யார் இவன் @ விமர்சனம்

வைக்கிங் மீடியா ஆண்ட்  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி  தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், 

படகோட்டி , உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய டி . பிரகாஷ் ராவின் பேரனும் டி எல் வி பிரசாத்தின் மகனுமான டி.சத்யா ,

 எழுதி இயக்கும் படம் யார் இவன். எப்படி இருக்கிறான் இவன் . பார்க்கலாம் . 

சென்னை கபடி அணியின் கேப்டனான சத்யாவுக்கும் ( சச்சின்) பிரபல பணக்காரன் ராஜசேகரின் (பிரபு ) மகளுக்கும் (ஈஷா குப்தா) இடையிலான காதல் ,

கல்யாணத்தில் முடிந்து , தேன் நிலவுக்காக கோவாவுக்குப்  போன அன்றே  அவளை கொலை செய்ததாக கைதாகிறான் சத்யா. 

ரிமாண்டில் கோவாவில் உள்ள கடுமையான சிறையில் அடைக்கப்படுகிறான் . அங்கு உள்ள ஜெயிலர் சத்யாவை கொன்று விடக் காத்திருக்கிறான் .

காரணம் அவனது தம்பியான  கோவா கபடி அணியின் கேப்டனோடு சத்யா விளையாடிய கபடி ஆட்டத்தில் தம்பி இறந்து போகிறான் .

தம்பிக்கு இருந்த ஆஸ்துமா நோய் மரணத்துக்குக் காரணம் என்றாலும் , அவன் மரணத்துக்கு சச்சினே காரணம் என்பது ஜெயிலரின் வன்மம் 

வழக்கை விசாரணை செய்ய வரும் அசிஸ்டன்ட் கமிஷனரிடம்  (கிஷோர்) ராஜ  சேகரும் , கொலை செய்யப்பட பெண்ணின் தோழியும் (தன்யா பாலகிருஷ்ணன் ),

சத்யாதான் கொலைகாரன் என்று உறுதியாகக் கூறுகின்றனர் . 

இந்த நிலையில் ஜெயிலில் தனக்குப் பிடிக்காதவர்களை கபடி ஆட வைத்து அடித்துக் கொள்ளும் பாணியில் சத்யாவை கொல்ல ஜெயிலர் முயல ,

அவனை அசிஸ்டன்ட் கமிஷனர் காப்பாற்ற , ஒரு  நிலையில் அவரையே கொல்லப் பார்க்கிறான் சத்யா . 

அவன் மன நிலை பாதிக்கப்பட்டவன் என்கிறார் மனோதத்துவ நிபுணர் (பிரதாப் போத்தன்) . 

இடையில் சத்யா , தன் மனைவி போன்ற உருவம் கொண்ட கேத்தரின் என்ற பெண்ணை காதலித்ததாகவும் கமிஷனருக்கு தகவல் கிடைக்கிறது .

அசிஸ்டன்ட் கமிஷனரின் தீவிர விசாரணையில் ”நான் கொலைகாரன் இல்லை . நான் ஒரு அம்புதான் . ஆனால் கொன்றவர் யார் என்று சொல்லமாட்டேன்” என்கிறான் சத்யா . 

இந்நிலையில் மீண்டும் சத்யாவை கொலைக் கபடி ஆட வைக்கும் ஜெயிலர்,  சத்யாவுக்கு விஷ ஊசியைப் போட்டு விட ,

சத்யாவை கமிஷனர் மருத்துவமனைக்குக் கொண்டு போக , அவன் இறந்து விட்டதாக சொல்கிறார் டாக்டர் . 

சத்யாவின் மனைவியைக் கொன்றது யார் ? கேத்தரின் எங்கே ? சத்யாவின் இறப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதே இந்த யார் இவன் ?

தொழில் நுட்ப நேர்த்தியோடு அழகியல் கலந்து படமாக்கலில் பிரம்மிக்க வைக்கிறார் இயக்குனர் டி.சத்யா . ஃபிரேமிங் , ஷாட்ஸ் எல்லாம் ஆசம் அட்டகாசம் . 

இரவு நேரக் காட்சிகளை மயக்கும் ஈர வண்ண ஓவியம் போலவும் பகல் நேரக் காட்சிகளை அவ்வளவு குளிர்ச்சியாகவும் படமாக்கி,

 அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிநேந்திர மேனன் . குறிப்பாக வெயில் நேரக் காட்சிகளுக்கு அவர் கொண்டு வந்திருக்கும் இளநீர் வண்ண டோன் ஆகா … அபாரம் ! 

எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்கள் கேட்க இனிமை . பின்னணி இசை,  காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்து இருக்கிறது . 

பிரவின் புடியின் எடிட்டிங்கில் முதல் பாதிக் காட்சிகள் சும்மா இறக்கை கட்டிப் பறக்கின்றன . 

கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன .  இப்படி தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அருமை .

நாயகன் சச்சின் கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் . இன்னும் லைட் கூச்சம் போகவில்லை என்பது ,

 இடுங்கிய கண்களில் தெரிகிறது.   முகபாவனைகளில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். 

ஈஷா குப்தா நவீன அழகில் ஜொலிக்கிறார். தோழியாக வரும் தன்யாவும் நன்றாக நடித்துள்ளார் . 

பிரபு , கமிஷனராக நடித்துள்ள கிஷோர், ஜெயிலில் சத்யாவுக்கு ஆறுதலாக வரும் முதியவர் கதாபாத்திரத்தில் டெல்கி கணேஷ் ,

மற்றும்  ஜெயிலராகவும் , கமிஷனரின் உதவியாளராக வரும் தெலுங்கு நடிகர்களும் ஒகே . சதீஷ்தான்   காமெடி என்ற பெயரில் அறுத்துத் தள்ளுகிறார் . 

ஒரு நல்ல திரைக்கதையில் எதிர்பாராத காட்சிகள் திருப்பங்கள் இருக்க வேண்டும் . இருக்கிறது . 

குற்றவாளி என்று திடீர் என கடைசியில்  புதிதாக யாரையும் காட்டி பொங்கு அடிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே ரசிகனுக்கு அறிமுகமான ஒருவரை ,

குற்றவாளி என்று காட்டுவதுதான் கெத்து  அப்படியே சொல்கிறார்கள் .இப்படி பல சிறப்புகள் !  

                                                                                                                                                     இயக்குனர் டி.சத்யா

ஆனால் இவ்வளவு சிரத்தை எடுத்தவர்கள் அடிப்படையான கதையிலும் சிரத்தை எடுத்திருக்க வேண்டாமா ?

காதல் ,கல்யாணம்  மனைவி கொலை, கணவன் கைது , கோபக்கார ஜெயிலர் , சொத்துப் பிரச்னை என்று அரைத்த மாவையே அரைத்து இருப்பதுதான் பலவீனம் . 

யார் இவன் .. தொழில் நுட்ப வல்லுனன் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *