துப்பறிவாளன் @ விமர்சனம்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துக் நாயகனாக நடிக்க, பிரசன்னா, பாக்யராஜ், வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல் நடிப்பில்,

 மிஷ்கின் இயக்கி இருக்கும் படம் துப்பறிவாளன் . இவன் அறிவாளனா ? பார்க்கலாம் .

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் பெயரைக் கொன்ற துப்பறிவாளன் அவன் (விஷால்) .
 
காசுக்காக வேலைகளை எடுத்துக் கொள்ளாமல் நியாய தர்மம் பார்த்து எடுப்பவன் . 
 
‘தன் மகளைக் காணோம் ; கண்டு பிடித்துத் தரவேண்டும்’ என்று வந்த ஒரு பணக்காரரை பார்த்த  சில நொடிகளிலேயே,  
 
மகள் கிடைத்தால்  டிரைவரோடு ஓடிப்போன அவளை  இவரே ஆணவக் கொலை செய்து விடுவார்’  என்பது புரிந்து ,
 
இருபத்தைந்து லட்ச ரூபாய் சம்பளத்தையும் மறுத்து , அந்த வேலையைப் புறக்கணிக்கும் அளவுக்கு நல்லவன் . 
 
தொழில் முறையிலும் தனிப்பட்ட முறையிலும் அவனுக்கு நெருங்கிய நண்பன் மனோ . 
 
ஒரு நாள் ஒரு சிறுவன் தன் நாய்க்குட்டியைக் கொன்றவனை  கண்டுபிடித்துத் தரச் சொல்லி , சம்பளமாக எண்ணூற்று சொச்ச ரூபாய் சில்லறைக் காசோடு வருகிறான். 
 
கொல்லப்பட்ட நாய்க்குட்டியின் வயிற்றில் ஒரு உடைந்த துப்பாகிக் குண்டு இருப்பதே சிறுவனின் சந்தேகத்துக்குக் காரணம் .  .
 
சம்மந்தப்பட்ட பங்களாவின் கடற்கரை ஓர மணற்பரப்பு மற்றும் காம்பவுண்டுச் சுவரை ஆராய்ந்ததில் ,
 
வேறு ஏதோ இடத்தில் பட்டுத் தெறித்த குண்டின் ஒரு பகுதியே நாயின் உடலுக்குள் இருப்பது தெரிய வருகிறது . 
 
இதற்கிடையே சாலையடி சுரங்கப் பாதைகளில்  அளவோடு பிக்பாக்கெட் அடித்து அதில் பாதி காசை எடுத்துக் கொண்டு,
 
 மீதிக்காசை அடித்தவன் பையிலேயே வைத்து விடும் தந்திரத்துடன் , நெட் வொர்க் அமைத்து,
 
 வித்தியாசமாக  திருடும் மல்லிகா (அனு இமானுவேல்)  என்ற பெண்ணைக் கையும்  களவுமாக பிடிக்கிறான் கணியன் .
 
 
அவளது மாமாவின் ”விலைமாது ஆகறியா? பிக்பாக்கெட் அடிக்கறியா?”‘ என்ற  நிபந்தனையின் பொருட்டே, அவள்  பிக் பாக்கெட் அடிப்பது தெரிய வருகிறது . 
 
அதே நேரம் அவளது பிக் பாக்கெட் அடிக்கும் திறமையையும் டைமிங் சென்சையும் வியந்து  அவளை வேலைக்கு வர அழைக்கிறான் .
 
வருபவளை வீட்டிலேயே வேலைக்கு வைத்துக் கொள்கிறான். அவள் அவனை விரும்புகிறாள் . 
 
