
மெட்ராஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் நந்த குமார் தயாரிக்க , விஷால் , தமன்னா , வடிவேலு , சூரி ஆகியோர் நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் படம் கத்தி சண்டை
எஸ் !
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பெரிய காமெடியனாக உயர்ந்து ஹீரோவுக்கு இணையான காமெடியன் ஆகி அப்புறம் ஹீரோவாகவே உயர்ந்த வைகைப்புயல் வடிவேலு ,
மீண்டும் இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான காமெடியனாக களம் இறங்கி உள்ளார் .
கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் தமிழகம் எங்கும் வெளியிட உள்ள இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டததையும் பாடல்களையும் திரையிட்டனர் .
பாடல்கள் எல்லாம் கிளமராக பிரம்மாண்டமாக இருந்தன . தமன்னாவின் பிரம்மாண்டமான … நடன அசைவுகளை பார்க்க முடிந்தது .
முன்னோட்டம் குடும்பப்பாங்கு காமெடி எல்லாம் கலந்து இருந்தது . வடிவேலு கலக்குகிறார் .
நிகழ்ச்சியில் பேசிய பலரின் பேச்சும் வடிவேலுவை சுற்றியே அமைந்தது .
இயக்குனர் சுராஜ் பேசும்போது ” சமூக வலைத்தளங்கள்ல எல்லாம் பங்காளி வடிவேலு வசனத்தை வச்சுதான் எல்லாமே பண்றாங்க. நான் இந்தப் படத்தின் கதையை விஷால் சாரிடம் சொன்னபோது,
‘ வடிவேலு இந்தப் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் . உங்க நண்பர்தானே கேளுங்க என்றார் . நான் கேட்ட உடன் ஒத்துக் கொண்ட பங்காளி வடிவேலுவுக்கு நன்றி.
ஒரு நாள் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வடிவேலு போன் செய்து வரச் சொன்னார் . போனால் ஒரு குறிப்பிட்டகெட்டப்பில் நிற்கிறார் . இது ஓகேயா என்று கேட்கிறார் .
அந்தக் கெட்டப்பில்தான் படத்தில் அவர் வருகிறார் ” ‘ என்றார் .
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தனது பேச்சில் “இந்தப் படத்துக்கு நான்தான் இசை அமைக்க வேண்டும் என்று விஷால் அண்ணன் கட்டளையே போட்டார் .
படத்தில் வடிவேலு சார் இருக்கிறார் என்று அறிந்த போது உற்சாகமாக ஒப்புக் கொண்டேன் ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிடும் கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் பேசும்போது
” விஷால் தமன்னா, சூரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார் . வடிவேலு சார் இந்தப் படத்தில் நடித்துள்ளது ரொம்ப சந்தோசம் ” என்றார் .
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தன் பேச்சில்
” சுராஜ் படப்பிடிப்பு என்றால் அவ்வளவு ஜாலியாக இருக்கும் .இந்தப் படம் சிறப்பாக வந்து இருக்கிறது என்பது இப்போதே தெரிகிறது .
அதுவும் அண்ணன் வடிவேலு இருப்பது பெரும் பலம் . அண்ணன் எங்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் ” என்றார் .
விஷால் பேசும்போது
” இந்தப் படத்தின் கதையை என்னிடம் சுராஜ் சொன்னபோது ‘ வடிவேலு அண்ணன் இந்தப் படத்தில் நடித்தால் மட்டும் இந்தப் படம் பண்ணுவேன் . இல்லன்னா வேணாம்’னு சொன்னேன் .
ஏன்னா அப்படி ஒரு லெஜன்ட் அவர் . முதன் முதலில் நானும் அவரும் திமிர் படத்தில் இணைந்தோம் . அப்புறம் நடிகர சங்கத் தேர்தலில் எனக்கு துணை இருந்தார் இப்போது இந்தப் படத்திலும் எனக்கு உதவி இருக்கிறார்.
எல்லோருக்கும் நன்றி .குறிப்பாக முருகராஜ் அண்ணனுக்கு ரொம்ப நன்றி ” என்றார் .
நிறைவாகப் பேசிய வடிவேலு ” விஷால் என்னை லெஜன்ட் என்று சொன்னார் . அதுக்கு எனக்கு சரியா அர்த்தம் கூட தெரியாது . என் வளர்ச்சிக்கு மக்கள்தான் காரணம் .
எல்லாமே என் கிட்ட என்ன சார் கேப் விட்டுட்டீங்கன்னு கேட்கறாங்க . ஆனா சுராஜ் சொன்ன மாதிரி இன்னமும் சமூக வலைத்தளங்கள்ல எல்லாம் நம்ம வசனத்தை வச்சுதான் விளையாடுறாங்க .
ஆக எனக்கு கேப்பும் இல்ல ஆப்பும் இல்ல .
நானும் விஷாலும் சேர்ந்த முதல் படம் திமிரு ஹிட் . அப்புறம் அவர் பக்கம் நான் இருந்த நடிகர் சங்க தேர்தலிலும் அவருக்கு வெற்றி . அடுத்து இந்த கத்திச் சண்டை படமும் சூப்பர் ஹிட்டு ஆகும்” என்றார்