பூமிகா இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் எம் ஜெரினா பேகம் தயாரிக்க, ஜெய் ஆனந்த், ரஹானா , ஜி எம் குமார், பசங்க சிவகுமார், மனோபாலா ஆகியோர் நடிக்க,
நிலம் கதை வசனம் எழுத , கே. ஜி. வீரமணி என்பவர் இயக்கி இருக்கும் படம் ‘திறப்பு விழா’ . திறப்பு …. விழா காணுமா? பார்க்கலாம் .
வறண்ட நிலம் , நலிவடைந்த விவசாயம் , போராடும் மக்கள் நிறைந்த அந்த கிராமத்திலும் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட, கிடைக்கிற கொஞ்ச வருமானத்தையும் மதுவில் கரைக்கிறார்கள் ஆண்கள் .
விளைவாக பெண்களும் குழந்தைகளும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள் .
அந்த கிராமத்து மதுக்கடையில்தான் வேலை செய்ய வேண்டும் என்று பணி மாற்றல் வாங்கிக் கொண்டு வருகிறான் ஓர் இளைஞன் ( ஜெய் ஆனந்த்)
மதுக்கடையில் மது விற்கும்போது ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து இருபது என்று அதிகம் வாங்குகிறான் . அந்த காசை அந்தந்த வீட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கிறான் .
அளவுக்கு மீறி குடிப்பவர்களுக்கு மது தர மறுக்கிறான் . மாட்டை விற்று குடிக்க வந்தவரை திட்டி, மாட்டைக் கொண்டு போய் அந்த வீட்டுப் பெண்மணியிடம் ஒப்படைக்கிறான். அவர்கள் அவனை வாழ்த்துகின்றனர்
அதே ஊரைச் சேர்ந்த பெரியவர் ( ஜி எம் குமார்) மகளுக்கு (ரைஹானா) அந்த இளைஞன் மீது காதல் . ஆரம்பத்தில் அவன் அதை மறுக்கிறான்.
மதுக் கடையை ஒட்டிய பாரில் வசதியும் ஆள் பலம் அதிகார பலம் படைத்த சிலர் கள்ளச் சாராயம் விற்கின்றனர் . அதைத் தட்டிக் கேட்கும் நாயகனை அடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கின்றனர் .
போலீசும் அவர்களுக்கு உடந்தை . எனினும் அரசு ஊழியன் என்பதால் அவன் மீட்கப் படுகிறான் .
இந்த நிலையில் மகளின் காதல் அறிந்த பெரியவர் தன் மகளை கல்யாணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்க, அவனும் சம்மதிக்க,
அந்த சந்தோசத்தில் மது குடிக்கும் பெரியவரும் அவரது நண்பர்களும் கள்ளச் சாராயம் குடித்து பலியாகின்றனர் .
ஊரே சேர்ந்து நாயகன்தான் கள்ளச் சாராயம் கொடுத்து கொன்று , ஊரையே அனாதையாக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறது . சட்டம் அவனை விட்டாலும் மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை .
அப்போதுதான் அவன் யாரென்று சொல்கிறான்.
இருபது வருடத்துக்கு முன்பு அதே ஊரில் மூலிகை மருத்துவம் மூலம் பல உயிர்களை இலவசமாக காப்பாற்றிய அம்மாவுக்கும் குடிகார அப்பாவுக்கும் பிள்ளையாக , ஓர் அக்காவுக்கு தம்பியாக பிறந்தவன் அவன்.
அக்காவைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் நிச்சயத்துக்குப் பிறகு, ஐந்து பவுன் அதிகம் கேட்கின்றனர் . பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்த நிலையில்,
அப்பாவும் அம்மாவும் மனசைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு காரியம் செய்கின்றனர் .
வீட்டில் உள்ள விதை நெல் களஞ்சியத்தை மொத்தமாகக் காலி செய்து அந்த நெல்லை விற்று கல்யாணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர் .
அந்த நெல்லை விற்றுவிட்டு பணத்தோடு வரும் வழியில் மதுக்கடைக்குப் போன அப்பா குடிபோதையில் பணத்தைப் பறிகொடுக்கிறார் .
