மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் ஏர்னேனி மற்றும் ரவிசங்கர் தயாரிக்க, ரவி தேஜா, பிரியா பவனி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா நடிப்பில் , ஷிவா நிர்வாணா இயக்கி இருக்கும் தெலுங்குப் படம்,
கே என் விஜயகுமார் மற்றும் விஜய் பாலாஜியின் வசனம் மற்றும் தமிழுக்கான பின்பணியாக்கத்தில் தமிழில் வந்திருக்கிறது .
குட்டியானை வண்டி வைத்து விளைபொருட்கள் வியாபாரம் செய்து வாழும் திரிநாத்துக்கு (ரவி தேஜா) காவேரி என்ற மனைவி (பிரியா பவனி சங்கர்) மற்றும் மனம்மா என்கிற மணிகண்டா என்ற மகள்.(நட்சத்திரா) .
தீவிர குடிப்பழக்கம் உள்ள திரிநாத் அதனாலேயே தீவிர அய்யப்ப பக்தர் கூட . மாலை போட்டு இருக்கும்போது குடிக்க மாட்டான்.
தன் மகள் மேல் உயிரினும் மேலான பாசம் வைத்திருக்கும் திரிநாத் , ஊரில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தன் மகள் போலப் பார்க்கிறான். பஸ் வசதி இல்லாத காரணத்தால் பெண்கள் படிக்க வெளியூர் போவது குறைவு. அப்படி போகும் மாணவிகளையும் ஒரு கும்பல் இளைஞர்கள் முழு போதையில் வம்பிழுகிக்ன்றனர். .
பெண் பிள்ளை எதையும் யாருக்கும் அஞ்சாமல் சொல்ல வேண்டும் என்று எண்ணும் திரிநாத் தன் மகளை அப்படியே வளர்க்கிறான். ஆனால் அவனது மரியாதைக்குரிய- அய்யப்ப குருசாமி (சாய் குமார்) தன் மகளை நேர் மாறாக ‘எதையும் பொறுத்துக் கொண்டு விலகி வர வேண்டும் . அவமானப்படக் கூடாது . பட்டால் வெளியே சொல்லக் கூடாது’ என்று சொல்லி வளர்க்கிறார்.
குருசாமி , திரிநாத் ஆகியோர் அந்தத் தொகுதி எம் எல் ஏ வை சந்தித்து முறையிட , எம் எல் ஏ ஊருக்கு பஸ் ஏற்பாடு செய்கிறார். மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவிகளை ஆசிரியை ஒருவர் ( சுவாசிகா) தவறான ‘தொடுகைக்கு’ உட்படுத்துகிறார் . மேலும் சில அதிர்ச்சிகள். விளைவாக சில மாணவிகள் கொல்லப்பட, நடந்தது என்ன? அய்யப்ப விரதம் என்ன ஆனது என்பதே படம்.
‘மகள் தூங்கிக் கொண்டு இருக்கிறாள் ஊருக்குள் யாரும் ஹாரன் அடிக்கக் கூடாது ‘என்று ரவிதேஜா கட்டளை போடும் காடசியின் வீரியம் பின்னால் விளங்கும் இடத்தில் அட்டகாசமாக ஜெயிக்கிறார் ஷிவா நிர்வாணா
அதே போல படத்தின் முக்கால்வாசி என்ன நடக்கிறது என்று எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி இருக்க, அந்த அலட்சியத்தில் ஆடியன்ஸை மூழ்க விட்டு, ஆன்ட்டி கிளைமாக்சில் அடுத்து அடுத்து இரண்டு அதிரடி திருப்பங்கள் கொடுக்கிறார் பாருங்கள். அட்டகாசம் . சபாஷ்
தனது வழக்கமான ஹீரோயிஸத்தில் இருந்து கொஞ்சம் இறங்கி ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் ரவிதேஜா
மனைவியாக பிரியா பவானி சங்கர் பொருத்தம்.
குருசாமி கேரக்டரில் கம்பீரமான சாய் குமார்.
ஆனால் இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு, மொத்த படத்தையும் இருமுடி கட்டாக தூக்கி சுமக்கிறார் பேபி நட்சத்திரா.
ஜி வி பிரகாஷ்குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு அட்டகாசமான லொக்கேஷன்களோடு கூடிய உள்ளடங்கிய கிராமத்தை அழகாக உணர வைக்கிறது.
திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக இயங்கி இருக்கிறது பிரவீன் புடியின் படத் தொகுப்பு.
தமிழ் வசனங்களை கச்சிதமாகவும் அழுத்தமாகவும் உதட்டசைவுகளுக்கு ஒத்திசைவாகவும் எழுதி இருக்கிறார்கள் விஜய் பாலாஜியும் கே என் விஜயகுமாரும்.
இதுவே ஒரு தமிழ் நடிகர் நடித்து நேரடித் தமிழில் எடுக்கப்பட்டிருந்தால் படம் பட்டையை கிளப்பி இருக்கும் .
மொத்தத்தில் இருமுடி கட்டு … மலை ஏறுகிறது