ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரிக்க,சேத்தன் சீனு, ஆஷ்னா சவேரி, ராஜசிம்மன்,ராம்ஸ் , சாய் தீனா,மனோபாலா நடிப்பில் சங்கர் சாரதி எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஓர் அரசியல்வாதி , ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஒரு வக்கீல் ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். தீவிர விசாரணை நடக்கிறது.
பிராமணப்பெண் ஒருத்தி ( ஆஷ்னா சவேரி ) முதியோர் அனாதை இல்லம் ஒன்றில் வாழும் முதியோர்களுக்கு சேவை செய்கிறார். அதைப் பார்த்து ஓர் இளைஞன் ( சேத்தன் சீனு) அவள் மீது காதல் கொள்கிறான் . அவனும் முதியோர் இல்லத்தில் உள்ளோருக்கு சேவை செய்கிறான். அவளும் அவனைக் காதலிக்கிறாள் .
திருமணத்துக்கு அவள் விரும்ப , அவன் விலகுகிறான்.
கொலைகளுக்கான காரணம் என்ன? காதலன் விலகுவது ஏன் என்பதே படம்.
படத்துக்கு ஏன் வள்ளுவன் என்று பெயர்?
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்ட தனொடு நேர்” என்பது திருக்குறள் (அதிகாரம்: செங்கோன்மை, குறள் 550)
கொடுமையான குற்றங்களைச் செய்பவர்களை ஓர் அரசன் தண்டித்து ஒழிப்பது, ஒரு உழவன் தனது பயிர் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்குச் சமமாகும் என்பதே இதன் பொருள்.
இந்தக் குறளின்படி இந்தப் படத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதால் படத்துக்கு வள்ளுவன் என்று பெயர். இந்தப் பார்வை பாராட்டுக்குரியது.
படத்தில் முதியோர் இல்லக் காட்சிகள் மனத்தைத் தொடும்படியாக நெகிழ்வாக இருக்கின்றன.
மற்றபடி டெம்ப்ளேட் காட்சிகள். வழக்கமான கதை . காமாசோமா காட்சிகள் மனோபாலா எல்லாம் நடித்திருப்பது படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை உணர்த்துகிறது.
வக்கீல் அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அம்பேத்கார் சிலை மீது மண்ணை வாரித் தூற்றும் காட்சி அயோக்கியத்தனமானது .
சேவை செய்யும் பிராமண நாயகி பின்புலம் அந்த வன்மத்துக்கு காரணம் கற்பிக்கிறது.
போன பிறவியில் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தை கடமைக்கு எடுத்தால் அதன் பெயர் வள்ளுவன்.