ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி. மாதையன் தயாரிக்க, செங்குட்டுவன் , அம்மு அபிராமி, எம் எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், யோக் ஜேபி நடிப்பில் மணிபாரதி இயக்கி இருக்கும் படம்.
வாக்கிங் போகும் ஒரு பெரியவர் மார்பில் வலி வந்து விழுந்து இறக்கிறார் .
மார்புப் பகுதியில் சுடப்பட்டு சில கொலைகள் நிகழ்கின்றன. சுடப்பட்ட புல்லட் முதுகுப் பகுதியில் துளைத்துக் கொண்டு வெளியே வந்ததற்கான அடையாளம் இல்லை.
விசாரணையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் (யோக ஜேபி) , புதிதாக பணியில் சேர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முயலும் இளம் அதிகாரியை ( நாயகன் செங்குட்டுவன்) சரியாகப் பணியாற்ற விடாமல் தடுக்கிறார்.
ஒரு இளம் பெண் (அம்மு அபிராமி) இதய நோயால் பாதிக்கப்பட்டு குணமான சிலரைத் தேடி அலைகிறார்
இளம் அதிகாருக்கும் இளம் பெண்ணுக்கும் காதல் .
கொலைகளும் காரணங்களும் என்ன .. அதன் பின்னணியில் உள்ள குற்றம் என்ன என்பதே பேட்டரி .

இதய நோயாளிகளுக்கு பேஸ் மேக்கர் பொருத்துவது சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தை வித்தாகக் கொண்டு கதை பண்ணி இருக்கிறார்கள் .
ரவிவர்மா பச்சையப்பனின் திரைக்கதையில் ஐஸ் புல்லட் , எலும்பு புல்லட் என்று சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு . நடந்த குற்றத்தை நடித்துப் பார்த்து குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் விதமும் அபாரம் .
இரண்டு டம்ளரில் இரண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு ஒவ்வொரு டம்ளரிலும் உள்ள ஒரு ஸ்ட்ராவை ஒரே நேரத்தில் உறிஞ்சி இரண்டு டம்ளரில் உள்ள வெவ்வேறு பானங்களை ஒரே நேரத்தில் குடிக்கும் ஐடியா அசந்தர்ப்பமாக வந்தாலும் அடடே.
லிஃப்ட்டில் ஐஸ் கிரீம் சிதறி விழுந்து உருகி ஓடிக் கொண்டு இருக்க , அங்கே இருக்கும் போலீசிடம் போனில் பேசும் கொலைகாரன் , “இந்த லிஃப்ட் இப்போ அறுந்து விழுந்தா நீ என்ன ஆவ தெரியுமா ?” என்று கேட்கும்போது, அந்த ஐஸ்கிரீமை காட்டுவது… போன்ற ஒரு சில இடங்களில் டைரக்ஷன் ‘டச்’களால் கவர்கிறார் இயக்குனர் மணிபாரதி
படத்தின் பலம் இவையே .

வசனங்களில் கூர்மையும் ஈர்ப்பும் இல்லை. ஹீரோவே தயாரிப்பாளர் என்பதால் மேக்கப் தூக்கலாகப் போட்டுக் கொண்டார் போல . அம்மு அபிராமி ஒகே. பல நடிகர்கள் செயற்கை நடிப்பு , வசன உச்சரிப்பு , தவறான தொனி இவற்றால் படுத்தி எடுக்கிறார்கள் . இதனால் பல காட்சிகள் நேர விரயமாக மாறுகின்றன.
கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவும் சித்தார்த் விபினின் இசையும் பழுதில்லை .
படத்தின் முக்கிய விழிப்புணர்ச்சி விசயமாக சொல்லப்படும் தகவலின் விளைவு, வீரியமான காட்சிகளால் விஷுவலாக அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும். இந்தப் படமே அதற்குத்தான். அப்படி இருக்க அதை நடந்த விசயத்துக்கான விளக்கமாக மட்டும் உரையாடலில் கடத்தி விட்டுப் போவது அதிர்ச்சி.
பேட்டரி ….. டெலிவரியின் போதே சார்ஜ் கம்மி