டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்க, விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கும் ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!
அசர்பைஜான், கப்படோசியா, இஸ்தான் புல் , க்ரபி தீவு, பக்கு மற்றும் டேராடூன், ஜெய்ப்பூர், ஹைதராபாத், ஆகிய இடங்களில் டட்லியின் ஒளிப்பதிவில் அன்பறிவின் அதிர வைக்கும் சண்டை இயக்கத்தில் சுந்தர் சி யின் நேர்த்தியான இயக்கத்தில் படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சிகளைக் கொண்ட டீசரும், டிரைலரும் மிரட்டியது .
நிறைய ஆக்ஷன் காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார் . தமன்னாவும் !
திரையிடப்பட்ட பாடல்களில் சுந்தர் சிக்கே உரிய அழகான வண்ணமயம் !
நிகழ்ச்சியில் வசனகர்த்தா பத்ரி பேசும்போது,”டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. அல்லது உலகம் சுற்றம் வாலிபன் – 2 என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும். ஆக்ஷன் , செண்டிமெண்ட், காமெடி எல்லாம் நிறைந்த படம் ” என்றார்.

அகன்ஷாபூரி பேசும்போது,”டிவி தொடரில் என்னை பார்வதியாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இப்படம் மூலம் என்னை எல்லோரும் வெள்ளித் திரையில் காண்பார்கள். டிரைலர் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படம் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன் “என்றார்.
ஹிப்ஹாப் ஆதி பேசும்போது,”இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இப்படத்தைப் பொறுத்தவரையில் பாடல்களை விட பின்னணி இசைதான் முக்கிய இடம்பெறும்”என்றார்.

நடிகை தமன்னா பேசும்போது, “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன். பாகுபலி படம் போல நிறைய சண்டைக் காட்சிகள் கொடுத்துள்ளார் சுந்தர்.சி. மற்ற படங்களைவிட இப்படத்தில் நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது.

ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன். விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, ” இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதல் படமாக கிராமிய பின்னணி கொண்ட முறைமாமன் படத்தை இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்றார்கள். இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.
இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பாரா? என்பது சந்தேகம்தான். அக்கன்ஷாவை கழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அக்கன்ஷாவும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.,
சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

படத்தில் எனக்கு மிக பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் இரட்டையர்தான். ஹிப்ஹாப் ஆதி என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார்.
மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.
தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன்.
இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான சிஜி காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
விஷால் இயக்குநரின் நடிகர். நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்” என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது, “சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம்தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். . ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிபட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளன .
வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தைக்கூட பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன்.

ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.
மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூடியூப்-ல் சாராவின்குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர்.
15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள். ‘துப்பறிவாளன்-2‘ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள்..ஒவ்வொருத்தரும் , மற்றவர்க்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்