கிருஷ்ணா டாக்கீஸ் சார்பில் எம் .பிரகாஷ் தயாரிக்க,
பிரஜன் – அஷ்மிதா ஜோடியாக நடிக்க, உடன் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன்,
காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடிக்க,
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி மோகன்.ஜி இயக்கி உள்ள படம் பழைய வண்ணாரப்பேட்டை.
‘துணி’ந்து கொடுக்கலாமா நேரத்தை ? பார்க்கலாம்
வண்ணாரப் பேட்டையில் நடக்கும் லோக்கல் தேர்தலை ஒட்டி இருவர் கொலை செய்யப்படுகின்றனர் . குற்றவாளிகளைப் பிடிக்க போலீசுக்கு நெருக்குதல் வர ,
வேறு வழியில்லாத போலீஸ் ,
கிடைத்த வேலைகளை செய்து ஜாலியாக வாழும் எளிய நண்பர்கள் ஐவரில் ஒருவனை குற்றவாளி என்று அறிவித்து , பிரச்னையை தற்காலிகமாக அடக்கி,
எலக்ஷன் முடிந்த உடன் நிஜ குற்றவாளிகளை பிடிக்க முயல்கிறது .
எஞ்சினியரிங் படிக்கும் மாணவனான அவனது படிப்பும் வாழ்க்கையும் பாழாகி விடும் என்ற நிலையில் அவனது தந்தை தற்கொலை முடிவுக்கு வருகிறார் .
நண்பர்கள் ;போலீசிடம் நீதி கேட்க, ‘உங்க நண்பன் மேல சந்தேகம்னு குத்துபட்டவன் சொல்லி இருக்கான் . நண்பன் முக்கியம்னா நிஜ குற்றவாளியை கண்டு பிடிச்சு கொடுத்துட்டு நண்பனை மீட்டுக்குங்க “
— என்கிறது போலீஸ்
தன் நண்பனுக்காக களம் இறங்குகிறான் கார்த்திக் (பிரஜன்)
அதே நேரம் ஒரு அப்பாவி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக ஓர் இளம் போலீஸ் அதிகாரியும் (ரிச்சர்ட்) குற்றவாளியை தேடுகிறார் .
குற்றவாளி யார் ? கொலை ஏன்? அப்பாவி மாணவன் மீட்கப்பட்டனா என்பதே இந்த பழைய வண்ணாரப் பேட்டை .
பழைய வண்ணாரப் பேட்டயின் பின்புலத்தையும் சூழலையும் நன்கு பயன்படுத்தி உள்ளனர் .உள்ளூர் பாத்திரங்களுக்கு ஏற்ற முகங்கள் தேர்வு அருமை . போலீஸ் ஸ்டேஷன் பிளாஷ் பேக் காட்சிகள் ரசனை
பிரஜன் நன்றாக நடித்துள்ளார் .
ஜூபின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதை சூழலுக்கு அவ்வளவு பொருத்தமாக உள்ளது . ” காத்திருந்த பொண்ணு …” பாடல் சூப்பர் . மற்ற பாடல்களும் இனிமை .
ஈர்ப்பாக போகும் முதல் பாகம் இரண்டாம் பகுதியில்தான் படுத்து விடுகிறது .
அப்பாவி மாணவனை மீட்க நண்பனும் போலீஸ் அதிகாரியும் கிளம்புவது இடைவேளை என்றால் அவர்கள் மீட்பதுதான் கிளைமாக்ஸ் என்பது ஊரறிந்த விஷயம் .
அதற்கு ரசிகன் உட்கார வேண்டிய அவசியத்தை படம் தரவில்லை
அல்லது கடைசி வரை மீட்க முடியவில்லை என்பது படமாக இருந்து இருக்க வேண்டும் .
அல்லது கொலையாளியை நெருங்கும்போது கதை முற்றிலும் எதிர்பாராத – அதிர்ச்சியான — வெகு ஜன ரசிகன் அறியாத — ஆனால் அவனை ஏற்றுக் கொள்ள வைக்கிற ஒரு களத்தில் பாய வேண்டும் .
கதாநாயகி இரண்டாம் பாதியில் கதைக்குள் வர வேண்டும் .
பஜ்ஜிக்கு வாழைத் தார் திருடும் காட்சி போன்ற முதல் பாதி லீட் விஷயங்கள் இரண்டாம் பகுதியில் இணைக்கப் பட வேண்டும்
இவை எதுவும் இல்லாத காரணத்தால் …
பழைய வண்ணாரப் பேட்டை …. வெளுப்பு கம்மி