இன்னொரு பக்கம் , ஒரு சிறு இன்ஜெக்டரில் மைக்ரோ புல்லட் வகை குண்டை ஆர்செனிக் விஷம் கலந்து  மெழுகு வைத்து,
 
 போகிற போக்கில்  மற்றவர் மீது  சும்மா எறும்பு கடிக்கிற மாதிரியான வலி மட்டும் தருகிற மாதிரி சுட்டு , 
 
விஷம் பரவி கிட்னி , கல்லீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளையும் பாதித்து மரணம் தரும் வகையில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட சிலர் கொல்லப்படுகிறார்கள் . 
 
கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ வின் தொடர் விசாரணையால் செயற்கை மின்னல் உருவாக்கி ஒரு தொழில் அதிபர் கொல்லப்பட்டது தெரிகிறது . 
 
அதன் தொடர்ச்சியாக நைட்ரஸ் ஆக்சைடு மூலம் கார் ஓட்டும்போது சிரிப்பூட்டி ஒரு தொழில் அதிபர் கொல்லப்படுகிறார் . 
 
இந்த கொலைகளின் பின்னணியில் ஒரு முதியவர் (கே. பாக்யராஜ்) , ஒரு பெண் (ஆண்ட்ரியா) இவர்களை இயக்கும் ஒரு கொடூரன் (வினய் )இருப்பது தெரிய வருகிறது . 
 
எல்லாவற்றுக்கும்  பின்னணி பிசினஸ் போட்டி, அயல் நாட்டுப் பணம் .. மில்லியன் , பில்லியன் … , தங்கக் கடத்தல் !
 
கணியனின் தொடர் விசாரணைகளால் கொலையாளிகள் குழுவின் ஆட்கள் குறைய , ஒரு நிலையில் கொந்தளிக்கும் கொடூரன் மல்லிகாவைக் கொல்கிறான். 
 
வெகுண்டு எழும் துப்பறிவாளனும் அவன் நண்பனும் போலீசும் என்ன செய்தார்கள் என்பதே இந்த துப்பறிவாளன் . 
 
வழக்கம் போல மேக்கிங்கில் அஸ்ஸ்ஸ்ஸ்சத்தி இருக்கிறார் மிஷ்கின் . 
 
அற்புதமான பிரேம்கள் , ரசிக்கத் தகுந்த கோணங்கள், ஒளிப்பிரவாகம் , இருள் ஆட்சி , வண்ணச் செறிவு,

 
எல்லாம் நிறைந்த காட்சிகள்,  கண்களைக் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன . சபாஷ் மிஷ்கின் . 
 
இதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் பங்களிப்பும் அளப்பரியது . 
 
அரோல் கரோலி இசையில் பாடல்களுக்கு வேலை கம்மி . ஆனால் பின்னணி இசை காட்சிகளுக்கு உணர்வு ரீதியான பலம் சேர்க்கிறது .
 
குறிப்பாக தீம் மியூசிக் ஆக வரும் அந்த வயலின்  கட் நோட் .. ஜங் ஜங் ஜங்….ஜங் ஜங் ஜங்… ஜங் ஜங் ஜங்…. ஜங் ஜங் …..” பிரம்மாதம் 
 
அமரனின் கலை இயக்கம் படத்துக்கு மேட்டிமையான ஒரு இமேஜ் தருகிறது . சபாஷ் 
 
கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளை அவ்வளவு நேர்த்தியாக படமாக்கி இருகிறார்கள் . 
 
கணியன் கதாபாத்திரத்தில் உற்சாகமாக நடித்துள்ளார் விஷால். உடல்  மொழி, குரல் மொழி என்று பலவற்றில் மிக சிரத்தை எடுத்து உழைத்து இருக்கிறார் .
 
முதுகுக்குப் பின்னால் கேமரா தொடரும்போது கூட கேரக்டருக்கு ஏற்ற உடல் மொழியோடு நடப்பது ரசனை . 
 
சைனீஸ் ரெஸ்டாரன்ட் சண்டைக் காட்சியில் பின்னிப் பெடல் எடுக்கிறார் . 
 
