இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சினிமாவின்பல்வேறு விதங்களை பிரிவுகளை பரிமாணங்களை ரசிகர் முன் கொண்டு வருவதில் வல்லவராக இயங்கி வருபவர்.
குறும்படங்கள் — தொகுப்புக் குறும்படங்கள் – வலைத் தொடர்கள் — திரைப்படங்கள் – அதிரடி மகா கமர்ஷியல்படங்கள் , இவற்றை அடுத்து தனிநிலைப் படங்கள் எனப்படும் இண்டிபெண்டன்ட் படங்களுக்கென அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச் இன்டீ.
இந்த ஸ்டோன் பெஞ்ச் இன்டீ மூலம் அவர் வெளியிடும் முதல் படம் அல்லி.
நீள – நீண்ட ஷாட்களுக்கு பெயர் பெற்ற ஒழிவு திவசத்தே களி உள்ளிட்ட சில சிறப்பான மலையாளப் படங்களை இயக்கி படமாக்கலுக்காக பெரும் பாராட்டுக்களைப் பெற்ற சணல் குமார் சசிதரன் இயக்கி இருக்கும் சோழா என்ற மலையாளப் படத்தின் தமிழ் வடிவமே இந்த அல்லி . (மலையாளத்தில் சோழா என்றால் அருவி என்று பொருள் )
மூன்று சர்வதேச விருதுகளை இப்போதே பெற்று இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் , அகில் விஸ்வநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .
நாயகி நிமிஷா சஜயன் இதற்கு முன்பு தொண்டி முதலும் திருஷ்யமும், இடா , மாங்கல்யம் தந்துனானே , 41, ஒரு குப்ரஸித பையன் ஆகிய படங்களில் ,அட்டகாசமான நடிப்பால் கவர்ந்தவர் . வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் இப்படத்தை தயாரித்து இருப்பவர் .
தமிழில் ஸ்டோன் பென்ச் இன்டீ சார்பாக , கார்த்திக் சுப்புராஜின் மைத்துனர் கார்த்திகேயன் சந்தானமும் ஜோஜு ஜார்ஜும் தயாரித்துள்ளனர் .
விரைவில் வெளிவர இருக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ், சணல் குமார் சசிதரன், நிமிஷா சஜயன் , கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திரையிடப்பட்ட முன்னோட்டம் மலை மழைப் பிரதேச பனி, குளிர், காடு , துளிகள்,அருவிகள் , பாறைகள் நிறைந்த ஓர் அற்புத சூழலுக்கு நம்மை நொடிகளுக்குள் கடத்திக் கொண்டு போகிறது .
வானத்துக்கும் வெளிக்கும் அதிக இடம் கொடுக்கும் வித்தியாசமான ஃபிரேம்களில் பிரம்மாதமான ஒளிப்பதிவை அஜித் ஆச்சார்யா தந்திருப்பது தெரிகிறது . பசிலின் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் , ” பல்வேறு வித திரை முயற்சிகளை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் நாங்கள் செய்து வருவது நீங்கள் அறிந்த விஷயம் . இடையில் பேட்டை முதலிய பெரிய படங்களில் வேலை செய்தது சிறப்பான விஷயம் . இப்போது மீண்டும் என்ன புது முயற்சி செய்யலாம் என்று யோசித்தபோது இண்டிபெண்டன்ட் படங்களுக்கு அவ்வளவாக இன்னும் வெளிச்சம் கிடைக்காததை உணர்ந்தோம்
அந்த தேடலில் எங்களுக்கு கிடைத்த படம்தான் அல்லி ” என்றார் .
நிமிஷா விஜயன் , ” மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழுக்கு அல்லி மூலம் வருகிறேன் . கார்த்திக் சுப்புராஜ் சார், சணல் குமார் சசிதரன், ஜிஜோ ஜார்ஜ் ஆகியோருக்கு நன்றி ” என்றார் .
படத்தின் இயக்குனர் சணல் குமார் சசிதரன் தனது பேச்சில்,
” நான் இதுவரை ஐந்து படங்களை இயக்கி இருக்கிறேன் .எனது மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியான விசயம் . கார்த்திக் சுப்புராஜ் சாரின் தொடர்பு கிடைத்த போது, அல்லி பற்றி சொல்ல அவர் தமிழ் படத்தை கொண்டு வருகிறார் . அவருக்கும் மிக்க நன்றி . படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
நிறைவாகப் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,
“கார்த்திகேயன் சொன்னது போல இண்டிபெண்டன்ட் படங்களைப் பற்றி யோசித்த போது, சணல் குமார் சசிதரன் வந்து அல்லி படத்தை படத் தொகுப்பு வேலைகள் நடந்த சூழலில் காட்டினார் . படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது . சணல் குமார் சசிதரனின் மேக்கிங் ரொம்ப நல்லா இருந்தது . அஜித்தின் படத் தொகுப்பு அபாரமாக இருந்தது . நிமிஷாவின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது . இசை உட்பட எல்லாமே நல்லா இருந்தது . படத்தை தமிழில் கொண்டு வருகிறோம் .
மலைக் கிராமத்தில் பக்கத்து நகருக்கு பயணிக்கிற மூன்று பேரின் பயணமும் அதில் நடக்கும் அழகான அபாயமான சம்பவங்களுமே இந்தப் படம் . ஒரு புது அனுபவத்தை இந்தப் படம் தரும் ” என்றார் .
விரைவில் திரை தொடுகிறாள் அல்லி.