போதை தெளிந்து நிலைமை உணர்ந்த அவர் விஷம் குடித்து சாக, அக்கா தூக்குப் போட்டுக் கொண்டு சாக, அம்மா அதிர்ச்சியில் சாக ,
அந்த வீட்டில் தப்பிய சிறுவன்தான் இந்த நாயகன் என்பது சொல்லப்படுகிறது . உண்மை உணரும் ஊர் மக்கள் அவனது தலைமையில் தங்கள் ஊருக்கு சாரயக்கடை வேண்டாம் என்று போராட
பார் நடத்துவோர் முதலில் அதை கலைக்க முயன்று முடியாமல் போக,
அடுத்து வருமானம் போகிறதே என்று அரசும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது . போலீசை விட்டு மக்களை அடித்து விரட்டுகிறது .
மதுக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ் , மதுக்கடை வேண்டாம் என்று போராடும் ஆண் பெண் அனைவரையும் அடித்து உதைத்துக் கொடுமை செய்கிறது .
இதை அடுத்து நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சியான நெகிழ்வான சம்பவமும் அதன் விளைவுமே இந்தப் படம் .
இன்று தமிழகம் எங்கும் மக்கள் தன்னெழுச்சியாக மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் இது துவங்குவதற்கு முன்பே,
இப்படி ஒரு விசயத்தை கதையாக எழுதிய கதை வசனகர்த்தா நிலம் பாராட்டுக்குரியவர்
விதை நெல்லை விற்றுக் குடித்ததால் குடும்பமே அழியும் அந்த ஃபிளாஷ் பேக் மனம் கணக்க வைக்கிறது .
வசந்த ரமேஷ் இசையில் பாடல்கள் ஒகே . அதில் ‘இந்தா இந்தா வாங்கிக்கய்யா ஜாதகத்த..’ பாடல் இனிமை .
கதை வசன கர்த்தா நிலம் எழுதி, தஞ்சை செல்வி பாடிய பருத்தி பூப் பூக்கும் பாடலின் வரிகள், அது விவரிக்கும் காட்சிப் படிமம் தஞ்சை செல்வியின் குரல் எல்லாம் மனசை ஊடுருவிப் பாயும் அற்புதம் .
இந்தப் பாடலை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் .
ஹீரோவாக சங்கர் ஜெய் ஆனந்த் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் . இயல்பாக நடித்துள்ளார் .
நாயகி ரஹானா நன்றாக நடிக்கிறார் . ஆனால் இன்னும் சிறுமித்தனம் மாறாத முகத்தோடு (கிளைமாக்சுக்கு இது உதவினாலும் கூட ) ,
அவர்தொப்புள் தெரிய இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடுவதை பார்க்கும்போதுதான் தர்ம சங்கடமா இருக்கு
பிளஷ்பேக்கில் பசங்க சிவகுமார் பண்பட்ட நடிப்பை தந்துள்ளார் . பணம் தொலைந்ததை அறிந்த உடன் அவர் காட்டும் முகபாவங்கள் மிக சிறப்பானவை .
சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கிராமத்து மக்களையே உலவ விட்டது சிறப்பு . ஆனால் அவர்களை இன்னும் கொஞ்சம் பொருத்தமாக நடிக்க வைத்து இருக்கலாம்
படத்தின் பிளாஷ் பேக்மற்றும் அதற்கு பின்னால் வரும் காட்சிகளை எடுப்பதில் காட்டிய சிரத்தையை ஆரம்பம் முதலே காட்டி இருக்கலாம் .
இது தவிர தொழில்நுட்ப நேர்த்தியும் குறைவுதான்
இப்படி சில குறைகள் இல்லாமல் இல்லை .
ஆனால் படம் சொல்லி இருக்கும் விஷயம் அபாரமானது. அற்புதமானது . இன்று நம் மக்களுக்கு தேவையானது . சமூகத்தின் நிஜ பிரதிபலிப்பு .
பளபளப்பான தாளில் அச்சிட்டால் என்ன ? சாணிப் பேப்பரில் அச்சிட்டால் என்ன ? திருக்குறள் திருக்குறள்தானே
கிளைமாக்ஸ் அதிர்ச்சியில் உறைய வைத்து உருக வைக்கிறது
திறப்பு விழா … மக்கள் ஆதரிக்க வேண்டிய படம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————————
நிலம், பசங்க சிவகுமார் , எம்.ஜெரினா பேகம்