தனக்காக மல்லிகா கொல்லப்பட்ட நிலையில் நடிப்பிலும் கவனம் கவர்கிறார் 
 
பிரசன்னா , புதுமுகம் அனு இமானுவேல் ஒகே . 
 
கிளைமாக்ஸ் அக்ஷன் காட்சிகள் மிக நேர்த்தியாக அட்டகாசமான படமாக்கப்பட்டுள்ளன . விஷால் , பிரசன்னா உட்பட நடிகர்களாகட்டும் ….
 
மிஸ்கின் , கார்த்திக் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் காசி உட்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்களாகட்டும் ….
 
உழைப்பும் திறமையும் ஒன்றாக  ஜொலிக்கும் ஏரியா அது . பாராட்டுகள் . 
 
எல்லாம் சரி .. திரைக்கதைதான் குப்புறப் படுத்துக் கொள்கிறது . 
 
செயற்கை மின்னல் விவகாரம் எல்லாம் இருபது வருஷம் முன்னாடியே பாக்கெட் நாவல்களில் நூறு முறை வந்து விட்டது .  
 
மின்னலின் சக்தியை ஒரு கேப்சூல் மாத்திரையில் சேகரித்து துப்பாக்கியால் சுட்டு காட்டியே  எரித்த கதையை எல்லாம், 
 
உலகம் சுற்றும் வாலிபனில் அப்பவே எம் ஜி ஆர் டைரக்ட் செய்து விட்டார் 
 
எறும்பு கடிக்கிற மாதிரி சுருக்கென்று குத்தி (சரி .. சுட்டு) கொல்வது எல்லாம் 32 வருஷம் முன்பு கமல் ஊர்வசி நடிப்பில்,
 
 மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய அந்த ஒரு நிமிடம் படத்திலேயே வந்து விட்டது . 
 
துப்பறிவாளன் வேலை என்பது எதிராளியை கூர்ந்து கவனிப்பதில் துவங்குகிறது . அவனுக்கு கிடைக்கும் தகவல்களும்,
 
 காரணகாரியங்களின் அடிப்படையில்தான் அமையும் . அப்படி இருக்க , யார் வந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு , ஏதோ வெத்தலையில் மை போட்டுப் பார்க்கிறவன் கணக்காக,
 
 கணியன் தகவல்களை கொட்டுவது எல்லாம் வேறு பாணிப் படங்களுக்கு ஹீரோயிசமாக தெரியலாம் . ஆனால் துப்பறியும் படத்துக்கு அல்ல. 
 
ஒலியை விட ஒளி வேகமாக இலக்கை அடையும் என்பதை கண்டுபிடிக்க ஒரு இன்டர்வல் பாயிண்டா ?
 
“அஞ்சாவது பையனுக்குக் கூட இது தெரியும் . உங்களுக்கு தெரியாதா” என்று மனோவை கணியன் கேட்டு விட்டால் அது சூப்பர் மேட்டர் ஆகி விடுமா ?
 
கணியன் பூங்குன்றன் ஆரம்பத்தில் சில காட்சிகளில் கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மென்டுக்காக துப்பறிவதோடு சரி . அதன் பின்னர்  எங்கே துப்பறிகிறான்?
 
ஒன்று போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் பெறுகிறான் . அல்லது போலீஸ் என்று பொய் சொல்லிக் கொண்டு பலரிடமும் விசாரணை செய்கிறான் . 
 
ஆக, கணியன் பூங்குன்றன் துப்பறிவாளனா? இல்லை விசாரணை அதிகாரியா ?
 
ஆரம்பத்தில் கடற்கரையில் புல்லட் சிதறலை கண்டு பிடிப்பது போல படத்தில் ஒரு பத்துக் காட்சி .. சரி, அட்லீஸ்ட் அஞ்சு காட்சி இருக்க வேண்டாமா ?
 
