ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன் தயாரித்து இயக்க, நிவின் கார்த்திக் , ஜான் விஜய் , மியாஸ்ரீ நடிப்பில் கலையரசன் இசையில் கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் படம் .
ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர் தூனேரி. அந்த ஊரில் நடக்கும் கதை . இவர்கள் தூநேரி என்று பெயர் வைத்துள்ளனர் .
சென்னையில் பணி புரியும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய மகளின் பள்ளித் தோழியான சிறுமி ஒருத்தி, தனது சிற்றன்னையால் ( அப்பாவின் இரண்டாம் மனைவி) கொடுமைப் படுத்தப்படுகிறாள் .
இதை அறிந்த போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவிடம் சொல்ல, அந்த சிற்றன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து கலாட்டா செய்து விட்டுப் போகிறாள்.
இந்த நிலையில் அதிகாரிக்கு ஊட்டி அருகில் உள்ள தூனேரி என்ற ஊருக்கு மாற்றல் ஆகிறது . மனைவி மகள் மகனுடன் தூனேரிக்கு வரும் அதிகாரி கல்லறை பக்கத்தில் உள்ள வீட்டில் தங்குகிறார் .
அந்த ஊரில் காவல்காரனாக இருந்து பின்னர் மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு , ஒரு நிலையில் கொல்லப்பட்ட கருப்பசாமி என்பவன் துர் ஆன்மாவாக உலவி வருவதாக ஊர் நம்புகிறது .
ஊர் மக்களால் வளர்க்கப்படும் – கருப்பசாமியின் மகன் போலீஸ் அதிகாரியின் பிள்ளைகளுக்கு நண்பன் ஆகிறான் .
போலீஸ் அதிகாரி தங்கி இருக்கும் வீட்டில் ஏதோ ஒரு பேய் தனது வேலையை ஆரம்பிக்கிறது. ஒரு நிலையில் அது போலீஸ் அதிகாரியின் மனைவியையும் பிடிக்கிறது .
யார் அந்த பேய் , அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த தூநேரி.
வித்தியாசமான பெயர்.
படம் துவங்கிய ஓரிரு காட்சிகளுகுள்ளேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதை.
பிறகு தூநேரிக்கு வந்து கருப்பசாமியின் கதை சொல்லும்போது பரபரப்பு இன்னும் ஏறுகிறது .
அட்டகாசமான லொக்கேஷன், அழகிய காடுகள், அமானுஷ்ய மர்மம் என்று பின்புலம் சிறப்பாக இருக்கிறது. ஏரியல் ஷாட்களில் ஒளிப்பதிவு ஓஹோ.
குழந்தைகளை வைத்து பேய் திரில்லர் என்று முயன்று இருக்கிறார்கள் . சென்னைச் சம்பவங்களை தூநேரியோடு இணைத்த விதம் சிறப்பு
வரைகலை காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
நாயகன் , நாயகி பொருத்தம் . வில்லி மிரட்டுகிறார் . கருப்பசாமியாக ஜான் விஜய் ஈர்க்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை குழம்புகிறது . அது மட்டும் சரியாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
