ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே ஆர் இயக்கி இருக்கும் படம்.
முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர், ஒரு நபருக்கு ஒரு முக்கியமான மந்திர மருந்தைக் கொடுக்கிறார். அது என்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் மருந்து . ஆனால் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மருந்தைப் புதுப்பித்து அருந்த வேண்டும். அதற்கான வழிமுறைகள் நியாயமானவை அல்ல.
இப்போதைய நிகழ்வில் ,
அனாதை இல்லத்தில் வளர்ந்த ஓர் அழகான நல்ல தங்கமான இளம் பெண்ணுக்கும் ( கவிபிரியா மனோகரன்) ஒரு இளைஞனுக்கும் (மைக்கேல் தங்கதுரை) காதல் .
தொழில் செய்து முன்னேற நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவர்கள் லட்சியம். அவனால் பணம் புரட்ட முடியாமல் இருக்க,
அதிக சம்பளம் என்பதால்…
நகரில் இருந்து வெகு தூரத்தில் ஒரு மலைக் காட்டுக்குள், ஒழுங்கான செல்போன் சிக்னல் வசதி மற்றும் சக மனிதர்கள் இல்லாத அடர்ந்த பகுதியில் தனிமையாக உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறாள் காதலி
அங்கே நடக்கும் அமானுஷ்ய, அப்நார்மல், மனோவியல் நிகழ்வுகள் .. அவளுக்கு விரிக்கப்ட்ட வலை… அது அவளை என்ன செய்தது ? அவளது காதல் என்ன ஆனது ? என்பதே படம்
இயல்பான காதல் கதையாக ஆரம்பிக்கும் படம் ..
நாயகன் நாயகியின் மனோவியல் பற்றிய உரையாடல்கள் சிறப்பு.
நாயகி காட்டு பங்களாவுக்குள் போனதும் படத்தின் நிறம் திடம் சுவை எல்லாம் மாறுகிறது . சில இடங்களில் நிஜமாகவே அதிர அடிக்கிறார்கள்
அந்த இடைவேளை டுவிஸ்ட் சற்றும் எதிர்பாராத ஒன்று . கிரேட் .
ஆனால் அதன் பிறகு என்ன செய்வது என்பதில்தான் குழப்பம் .
படத்தின் முதல் பலம் பெரும்பலம் நாயகி கவிபிரியா மனோகரன். தோற்றம் , நடையுடை பாவனை, வெள்ளந்திக் குண்டு முகம், அந்த முகம் கொள்ளாப் புன்னகை என்று இதயத்தை கொள்ளை அடிக்கும் அழகுச் செல்லக்குட்டி . நடிப்பிலும் அசத்தி இருக்கிறார் . தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு .
மைக்கேல் தங்கதுரை கச்சிதமாக நடித்துள்ளார்
கலைராணி, ஸ்ரீ ரஞ்சனி இருவரும் மிக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். ஸ்ரீரஞ்சனிக்கு இது வித்தியாசமான கேரக்டர்
முனிவர் சித்தர் என்று சொல்லிவிட்டு படத்தில் காட்டப்படும் விஷயங்கள் சித்தர்கள் பற்றிய புரிதலின்மையையும் தவறான பார்வையையும் காட்டுகிறது .
அடிப்படையில் நல்ல கதைதான். ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையை கையாண்ட விதமும் தாழ்நிலை படமாக்கலும் ஆரகனை … யாரகன் என்று கேட்க வைத்து விட்டது
