திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமாரும் அபி&அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவனும் தயாரிக்க, மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜி. மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் 144. (பெயரே அம்புட்டுதான்.)
வித்தியாசமான படங்களை தயாரிக்கும் வழக்கம் உள்ள சி.வி.குமார் முண்டாசுப்பட்டி உட்பட காமெடியிலும் கூட வித்தியாசமான களங்களை விரும்புபவர் . இந்த 144 படமும் அப்படியே .
“மதுரைப் பக்கம் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த நபர்கள் அவர்களுக்குள் உள்ள பிரச்னைகள், காதல்(கள்? ரெண்டு ஜோடி இருக்கே !) இவற்றை நகைச்சுவையாக சொல்லும் படம் இது .
ஒரு ஏரியில் உள்ள மீன்களைப் பிடிப்பதில் இரண்டு கிராமத்துக்கு இடையே தகராறு. அதனால் ஊரடங்கு 144 உத்தரவு போடப்படுகிறது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. உதாரணமா முறைப் பெண்ணை பார்க்க முடியல. புடிச்ச சினிமாவுக்கு போக முடியல. பக்கத்து தெரு நண்பனை பார்க்க முடியல.
ஊரடங்கு உத்தரவை எப்படி சமாளித்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தார்கள் என்பது உட்பட பல விசயங்களை நகைச்சுவையாக கையாண்டு இருக்கிறோம்’’ என்கிறார் இயக்குனர் மணிகண்டன் .
” சிட்டி சப்ஜெக்டிலேயே நடித்து வந்த எனக்கு இது புதுமையான அனுபவம் . செம ஸ்கிரிப்ட்” என்கிறார் அசோக் செல்வன்
பொதுவாக பிரபல எழுத்தாளர்களின் கதையை காசு கொடுத்து வாங்கி அதை அப்படியே படமாக எடுப்பது வழக்கம் . ஆனால் இந்தப் படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒன்றை உரிமம் பெற்று படத்தில் வைத்து அதோடு மற்ற விசயங்களையும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் .
சுஜாதாவின் கதையில் வரும் அந்த திருடன் பாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார் . அவருக்கு ஜோடி ஓவியா .
“அந்த திருடனால் ஒழுங்கா எந்த பூட்டையும் உடைக்க முடியாது . போலீசே அவனைப் பார்த்து பரிதாபப்படும் . அதனால போலீஸ் மத்தியில் தன் கவுரவத்தை காப்பாத்திக்கவாவது ஏதாவது பூட்டை உடைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுவேன் . அதோட காதல் வேற … “ என்று தனக்கே உரிய பாணியில் காமெடியாக சொல்லும் சிவா ,
மதுரையை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு புது ஐடியாவும் சொல்கிறார் . “பொதுவா மதுரைன்னா வெட்டுக் குத்துன்னே படங்கள் வருது. ஆனா மதுரை மக்கள் அப்படி தெரியவே இல்ல .
இந்தப் படத்தோட ஷூட்டிங்க்காக நான் மதுரை போகும்போது மதுரைல ஒருத்தர் என் கிட்ட ‘என்ன சார் விஷயம் மதுரைக்கு வந்திருக்கீங்க?’ ன்னு கேட்டார் . ‘ஷூட்டிங்தான் சார்’ னு சொன்ன உடனே , ‘ எங்க ஊரை பின்னணியா வச்சு எடுக்கற படத்துலல்லாம், என்னமோ நாங்க எல்லாரும் ரவுடிங்க மாதிரியே காட்டுறாங்க. ஆனா நீங்க நடிக்கிறீங்கன்னா காமெடி இருக்கும்ல ? ரொம்ப சந்தோசம் சார்’னு சொன்னார்.
அதே மாதிரி ஷூட்டிங் நடந்தப்பதான் பார்த்தேன். மதுரை மக்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு தனித் தன்மை இருக்கு . அவங்ககிட்ட , இதுவரை சினிமாவுல காட்டப்படாத ஒரு சூப்பரான காமெடி ஸ்டைல் இருக்கு. எதையுமே உற்சாகமா காமெடியா ஜாலியா பாக்குறாங்க. அந்த கோணத்தில் நிறைய படங்கள் வந்தா தமிழ் சினிமாவுக்கு நல்லது “ என்கிறார் .
தயாரிப்பாளர் சி.வி.குமாரும் அதையே சொல்கிறார். “நான் மதுரை திருமங்கலத்தில் பொறந்து வளர்ந்தவன் . என் வாழ்க்கைல இதுவரை ஒரு நாளும் டாட்டா சுமோவுல வந்து நீளமான அருவாள எடுத்து சதக் சதக்னு கழுத்த அறுக்கறத எல்லாம் பாக்கவே இல்ல. மதுரை அப்படிப்பட்ட ஊரும் இல்ல. மதுரைன்னா பாசம் விருந்தோம்பல் . நகைச்சுவை இப்படிதான் இருக்கும்
அந்த நகைச்சுவையை இன் அண்ட் அவுட் சொல்லும் படம் இது . இது ஒரு காமெடி திரில்லர் . ரசிகர்களுக்கு புதுமையான காமெடி அனுபவமா இருக்கும் “என்கிறார் .
அப்போ மதுரை அருவாளுக்கு 144 போடறீங்கன்னு சொல்லுங்க .



