கஷ்டப்பட்டு வேலை செய்த படத்துக்கு உரிய களம் கிடைக்கவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கும் . அந்த வருத்ததில் இப்போது இருக்கிறார்கள் கோடைமழை கதாநாயகி பிரியங்காவும் இயக்குனர் கதிரவனும் .
கோடைமழை?
யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.சுரேஷ்குமார் – டி. அலெக்சாண்டர் இருவரும் தயாரிக்க,
புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிப்பில், பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி வெளிவந்த படம் கோடை மழை .
வருத்தம் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு, படத்தின் சிறப்பு என்னவென்று பார்த்து விடுவோம்
திருநெல்வேலி சங்கரன்கோவில் பகுதி மக்களின் வாழ்வியல் அடிப்படையில் மண்சார்ந்த பதிவாக படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் கதிரவன் .
வைரமுத்துவின் பாடல் வரிகள் படத்துக்கு சிறப்புச் சேர்த்தன .
வைர முத்துவின் பாடல் வரிகளில் நடித்தது பற்றி கூறும் பிரியங்கா “முன்பே கங்காரு படத்தில் அவரது பாடல் வரிகளுக்கு நடித்த பெருமை எனக்கு உண்டு .
ஆனால் இதில் கதாநாயகி சம்மந்தப்பட்ட எல்லாப் பாடல்களுமே எனக்கே அமைந்தன . குறிப்பாக நெல்லைச் சீமையில பாடல் எடுக்கப்பட்ட விதம் அபாரமானது .
பாடல் எனக்கு தெரியாது . இசை தெரியாது. டைரக்டர் என்னிடம் ‘நில்லு….நட.. ஓடு .. இப்படி பாரு …மேலே பாரு .. சிரி…. என்று மட்டும் சொல்வார் . ‘ஏன் எதற்கு/’ என்று கேட்பேன் .
‘கடைசியில் பார் தெரியும்’ என்பார் . எனக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருந்தது . ‘என்னடா இது.. எதற்கு இதையெல்லாம் செய்யணும்னு கூட சொல்ல மாட்டேங்கறாரே’என்று .
ஆனால் அப்படி நான் நடித்த காட்சிகளை எல்லாம் நெல்லைச் சீமையில பாட்டில் பார்த்தபோது கிடைத்த பிரம்மிப்பு ..! ஓ இதற்குத்தானா இது ? இந்த சிரிப்பு இந்த வரிக்கா? ‘ என்று வியந்து போனேன் .
டைரக்ஷன் என்றால் என்ன ? டைரக்டரின் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டேன். அதுவும் வைரமுத்து சாரின் பாடல் வரிகள், அதோட தரமே தனி ” என்கிறார் .
பிரியங்கா நடித்த முதல் கிராமியப்படம் இது . அந்த அனுபவம் அவருக்கு எப்படி இருந்ததாம் ?
“நமக்கு தெரியாமல் உலகில் எவ்வளவு சிறப்பான விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிந்தது . உதாரணமாக மரக் கிளையை உடைத்து பிளந்து இடுப்பில் வைத்து மூச்சுப் பிடிப்பை சரி செய்யும் காட்சி.
அது படமாகும்வரை எனக்கு தெரியாது . அந்த பாட்டி கதாபாத்திரம் ஹீரோவிடம் ‘போய் குச்சி ஓடிச்சுக்க்கிட்டு வாடா ‘ என்று சொல்லும்போது கூட,,
அந்த குச்சால அடிச்சு சரி செய்வாங்கன்னுதான் நினைச்சேன் . ஆனால் அதை பிளந்து இடுப்பில் இருபுறமும் வைத்து மூச்சுப் பிடிப்பை நீக்கும் அந்த அறிவியல் .. அபாரம் ” என்கிறார் .
நமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்த வரியையே கேள்வி ஆக்கினேன். “படத்துக்காக கறுப்பழகியாவே மாறி இருந்தீங்களே ….?”
