ஸ்ரீ சாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் பி. செந்தில் வேல் , விஜய சங்கர் இருவரும் தயாரிக்க,
கே.பாக்யராஜ், பொன் வண்ணன், யுவன், சாரா ஷெட்டி, சின்சு மோகன், தயாரிப்பாளர் செந்தில் வேல் ஆகியோர் நடிக்க,
கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்து ஜிப்சி என். ராஜ்குமார் இயக்கி இருக்கும் படம் அய்யனார் வீதி . உள்ளே நுழையலாமா? பார்க்கலாம்
அய்யனார் வீதி என்ற கிராமத்தின் பெரிய மனிதர் மற்றும் திருவிழாவில் அய்யனார் சாமியின் அருள் வந்து ஊரை வலம் வருபவர் அய்யனார் (பொன் வண்ணன்)
முந்தைய தலைமுறையில் அய்யனாரின் மாமன் கள்ளச் சாராய தொழில் ஈடுபட அதை அய்யனாரின் தந்தை (இயக்குனர் ராஜா) கண்டிக்க, அந்த பகையோடு மாமன் அவன் மனைவி இருவரும் இறக்கிறார்கள்
அய்யனாரின் தந்தையும் மரணிக்க, இப்போது அய்யனாரை பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளனர் மாமனின் மகன்கள் .
அதில் இளையவனான மருது (தயாரிப்பாளர் செந்தில் வேல்) மிகுந்த ஆக்ரோஷம் காட்டுகிறான் . அவர்கள் வீட்டுப் பையன் செந்தில் (யுவன்)
அய்யனாரின் சிறு வயதுதொட்ட நண்பர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ( கே. பாக்யராஜ்) . சாஸ்திரியின் மகள் சவுமியா ( சாரா)
அய்யனாரின் மகள் துர்காவும் (சின்சு மோகன்) சவுமியாவும் தோழிகள் .
குடும்பப் பகைக்காக துர்காவையும் , ஆசைக்காக சவுமியாவையும் படுகையில் வீழ்த்த நினைக்கிறான் செந்தில்
அதில் துர்கா பலியாகிறாள் .
அய்யனார் திருவிழா வரும் நேரத்தில் மீண்டும் கள்ளச் சாராய பிசினசை துவங்க நினைக்கும் மருதுவுக்கு அய்யனாரின் மகள் செந்திலிடம் வீழ்ந்த கதை தெரிய வர,
ஊர் நடுவில் அதை சொல்லி மருது அய்யனாரை அவமானப்படுத்த , அதிர்ச்சியில் அய்யனாருக்கு பைத்தியம் பிடிகிறது . மன நல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
திருவிழாவை நடத்தவும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும் சமூக விரோதிகளை அழிக்கவும் அய்யர் , அய்யனாராக மாற , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த அய்யனார் வீதி,
படத்தின் கதை ஒன்றும் சோடை போனது அல்ல . சிறு தெய்வ வழிபாடு, பொது நலன் , சுய ஒழுக்கம் , நட்பின் மேன்மை இவற்றை பேசுகிற கதை .
இது நம்ம ஆளு பட கெட்டப்பில் மீண்டும் பாக்யராஜ் . பெரிதாக சுவாரஸ்யமான காட்சிகளோ கற்பனையோ இல்லை என்றாலும் கதாபாத்திரமாக ஒகே தான் .
அய்யனாராக பொன்வண்ணன் தோற்றப் பொருத்தம் உதவுகிறது . யுவன் வழக்கம் போலவே . நாயகிகள் ஜஸ்ட் ஒகே .
108 அய்யனார் பற்றிய பாடல் அருமை . நிஜத்தில் நடக்கும் அய்யனார் திருவிழாவை படம் பிடித்து சேர்த்து இருப்பதும் அருமை .
கிளைமாக்ஸ் பாராட்டுக்குரியது .
பாக்யராஜ் , பொன்வண்ணன் தவிர மற்ற நடிகர்களின் செயற்கையான நடிப்பு, அதீத சத்தம் , நாடகததனமான வசனங்கள் படத்துக்குப் பின்னடைவே
வில்லன் மருதுவாக வரும் தயாரிப்பாளர் செந்தில் வேல் அழகான கவர்ச்சிப் பெண்ணோடு குத்தாட்டம் போடும் உன் கண்ணுச் சாராயம் .. பாட்டு போலவே
மற்ற பாடல்களையும் உற்சாகத்தோடு சிறப்பாக உருவாக்கி படமாக்கி இருக்காலம் .
அதே போல தயாரிப்பாளர் செந்தில் வேலும் , அய்யனாரின் விசுவாசியாக வரும் இயக்குனர் ஜிப்சி ராஜ் குமாரும் மோதிக் கொள்கிற
சண்டைக் காட்சியை எடுப்பதில் காட்டிய அக்கறையை மற்ற காட்சிகளையும் எடுப்பதில் காட்டி இருக்கலாம் .
அய்யர்தான் அய்யனாராக ஆகா வேண்டும் என்று ஊரே சொல்லி விட்ட நிலையில் அது காட்சியாக வரும்போது சுவாரஸ்யம் மிஸ்ஸிங் .
மாறாக பைத்தியமாக இருந்த அய்யனாரை, மருது கூட்டத்துக்குப் பயந்து ரகசியமாக குணமாக்கி வந்த சுப்ரமணிய சாஸ்திரிகள் ,
கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத வகையில் அய்யனாரையே கொண்டு வந்து இறக்கினார் . குணமாகி வந்த அய்யனார் எதிரிகளை பந்தாடினார்
– என்று கதை பண்ணி இருந்தால் அதுதான் அய்யனாருக்கும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த அய்யனார் வீதி படத்துக்கும் மதிப்பாக இருந்திருக்கும் .





