பிரபல திரைப்படச் சண்டை இயக்குனரும் தமிழார்வலருமான சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயனும் முதல் தரமான சண்டை இயக்குனர்தான். எந்திரன் – 2 படத்துக்கே சண்டை இயக்குனர் இவர்தான் .
இது ஒரு பக்கம் இருக்க, உள்குத்து உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் சிறப்பாக இயங்கும் திலீப், இன்னொரு பக்கம் சினிமாவை உண்மையாக நேசிக்கும் சிறந்த தயாரிப்பாளர் என்றும் பெயர் வாங்கி இருக்கிறார் .
ஃபார்மர் புரடக்ஷன்ஸ் (farmer productions – விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் . இந்த பேருக்கே ஒரு நெல் மணி வணக்கம் திலீப் !) என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி,
விமல் ,பசுபதி, நந்திதா , இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடிக்க தங்கம் சரவணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஞ்சல என்ற படத்தை தயாரித்து இருக்கிறார் திலீப் .
அஞ்சல என்பது சூப்பர் சுப்பராயனின் அம்மா பெயர் . (அஞ்சல என்ற சொல் ஒரு பெண்ணின் பெயராக இருந்தாலும் நான் யாருக்கும் அஞ்சவில்லை என்ற பொருளும் வருகிறது . இரண்டு விசயமும் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் . பார்ப்போம் என்ன சொல்லப் போகிறார்கள் என்று )
கால மாற்றத்துக்கு ஏற்ப தனது உருவத்தை மாற்றிக் கொண்டே வரும் ஒரு டீக்கடை, இரண்டு தலைமுறையாக அதை நடத்தும் ஒரு ஒரு அப்பா – மகன் , அந்த டீக்கடைக்கு வரும் மனிதர்கள் , அங்கு நடக்கும் சம்பவங்கள், அந்த ஊர் மனிதர்களின் வாழ்வை அந்த டீக்கடை பிரதிபலிக்கும் விதம்..
அந்த டீக்கடைக்கு ஏற்படும் ஆபத்து, அதனால் பாதிக்கப்படும் அந்த ஓனர் குடும்பம் , மண் வாசனை, லட்சிய வாழ்வு, உறவுகளின் பிணைப்பு … என்று படத்தின் கதை போவது படத்தில் முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்க்கும்போது தெரிகிறது .
இயக்குனர் தங்கம் சரவணன் கிராமத்து உணர்வுகளை சரியாக பிரதிபலித்து இருப்பார் என்ற நம்பிக்கையும் அவற்றைப் பார்க்கும்போது ஏற்படுகிறது .
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன . வசனம் சிறப்பாக இருக்கிறது . மகாகவி பாரதியாரை எல்லாம் நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழ் சினிமாவில் அதுவும் முன்னோட்டத்திலேயே போட்டு ஞாபகப்படுத்தி வியக்க வைக்கிறார்கள்.
ஒரு திரைச் சண்டை இயக்குனராக தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் போட்டு, படத்தைத் தயாரித்து இருக்கிறார் திலீப் சுப்பராயன் .
படத்தை அவ்ரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி வெளியிடுகிறார் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய எல்லோருமே திலீப் சுப்பராயனின் சினிமாவை நேசிக்கும் குணத்தை நேர்மையை உழைப்பை மற்றவர்களிடம் பழகும் விதத்தை நெகிழ்வோடு பாராட்டினார்கள். அது வழக்கமான — காதுகளைப் புளிக்க வைக்கும் பொய்யான புகழுரை இல்லை என்பது புரிந்தது .
படத்தில் நந்திதாவுக்கு தந்தையாக இயக்குனர் ஆர் வி உதயகுமார் நடித்து இருக்கிறார் . பசுபதி இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் .
நிகழ்ச்சியில் பேசிய எடிட்டர் பிரவீன்
” இயக்குனர் தங்கம் சரவணன் நல்ல கதையை சொல்லி இருக்கார். நல்லா எடுத்தும் இருக்கார். . திலீப் சுப்பராயனின் டெடிகேஷன் அபாரமானது. ரொம்ப நல்ல படம் இது ” என்றார் .
திலீப் சுப்பராயன் பேசும்போது ” என் பங்காளி விமல் இந்தப் படத்துக்குக் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . பசுபதியின் நடிப்பு இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்துக்குப் போய் இருக்கிறது .
கோபி சுந்தர் பாடலில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையில் அசத்தி இருக்கிறார் . குறித்த நேரத்தில் அவர் பின்னணி இசை கோர்த்துத் தரவில்லை என்று கோபத்தில் அவரைப் பார்க்கப் போனேன் . இசை கோர்ப்பு முடிந்த இரண்டு ரீல்களை போட்டுக் காட்டினார் . கோபம் பறந்து பிரமிப்பு வந்தது .
படத்தின் பாடல்களை தனது அலுவலகத்தில் வெளியிட்டார் இளைய தளபதி விஜய் சார் . இடை விடாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் அவரிடம் சென்று சி டி வெளியிட முடியுமா என்று கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சரி என்பது போல தலையாட்டினார் .
நான் வந்து விட்டேன் . அதன்பிறகு மீண்டும் நினைவு படுத்த தயக்கமாக இருந்தது . திடீர் என்று ஒரு நாள் வாங்க என்றார் . போனோம் . உடனே வெளியிட்டுக் கொடுத்தார் அவர் என்னிடம் அன்றுக் கூறிய ஊக்க வார்த்தைகள், திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றி பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம் , ‘. ” என்றார் .
திலீப்பின் மிக நெகிழ்ச்சியான பேச்சால் நெஞ்சில் நிற்கிறது அஞ்சல பாடல் வெளியீட்டு விழா !