சாதரணமான சில ஆக்ஷன் படங்களில் வழக்கமான ஹீரோக்கள் துப்பறியும் அளவுக்குக் கூட , துப்பறிவாளன் என்று பெயர் வைத்த படத்தில் ஹீரோ செய்யாம இருந்தா எப்படி ?
 
துப்பறிவாளர்களுக்கு அடிப்படை தகுதியே நிதானம்தான் . துப்பறிவாளன் டென்ஷன் ஆகவே கூடாது என்பது இல்லைதான் .
 
அதுக்காக எப்போ பார்த்தாலும் டென்ஷனிலேயே இருப்பதும் , கிரீன் டீயை காண்டா மிருகம் மூத்திரம் , கழுதை மூத்திரம்,
 
 என்று  சொல்லிக் கொண்டே இருப்பதும் என்னவகையான கேரக்டரைசேஷன் ?
 
ஒரு பெண்ணின் டைமிங் சென்ஸ் திறமையைப்  பார்த்து வேலைக்கு வர சொன்ன கணியன் ,
 
ஏதோ ஒரு நிலையில் தனது துப்பறியும் வேலையில் அவளது திறமைக்கு ஏற்ற வேலை கொடுப்பான் என்று பார்த்தால்…
 
வேலை கேட்டு வந்த பெண்ணின் கையில் விளக்குமாற்றைக் கொடுத்து நடுஹாலில் தள்ளி விட்டுக் கதவை பூட்டிக் கொண்டு  வெளியே போகிறான் .
 
அந்த பிற்போக்குப் பீத்தரையும் அப்படியே படுத்துக் கொண்டு விளக்குமாற்றுக்குப் பேன் பார்த்தபடி வெட்கப்படுது . 
 

எப்போப் பார்த்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தோடு என்னடி வாடி போடி என்று டி போட்டுப் பேசும்போது எல்லாம்,

( இன்டிமசியை காட்டும் டி அல்ல அது !)  சிலுத்துப் பொய் நிக்குது . அடப் போங்கப்பா …. ! லவ்வாம் .. கருமம் கருமம் . 
பார்க்கிற எல்லோரையும் வில்லணும் அவன் ஆட்களும் அடிவயிற்றில் இடம்வலமாக அறுத்துக் கொல்வதும்….
 
பிரிட்ஜில் இருந்த பிணத்தை எடுத்து பாத்ரூமில் வைத்து எலக்ட்ரிக் ரம்பத்தால் வினய் கதாபாத்திரம் அறுக்கும்போது , ஆன்டிரியா கதாபாத்திரம் போய் காபி கொடுப்பதும் ,
 
முகம் முழுக்க ரத்தம் வழியும் நிலையில் வினய் அந்த காபியை குடிப்பதும் …  ஒன்னும் சொல்றதுக்கு இல்ல .   
 
பாக்யராஜ் , பிரசன்னா ,  எல்லோரையும் இப்படி வீணடித்து இருக்கத் தேவை இல்லை .
 
எனினும் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளில் எடுக்கப்பட அந்த கிளைமாக்ஸ் , அந்த நேர்த்தியாக படமாக்கல் , பஃர்பக்டான ஆக்ஷன் சீக்வன்ஸ் ,
 
வில்லனுக்கு பதில் சொல்லிக் கொண்டே மனோவுக்கு கணியன் பொருத்தமான வார்த்தைகளில் குளூ கொடுக்கும் லாவகம் , அங்கே விஷாலின் வசன பாவனை 
 
 ஆரம்பக் காட்சியில் ஆசைப்பட்டபடி ஏன் அங்கிள் என் நாயைக் கொன்னீங்க என்று வில்லனிடம் சிறுவன் கேட்கும் கவிதைத்தனம், அதற்கு வில்லன் சொல்லும் பரிதாப பதில்  
 
இவை எல்லாம் ரசனைக்குரியவை . 
 
துப்பறிவாளன் …..  தப்பறிவாளன் , அதாவது கிளைமாக்ஸ் காட்சியால் தப்பும் அறிவாளன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *