
ஆதி லக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் செல்வம் , ராஜா இருவரும் தயாரிக்க, ராவன், டெல்னா டேவிஸ், ரஞ்சித், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க , வேலுதாஸ் ஞான சம்மந்தம் இயக்கியிருக்கும் படம் ஆக்கம் .
என்ன ஆக்கப்படுகிறது ?
“ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கை ஆக்கப் படுகிறது ” என்று ஆரம்பிக்கிறார் இயக்குனர் வேலுதாஸ் ஞான சம்மந்தம்.
” இளம் வயதிலேயே மது மாது சூது அடிதடி ரவுடித்தனம், திருட்டு என்று, எல்லா கெட்ட சகவாசத்துக்கும் ஆளான ஒருவன். அந்த வயதில் அதையெல்லாம் சாதனையாகவும் வாழ்வின் பேரின்பமாகவும் நினைக்கிறான்.
அதே நேரம் சிறுவயது முதலே நேர்மையாக வாழும் அவனது நண்பனை வாழத் தெரியாதவன் என்று ஏளனம் செய்கிறான் .
ஒரு நிலையில் அவன் செய்த தவறுகள் எல்லாம் அவனை சூறையாடுகின்றன .
இனி வாழ்வு இல்லை என்று தெரிய வரும்போது ,
சிறு வயது முதலே நேர்மையாகவும் என்றும் இன்பமாக நிம்மதியாகவும் வாழும் நண்பனைப் பார்த்து ” ஐயோ இப்படி ஒரு சிறப்பான வாழ்க்கையை நாம் வாழாமல் போய் விட்டோமே…
என்று ஏங்குகிறான். ” என கதை சொல்கிறார் இயக்குனர் .
தொடர்ந்து ” அவனுக்கு ஒரு காதலியும் உண்டு . அதே ஊரில், ஒரு காலம் வரை ரவுடியாக இருந்து பின்னர் திருந்தி வாழும் ரவுடி ஒருவர் இருக்கிறார் .
அவர் மீது இவனுக்கு அதிக மரியாதை . அவரைப் போல இவனும் ஒரு நிலையில் திருந்தி நாலு பேர் மெச்ச வாழ்வான் என்பது காதலியின் நம்பிக்கை . ஆனால் அது நடக்கவில்லை .
இந்நிலையில் காதலியின் தோழி அந்த திருந்திய ரவுடியிடம் போய் ‘ அவள் வாழ்க்கை அழிய நீதான் காரணம் . உன்னைப் போல அவன் திருந்துவான் என்று நம்பிதான் அவள் ஏமாந்தாள்” என்கிறாள் .
அந்த திருந்திய ரவுடி வருந்துகிறான் .
இதன் மூலம் தவறு செய்தால் அதற்கான வேதனையை திருந்தினாலும் அனுபவிக்க வேண்டி வரும் என்று சொல்கிறேன் .
ரவுடியாக ராவனும் காதலியாக டெல்னா டேவிசும் திருந்திய ரவுடியாக ரஞ்சித்தும் நடிக்கிறார் . பவர் ஸ்டார் சீனிவாசன் ஜெயில் கைதியாக வருகிறார் ” என்கிறார் .
இந்தக் கதைக்கான உந்து சக்தியாக இயக்குனர் குறிப்பிடும் சம்பவம் விவகாரமானது
” வட சென்னையில் ஒரு மரண ஊர்வலத்தில் ஓர் பெண்ணும் இளைஞனும் ஆடியதை பார்த்தேன் . அவர்கள் அம்மாவும் மகனும் என்றார்கள் .
ஆடிப் போனேன் . காரணம் அவர்கள் இருவரும் ஆடிய நடனத்தில் அவ்வளவு ஆபாச அசைவுகள் .
அப்படியானால் அந்தப் பெண் அவனை எப்படி வளர்த்து இருப்பாள் என்று யோசித்தேன் .
” எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே . அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே .. ” என்ற ஏம ஜி ஆர் பாட்டு ஞாபகம் வந்தது
படத்தின் மூலம் நான் சொல்ல வரும் விசயமும் இதுதான் .
படத்தில் வரும் நாயகன் அவன் அம்மாவால் தவறாக வளர்க்கப் படுபவன் . நண்பன் தனது அம்மாவால் நல்லபடியாக வளர்க்கப் படுபவன் .” என்கிறார் .
படத்தை முடித்தவுடன் வட சென்னைப் பகுதியில் அடிதடியில் ஈடுபடும் சுமார் நூறு பேரை அழைத்துப் போட்டுக் காட்டினாராம்
” எல்லோருமே நாங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உணர வைக்கிறது’ என்றார்கள் . ரொம்ப சந்தோஷமாக இருந்தது ” என்கிறார் .
வெற்றிப் படமாகவும் அமைய வாழ்த்துகள் !