கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம் எஸ் பாஸ்கர் , வேல ராம மூர்த்தி நடிப்பில் ,
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் துப்பாக்கி முனை .நேர் முனையா ? மழுங்கலா ? பேசலாம்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரி ஒருவரின் (விக்ரம் பிரபு|) அம்மாவுக்கு (கல்யாணி) மகனின் கொலைப் பணி பிடிக்காமல் விலகிப் போய் விடுகிறார் .
காதலியின் அப்பா ( ஆடுகளம் நரேன்) வேறு வேலைக்குப் போனால்தான் மகளைக் கொடுப்பேன் என்று கூற , காதலியும் ( ஹன்சிகா) விலகிப் போகிறார் ..
என்கவுண்டர் பெயரில் கொடூரமாக நடந்து கொள்வதாக மேல் அதிகாரிகள் குற்றம் சாட்ட வேலையும் போகிறது .
ஆனாலும், கோர்ட்டில் தப்பி விடுவார்கள் என்று தெரியும் குற்றவாளிகளை என்கவுண்டர் பெயரில் போட்டுத் தள்ள
இவரை , மற்ற போலீஸ் அதிகாரிகளே பயன்படுத்த , என்கவுண்டர்கள் தொடர்கின்றன .
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட

ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியை என்கவுண்டர் செய்யும் வேலை வருகிறது .
அதற்காக ராமேஸ்வரம் வந்து சம்மந்தப்பட்ட நபரை போட்டுத் தள்ள நினைக்கையில் , மேற்படி பெண்ணை கொன்றது அந்த தீவிரவாதி அல்ல..
உள்ளூர் தாதா ( வேல ராம மூர்த்தி) ஒருவரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் என்பது, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ( எம் எஸ் பாஸ்கர்) ,மூலமே தெரிகிறது .
நிஜமான குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் அதிகாரி முயல , அப்புறம் என்ன நடந்தது .. பிரிந்த உறவுகள் என்ன ஆயின என்பதே இந்த துப்பாக்கி முனை

சட்டம் தரும் வசதியில் எதற்கெடுத்தாலும் குற்றவாளிகளை போட்டுத் தள்ளுவதும் கொலைதான் என்பதையும் ,
தீவிரவாதிகள் என்று அறியப் படுபவர்கள் பலர் நல்லவர்கள் , நிஜமான தீவிரவாதிகள் பலம் பொருந்திய மனிதர்களாக பொது உலகில் இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வந்திருக்கும் படம் .
அதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் .
எல் வி கணேஷின் பின்னணி இசை , ராசாமதியின் ஒளிப்பதிவு இரண்டும் மிக சிறப்பு . கதைக்கு பொருத்தமான பணி !

ராமேஸ்வரம் லொக்கேஷன்கள் அருமை .
ஹீரோதான் எல்லா காட்சிகளிலும் இருக்க வேண்டும் என்று இல்லாமல் , எம் எஸ் பாஸ்கருக்கு திரைக்கதையில் கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம் சிறப்பு .
கிளைமாக்ஸ் பகுதியில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன .
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக முறுக்கு காட்டுகிறார் விக்ரம் பிரபு .
பிரதமர் அலுவலகத்தில் அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பெண்ணாக ஹன்சிகா கெத்து .

எம் எஸ் பாஸ்கர் நடிக்கிறார் . வேல ராம மூர்த்தி இருக்கிறார் .
மாவோயிஸ்டாக நடித்துள்ளவர் , பெண்ணைக் கற்பழிக்கும் பையன்களாக நடித்து உள்ளவர்கள் கவனிக்க வைக்கிறார்கள் .
பெண்ணைக் கெடுத்தவர்கள் யார் என்பதை சொல்லி விட்டு பின்னர் அந்த தெரிந்த கதையை விலாவாரியாக சொல்வதும் ,
இரண்டாம் பகுதியில் யூகிக்க முடிகிற காட்சிகளும் போலீஸ் கதையில் வருகிற லாஜிக் மீறல்களும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும் .
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் மன உணர்வுகளுக்கு ,

இன்னும் அழுத்தம் கொடுத்து இருந்தால் சொல்ல வரும் கதை அதிகம் உணரப்பட்டிருக்கும் .
ஆனாலும் பெண் பாலியல் பலாத்கார பின்னணியில் என்கவுன்டர போலீஸ் அதிகாரிகளின் அராஜகத்தை பிணைத்து செய்யப்பட்டு இருக்கும் கதையால் கவனிக்க வைக்கிறது படம்