வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்.
‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்துகிற சிறப்பான குரல் கொண்ட ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘பாம்’. ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், ‘பாம்’ படம் மூலம் முதல் முறையாக காமெடியில் கலக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், என்று படக்குழு தெரிவித்துள்ளது.
’சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை மற்றும் நடிப்பால் மிரட்டிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பதோடு, தனது நடிப்பு திறமையால் நகைச்சுவைக் காட்சிகளை கூட, வழக்கமான பாணி இல்லாமல், தனது பாணியில் சற்று புதிதாக கையாண்டிருப்பவர், காதல் காட்சிகள் மற்றும் பாடல்களிலும் பட்டையை கிளப்பியிருக்கிறாராம். நிச்சயம் இந்த படம் அர்ஜுன் தாஸுக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
மேலும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில், போகும் நபர்களை துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்…பாம்…பாம்…” என்று கூவி கூவி விளம்பரப்படுத்துவதும், தனது கம்பீரமான காந்த குரல் மூலம் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
