2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் படக் குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு “எனக்கு தம்பி வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ்தான். ‘வெற்றியோடு நாம் பண்ணுவோம்’ என்றார் தனுஷ்.
வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். அவர் தன்னை வருத்தி வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்புதான் அவரை உயர்த்துகிறது.
படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்கன் குனியா நோய் வந்துவிட்டது. ஆனாலும் அதைத் தாங்கிக் கொண்டு வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல வெற்றி தான். அதுக்குத் தான் அவருக்கு வெற்றிமாறன் என்ற பெயர்.
வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன். என்றும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
இன்னும் இந்தப் படத்தில் நிறைய பேர்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜீவி பிரகாஷுக்கு இசைக்கு கிடைக்கும் என்று நம்பினேன்.
நடிகர் தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்து விட்டார்கள்.
1992-ல் எனக்கு பாலுமகேந்திரா எனக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்தார் . அதன்பிறகு தம்பி வெற்றிமாறன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காக நடிகர் தனுஷுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் ” என்றார்.
வெற்றி மாறன் பேசும்போது, ” ஒரு படம் பண்ணும்போது அந்தப் படத்தோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி விழா முதல் மேடை. இந்த விருது விழா இரண்டாவது மேடை .
இந்தப் படத்தில் சமூக நீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது . படத்தை மெயின் ஸ்ட்ரீம் படமாக பண்ணவும் செய்தோம். இந்த மாதிரியான விருது படத்தில் உழைத்தவர்களுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப் படத்தை கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது.

ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இந்தப் படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. குடும்பம் மனைவி அக்கா,அப்பா, குழந்தைகள், மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.
என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மன பலம் வாய்ந்தவர்கள். என் எமோஷ்னல் கோபத்தை எல்லாம் தாங்கிக் கொள்வார்கள். என் கேமராமேன் வேல்ராஜ் சார் ரொம்ப நேர்த்தியாக செய்திருந்தார். ஜீவி பிரகாஷ் பேக் கிரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெசலா இருந்தது.

நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக்கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காக கூட ரெண்டு மூணு பேரிடம் போய்..அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சு வாரியார் இந்தப் படத்தை குடும்பத்திற்கான படமாக மாற்றினார்.

தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது.
மற்ற ஹீரோவாக இருந்தால் அப்பாவான நடிக்கப் போறது யார் என்றுதான் கேட்பார்கள். காரணம் மகன் கேரக்டரில் நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள் . தனுஷின் அந்தக் கேள்வியே நன்றாக மனசுக்கு நம்பிக்கையாக இருந்தது.
தாணு சார் இந்த கதையை நாலு பக்கம் படித்துவிட்டு பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ் ஃபுல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. . தாணு சார் இந்தப்படத்திற்கு கிடைத்தததால்தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு போனது படம்” என்றார் .

வாட்ஸ் அப் கால் மூலம் அயல் நாட்டில் இருந்து பேசிய தனுஷ் “ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. அசுரன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார் வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி” என்றார்.
எடிட்டர் ராமர் பேசும்போது, “இந்த இடத்தில் தனுஷ் சார் இல்லாதது ஒருகுறையாக இருகிறது. எனக்கு விருது கிடைத்தது போல இருக்கிறது .

தனுஷ் சார் காலில் விழும் காட்சியை எடிட்டிங்கில் பார்த்த போதே படம் ஹிட் எனச்சொன்னேன். தாணு சார் எனக்கு அப்பா மாதிரி. இந்த வெற்றியில் எல்லாருக்கும் பங்கிருந்தது என்றாலும்…அதில் தாணு சாருக்கு அதில் அதிக பங்குண்டு.
வெற்றிமாறன் படம் முடியுந் தறுவாயில் பெரும் சங்கடத்தில் இருந்தார். ஆனால் அதை அவர் வெளியில் காட்டவேயில்லை. நான் அந்த நேரத்தில் அவருக்காக கடவுளை வேண்டினேன்.
ராமர் என்ற பெயர் இருந்தும் எனக்கு விருது கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் இறுதி கட்டத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்

பத்திரிக்கையாளர் தேவி மணி பேசும்போது, “தேசியவிருது பெற்ற கலைஞர்களை பாராட்டும் மேடையில் என்னயும் ஒரு ஆளாக மேடையேற்றியதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்னுடைய இந்த 50 வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் இதுவொரு பொன்னாள். தாணு சார் பிரம்மாண்டத்தின் மறுபெயர். அவர் ரஜினியை வைத்து படம் எடுப்பேன் என்று சொன்னார். சொன்னது போலவே செய்தார்.
வெற்றிமாறன் நம் மண்ணின் அடையாளம்..அனைவருக்கும் வாழ்த்துக்கள் ” என்றார்