ரால்ஃப் புரடக்ஷன்ஸ் சார்பில் ரஃபேல் சல்தன்ஹா தயாரிக்க,
ரேஜன் சுரேஷ் , ஆர்ஷிதா , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடிப்பில்
நாகராஜன் இயக்கி இருக்கும் படம் அழகென்ற சொல்லுக்கு அமுதா .
அமுதா (?) அழகா ? பார்க்கலாம் .
ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருந்து கொண்டு , அம்மா , அப்பா , தங்கை மூவரிடமும் வெட்டிப் பயல் , தண்டச் சோறு என்று பெயர் வாங்கிக் கொண்டு ,
அப்படியே நடந்து கொண்டு , தன் போன்ற நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றும் ஒருவன் (ரேஜன் சுரேஷ்) ,
இளநீரை ஒழுங்காக குடிக்காமல் சட்டையில் ஊற்றிக் கொண்டு குடிக்க ,
அப்போது சாலையில் வரும் அமுதா என்ற பெண் (ஆஷ்ரிதா) அவன் கேவலமாக குடிப்பதாக எண்ணி சிரிக்க,
அவள் மீது அவனுக்கு காதல் வருகிறது !
காதல் என்ற பெயரில் அமுதாவை டார்ச்சர் செய்கிறான் அவன் . யார் சொல்லியும் கேட்கவில்லை.
இருவருக்கும் உறவு என்று சுவரில் எல்லாம் கிறுக்கப்படுகிறது .
அவனுக்கு பயந்து அமுதா நல்ல ஒரு மாப்பிளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க , அவள் பெற்றோர் வரன் பார்க்க ,
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் எல்லாம் அமுதாவுக்கும் அவனுக்கு உறவு என்று சொல்லி விரட்டுகிறது ஒரு கும்பல்.
அமுதாவின் தோழி , ‘இனிமேல் நீ வேறு எந்த மாப்பிள்ளையையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்கள் முதலிரவு அன்றே உன்னை பற்றி தப்பாக பேசி அடிப்பார்கள் . சிகரெட்டால் சூடு வைப்பார்கள்” என்று சொல்ல ,
தனக்கு காதல் டார்ச்சர் கொடுத்தவன் மீது காதல் வந்து, அவனையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள் அமுதா . ‘ஆசைப்பட்ட பொண்ண உஷார் பண்ணிட்டான்யா’ என்று பெருசுகள் அவனை வாழ்த்த படம் முடிகிறது .
இதுதான் அழகென்ற சொல்லுக்கு அமுதா.
எவ்வளவு கேவலமான — பிற்போக்குத்தனமான — பெண்களை கேவலப் படுத்துகிற கதை என்று படித்த உடன் கோபம் வருகிறது அல்லவா? தப்பே இல்ல
ஆனால் இதை காமெடி தூவி சொல்கிறார்கள் .
ரஜினி ரசிகர்களை — ரஜினி படம் வசனங்களை படம் முழுக்க நாற அடிக்கிறார்கள் . ஒரு காட்சியில் விஜயகாந்தை கிழித்துத் தொங்க விடுகிறார்கள் .
ஜே கே கல்யாண் ராமின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது .
பாடல்களிலும் பின்னணி இசையிலும் அசத்தி இருக்கிறார் ராஜின் மகாதேவ் . வெரைட்டியான பாடல்கள் . சபாஷ்
மூளையை கழட்டி வைத்து விட்டு ..ம்ஹும் உடம்பில் இருந்து தலையையே கழட்டி வைத்து விட்டு …
மனசாட்சியை தொலைத்து விட்டு மார்பில் கண்களை வைத்துக் கொண்டு படம் பார்த்தால் ….. சிரிக்கலாம்.
அழகென்ற சொல்லுக்கு அமுதா… ஊசிப் போன தயிர்வடையில் ஊறும் சுவையான பூந்தி.