சந்தோஷச் சிரிப்புடன் “பொதுவா கறுப்பாக்கணும்னா மேக்கப் போடுவாங்க . ஆனா இந்தப் படத்தில் அப்படி பண்ணல . அந்த கருப்பு அளவோடும் அழகாகவும் மட்டும் இல்லாம இயல்பா இருக்கணும் என்பதற்காக,
என்னை வெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க. சும்மா டயலாக் சொல்லித் தரும்போது கூட முகத்து மேல வெயில் பளீர்னு அடிக்கிற மாதிரி நிக்க வச்சுதான் சொல்லித் தருவாங்க .
‘நிழல்ல நின்னு சொல்லலாமே சார்’னா ‘இல்லம்மா இங்கேயே நின்னு கேளு’ன்னு சொல்வாங்க . அப்படி பண்ணினதாலதான் அந்த இயல்பான கறுப்பு அமைஞ்சது .
அப்புறம் .. அந்த மொட்டைப் பாறை மலையில பட்டப் பகல் வெயில் சூட்டுல, சில பேர் கற்பழிக்க முயல்வதையும் ஹீரோ வந்து காப்பாத்துவதையும் எடுத்தப்போ,
எல்லாரும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ” என்கிறார் பிரியங்கா .
இப்போது வருத்தம் என்ன வென்று பார்ப்போம் .
பிரியங்கா பேசிய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த இயக்குனர் கதிரவன் மென்மையான குரலில் புன்னகையோடு வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார் .
“எவ்வளவோ கஷ்டப்பட்டு , ஒரு கண்ணியமான படமா , மண் சார்ந்த படமா , அழகியலோடு , ஒரு நல்ல நோக்கத்தோடு உணர்வு பூர்வமா இந்தப் படத்தை எடுத்தோம் .
ஆனா ஒழுங்கான தியேட்டர் அமையல . அதனால மக்கள் பார்க்க வர முடியல .
நாங்க எல்லாம் தியேட்டர்காரங்ககிட்ட எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம் .முடியல . கொடுத்த தியேட்டர்கள்லயும் நைட் ஷோ கொடுத்தாங்க .
இது பக்கவான கண்ணியமான குடும்பப் படம் . ஐட்டம் சாங் இருக்கிற கிளுகிளுப்புப் படமோ பேய்ப் படமோ இல்ல . இந்தப் படத்தோட ஆடியன்ஸ் பகல்லதான் படம் பார்க்க வருவாங்க .
அதனால ரெகுலர் ஷோக்கள் கொடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் எங்களுக்கு கிடைக்கல.
படம் ரிலீஸ் பண்றதுக்குன்னு சில பேர் உருவாக்கிட்டாங்க . தியேட்டர்காரங்க எல்லாம் அவங்க சொல்றததான் கேட்கறாங்க .
அதனால புதுசா வர்றவங்க புதுமுகங்களை வச்சு நல்ல படங்கள் பண்ண நினைக்கறவங்க நல்ல படம் எடுத்தாலும் அதை மக்களுக்கு கொடுக்க முடியல.
ரொம்ப வருத்தமா இருக்கு சார் ” என்று அமைதியில் மூழ்குகிறார்
அடுத்துப் பேசும் பிரியங்கா ” எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம் . பார்த்தவங்க எல்லாரும் பாராட்டறாங்க . ஆனா பாக்க வைக்க முடியலியே . நாங்களும் இந்த சினிமாவை நம்பி வந்துட்டோம் .
எங்களுக்கும் லட்சியங்கள் இருக்கு .. நாங்களும் சின்சியரா உழைக்கறோம் . ஆனா அந்த உழைப்பை மக்களுக்கு கொண்டு போய் மக்கள் கிட்ட கொடுக்க முடியாத நிலை .
அப்போ நாங்க எல்லாம் என்ன சார் செய்யறது ?” என்கிறார் மிக வருத்தமாக .
கேள்விகள் இங்கே. பதில் எங்கே ?