறேன் . நான் மற்ற யாரையும் குறை சொல்லப் போவதில்லை . இதுவரை நடந்த சம்பவங்கள் எனக்கு ஒரு பக்குவத்தைக் கொடுத்து இருக்கிறது . இமயமலைக்கே ஒரு முறை போய் வந்து விட்டேன் . மனிதன் கையில் எதுவும் இல்லை எல்லாம் இறைவன் கையில்தான் என்பதையும் புரிந்து கொண்டேன் .
எனது படங்களில் இது நம்ம ஆளு முடிந்து விட்டது . வேட்டை மன்னன் அறுபது சதவீதம் முடிந்து விட்டது . கவுதம் மேனன் இயக்கும் படமும் செல்வராகவன் இயக்கும் படமும் முக்கால்வாசி முடிந்து விட்டது . இனி வருடம் இரண்டு அல்லது மூன்று படம் நடிப்பேன் .
கல்யாணம் பற்றி இப்போது யோசனை இல்லை . விஜய் அண்ணன் எனக்கு உதவினார். அஜித் சார் என் அப்பாவுக்கு போன் செய்து ‘சிம்பு எல்லா பிரச்னைகளையும் மீறி ஜெயித்து வருவான் . கவலைப்படாதீர்கள்’என்று ஆறுதல் கூறினார்” என்று பல விசயங்களையும் பற்றி மனம் திறந்து பேசினார் .
அந்த சந்திப்பில் சிம்புவிடம் நான் சில கேள்விகள் கேட்டேன்
“மூன்று ஆண்டுகள் உங்கள் படம் எதுவுமே வராத நிலையிலும் உங்கள் படம் ரிலீசான முதல் நாள் அன்று உங்க ரசிகர்கள் கட்டி ஏறியதைப் பார்த்தபோது எப்படி இருந்தது ?உங்கள் ரசிகர்கள் பற்றி என்ன நினைத்தீர்கள்?”
” மூன்று வருடம் படம் இல்லாத நிலையில் எந்த நடிகனும் முழுசாக மறக்கடிக்கப்படும் சூழ்நிலைதான் இப்போ இருக்கு . ஆனா நாம அப்படி ஒரு இடைவெளி விட்டும் நம்மை நேசிக்க இவ்வளவு பேர் இருக்கிறார்களே என்று தோன்றியது .
ஒரு மோசமான நிலைமையில் கூட தமிழ் சினிமாவில் என் இடம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . என் ரசிகர்களின் அன்பு எவ்வளவு பெரியது என்பது புரிந்தது . அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தனும் . அவங்களை தொடர்ந்து சந்தோஷப் படுத்தணும்னு தோணுச்சு. “
“அவங்க நம்பிக்கையை காப்பாத்துவீங்கன்னு நம்பலாமா ?”
“என் கையில ஒன்னும் இல்ல சார் எல்லாம் கடவுள் கைலதான் இருக்கு “
“இது நீங்களும் உங்க ரசிகர்களும் சம்மந்தப்பட்ட விசயம்தானே ?”
“ஆனா அதுக்கும் கூட கடவுள் கருணை வேணும் சார் “
“வாலு தயாரிப்பாளர் சக்ரவர்த்திக்கு ஏறபட்ட பல பிரச்னைகளால்தான் வாலு இப்படி பெரும் சிக்கலில் சிக்கி இப்போதுதான் கரை ஏறியது . நீங்கள் நடிக்கும் வேட்டை மன்னன் படமும் அவர் தயாரிக்கும் படம்தான் . அந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் அதிகம் ஆகாதா ?”
” வேட்டை மன்னன் படம்தான் முதலில் எடுக்க ஆரம்பித்தோம் . அவருக்கு ஏற்பட்ட பணப் பிரச்னையை தீர்க்கத்தான் வாலு படத்தையும் அவரே தயாரிக்க நான் நடிக்க ஆரம்பித்தேன் . இப்போது வாலு படம் நன்றாக ஓடுவது அவருக்கும் தெரியும் இல்லையா ? எனவே வேட்டை மன்னனை அவர் சரியாக கொண்டு வருவார் “
“வாலு படத்தில் தாறுமாறு பாட்டில் எம்ஜி ஆர் கெட்டப்பில் ஆடுவது நீங்கள்தான் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லையே . அதில் என்ன கிரேஸ் இருக்க முடியும் ? ஒருவேளை கண்ணாடியை கழட்டி விட்டு ஆடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா ?”
“ஆக்சுவலா நீங்க சொல்ற விசயத்தை நானும் நினைச்சேன் . ஆனா ஆடுவது யார் என்பத்தும் ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னுதான் கண்ணாடி போட்டுட்டே பண்ணினேன் . கிட்டத்தட்ட நான் எம் ஜி ஆர் சார் கெட்டப்பில் ஆடி முடிக்கும்போதுதான் ஆடியது நான் என்பதே தெரியும். அதுவும் ஒரு வித திரில் என்றுதான் அப்படியே செய்தேன் “என்றார் .
நிறைவாக மீண்டும் பேசியபோது “எனக்கு எல்லா பத்திரிக்கையாளர்களுடனும் நீண்ட நட்பு உண்டு. அந்த நட்பை இப்போது என் மகன் கையில் கொடுக்கிறேன் . இனி அவனும் எல்லோருடனும் நெருங்கிய நட்போடு பழகுவான் ” என்றார் டி.ஆர்.
நல்லது சார் !