வனம் @ விமர்சனம்

கோல்டன் ஸ்டார் புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே பி அமலன், ஜே பி அலெக்ஸ் தயாரிப்பில், வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அணு சித்தாரா, வேல ராமமூர்த்தி, அழகம்பெருமாள் நடிப்பில் , இதற்கு முன்பு தப்புத்தண்டா படத்தை இயக்கிய ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கி இருக்கும் இரண்டாவது படம் வனம் . 

அடர் வனப் பகுதியான வண்ணாத்திப்பாறை என்ற இடத்தில் அமைக்கப்படும் நுண்கலைக் கல்லூரி ஒன்றின் ஹாஸ்டல் கட்டப்படும்போது, அமையும் ஒரு அறைக்குள் இருக்கும் பே சக்தி, பெயிண்டர் ஒருவரையும் பிறகு மாணவர்கள் இருவரையும் கொள்கிறது . சக மாணவரான மகிழ் ( வெற்றி) யூ டியூபரும் தனது சிறு வயதுத் தோழியுமான ஜாஸ்மின்  உதவியோடு ஆவியின் ஆதியை அறிய முயல்கிறான் . 
 
ஆண்மையற்ற – கொடுமைக்கார ஜமீந்தார் , அவரால் பாதிக்கபடும் பெண்கள் , அதில் மலைக்காட்டில் இயற்கையோடு இணைந்து வாழும் மல்லி என்ற பெண் , பழங்குடிகளை ஒழிக்க முயலும் அரசாங்கம் , ஜமீன்தாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் எழுத்தாளர் என்று பல விசயங்கள்  தெரிய வருகின்றன . என்றோ நடந்த அந்த சம்பவத்துக்கும் இப்போது நடக்கும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம் என்பதே வனம் . 
 
படத்தின் முதல் பலம் லொக்கேஷன் . அடர்ந்த வனங்கள்,  அருவிகள், செடி கோடி , மரம் பூக்கள், புழுவில் இருந்து உருமாறும் வண்ணத்துப் பூச்சி என்று அட்டகாசம் . 
 
வித்தியாசமான கதைக்கு முயன்று இருக்கிறார்கள் . நுண்கலைக் கல்லூரி , ஓவியம் , மண் சிற்பங்கள், அதை வைத்து சில வித்தியாசமான திடுக்கிட வைத்தல்கள் , அருமை. 
 
பிளாஷ்பேக்கில் முகங்கள், தோற்றங்கள் . பின்புலம் எல்லாம் அருமை. 
 
கடைசி நேர வில்லன் டுவிஸ்டை யூகிக்க விடாமல் கொண்டு போவதில்  இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் அட்டகாசமாக ஜெயிக்கிறார்.  விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் அருமை. அந்த கடைசி நிமிட கிளைமாக்ஸ் சண்டையில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இருவரும் மிக சிறப்பு .
 
பழங்குடி மக்கள் பாத்திரங்களுக்கான நடிக நடிகையர் தேர்வுகள் அருமை, முக்கியப் பாத்திரமான மல்லியைத் தவிர. ஆனாலும் நடிப்பில் குறை இல்லை 
 
வெற்றிதான் இன்னும் நன்றாக நடித்து இருக்க வேண்டும். ஸ்ம்ருதி வெங்கட்டும்! 
 
வனத்தின் அமைதி, பல்வேறு  ஒலிகளை உணர, கேட்க, லயிக்க  விடாமல் எதாவது வாசித்துக் கொண்டே இருக்கிறார் இசை அமைப்பாளர் 
 
”ஆண்மையற்ற ஜமீந்தார் பெண்களை வேட்டையாட ஆரம்பித்தார்” என்பது போல வசனங்களில் தவறான வார்த்தைப் பிரயோகங்கள் . 
 
முதல் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 
 
இப்படி சில குறைகள் இருந்தாலும் வரலாறு புத்தகம் , அது பாதியில் முடிக்கப்பட்ட விதம்,என்று பரபரப்பாகி கடைசி நேரத்தில்  நிமிர்கிறது படம் .
 
வனம் .. அடர்த்தி குறைவு . ஆனாலும் குளுமை .
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *