ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, இளன் , சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம் எஸ் பாஸ்கர், யோகிபாபு, செந்தில் , குமரவேல், கீதா கைலாசம் நடிப்பில் ஹரீஷ் மற்றும் நிவேதா போஹங்கர் ஆகியோரோடு இணைந்து எழுதி இளன் இயக்கி ,
நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கும் இருக்கும் படம் ,
பல வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கிய பியர் பிரேமா காதல் படத்தில்தான் , வீட்டில் தனியாக இருக்கும் ஒரு காதலி, தன் காதலனிடம் ஆணுறை வாங்கி கொண்டு இரவில் ரகசியமாக தனது வீட்டுக்கு வரச் சொன்ன பொரச்சிகரமான காட்சி தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன் முதலாக இடம் பெற்றது
சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸர் பெண்ணுக்கும் (சான்வி மேக்னா,) ஓர் இளைஞனுக்கும் (இளன்) உள்ள காதல். கல்யாணம் வரை போகிறது.அந்தக் கல்யாணம் பையனின் அம்மாவுக்கு (கீதா கைலாசம்) சற்று ஓகே என்றாலும் அப்பாவுக்கு (எம் எஸ் பாஸ்கர்) பிடிக்கவில்லை .
பெண்ணின் அம்மா (ராதிகா சரத்குமார்) , அப்பா (குமரவேல்) தாத்தா ( செந்தில்) ஆகியோருக்கு சம்மதம்.
ஆனால் ‘கல்யாணம் முடிந்த பிறகு அம்மா வீட்டில்தான் இருப்பேன்’ என்று அவள் சொல்ல, அவன் வீட்டில் அதை மறுக்க, காதல் மனைவிக்காக பெற்றவர்களை பிரிந்து மனைவி வீட்டுக்கே வந்து விடுகிறான் அவன் .
சிலநாள் ராஜ உபச்சாரம். அப்புறம் மரியாதை போகிறது. அவள் நல்ல வேலையில் இருக்க, அவன் வேலை இல்லாமல் இருக்க, வீட்டோடு மாப்பிள்ளையானவன் ஒரு நிலையில் வீட்டோடு வேலைக்காரன் ஆகிறான்.
ஆரம்பத்தில் புழுங்கினாலும் ஒரு நிலையில் அதை முழுமனதோடு செய்து அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகிறான்.
இதை ஜீரணிக்க முடியாத அவனது அம்மா, உடல்நிலை சரி இல்லை என்று பொய் சொல்லி, தன் வீட்டுக்கு வர வைத்து, மருமகளின் வேலை போவதற்கு காரணமாக இருந்து , மகனுக்கு ஒரு சுமாரான வேலையும் வாங்கித் தருகிறாள்.
விஷயம் மருமகளுக்கு தெரிய வர என்ன ஆனது என்பதே படம்.
கல்யாணத்துக்கு பின் ஒரு பெண் பிறந்த வீட்டைப் பிரிந்து வேலையை விட்டு , பல சமயம் சுயம் இழந்து, கணவன் வழி அமைந்த குடும்பத்தை கட்டி எழுப்ப தன்னை அர்ப்பணிக்கிறாள் . கணவன்மார்கள் அதையே விரும்புகிறார்கள் . அதை ஒரு மனைவி எதிர்பார்த்து கணவனுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை பேசும் படம் இது.
புதிதாக ஒன்றும் இல்லை . ஆனால் புதுசு மாதிரி சில விஷயங்கள் இருக்கு.
சில காட்சிகளை சிறப்பாக எழுதி இருக்கிறார் இளன். படமாக்கல் வெகு சிறப்பு. இயக்குனராக ஸ்கோர் செய்கிறார். நடிப்பும் ஓகே.
சான்வி மேக்னா இளமையும் நவீனத்தன்மையும் கொண்ட கேரக்டரில் நன்றாக நடிக்கிறார்.
ராதிகா சரத்குமார் தனது கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்
நறுக்குத் தெறித்தாற்போல தனது கேரக்டரில் நடித்து இருக்கிறார். எம் பாஸ்கர் . சும்மா filler ஆக வரும் ஒரு கிளைக்கதைக்கு சிறப்பு செய்கிறார் யோகிபாபு
செந்தில் , கீதா கைலாசம். குமரவேல் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு செய்திருக்கின்றனர்
இப்படியாக நடிகர்களின் பங்களிப்பால் சேதாரம் குறைவாக பயணிக்கிறது படம்.
தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு தொடர்ந்து படத்தைப் பார்க்க வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
வழவழா கொழகொழா கிளைமாக்ஸ்.
விவாதம் கிளப்பிய படம் நிறைவான முடிவைத் தர முடியாமல் தப்பி ஓடுகிறது, படத்தின் இறுதியில் கணவனையும் மனைவியும் ஓடுவது போலவே.
மொத்தத்தில் பியர் பிரேமா கல்யாணம்… கல்யாணம் இருக்கிறது. பியாரும் பிரேமாவும்தான் பலன்தரவில்லை.