ஸ்கை வாண்டரர்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் ஜெயலக்ஷ்மி என்பவர் தயாரித்து எழுதி இயக்க, லிங்கேஷ், பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் லியா, திவ்யா, மதுசூதனன் , கஞ்சா கருப்பு நடிப்பில் வந்திருக்கும் படம்.
சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத் தலைவர் ஒருவர் ( மதுசூதனன் ) தங்கையின் மகனை தன் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார்.அவன் இளைஞனாக, தலைவரின் மகளுக்கு (திவ்யா) அவன்( லிங்கேஷ்) மீது காதல்.
இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழ்க் கலாச்சாரம் கற்க வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ( லியா) அவனுக்கும் காதல் வர ,
கொந்தளிக்கும் தலைவர் அந்தப் பெண்ணை விரட்ட, தலைவருக்கு விரோதமான கூட்டத்து ஆட்களில் ஒருவன் (காட்பாடி ராஜன்) இதில் நுழைய, என்ன நடந்தது என்பதே படம் .
சொல்ல வந்த விஷயத்தை பெரிதாக குறைகள் இன்றி திரையில் பதித்து இருக்கிறார்கள் .
சாண்டி சாண்டேல்லா இசையில் பாடல்கள் தெளிவாகப் புரிவதே இனிமை போன்ற ஓர் உணர்வை தருகிறது . டோனி ஜான் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது .
திவ்யா , லியா, மது சூதனன் , லிங்கேஷ் அனைவருமே சிரத்தையாக நடித்துள்ளனர் .
மாறன் , கஞ்சா கருப்பு ஒரு ஒரு காமெடியை வைத்துக் கொண்டு பல சீன ஓட்டுகிறார்கள். அமெச்சூர் தனம் .
சிறுவயது முதல் தூக்கி வளர்த்த பிள்ளையை மனைவியாகப் பார்க்க முடியாத — அவள் தன் அம்மாவின் சேலையைக் கட்டி வந்த நிலையில் அவளை அம்மாவாகவே பார்க்கிற ஹீரோ என்ற விஷயம் சிறப்பு ,
ஆனால் இது மட்டுமல்ல .. . கதை, திரைக்கதை, வசனம் , இயக்க பாணி எல்லாமே அரதப் பழசு என்பதுதான் பெரும் பிரச்னை .
எனவே ,
என் காதலே … ஏன் காதலே ? ஏன்?
