படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அட்டகாசமாக இருந்தது .
படத்தின் நாயகன் விக்ரம் . காதலியாக நயன்தாரா . ஆனால் நாயகனை காதலிக்கும் திரு நம்பியாக ( ஆண் தன்மை அதிகம் கொண்ட திருநங்கை ) — வில்லனாகவும் விக்ரம் . !
திருநம்பியாக வரும் விக்ரமின் நடிப்பும் உடல் மொழிகளும் அட்டகாசம் . நிச்சயமாக அவரது நடிப்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பது இப்போதே உறுதியாகத் தெரிந்தது
நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது
” நான் ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடிப்பதை பெரிய விசயமாக சொல்கிறார்கள் .
ஆனால் இந்த விசயத்தில் விக்ரம் சார் எனது குரு போன்றவர் . டிரைலரில் அவர் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது ” என்றார்
விக்ரம் பேசும் போது நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் என்று அவரை பெருமையுடன் மனதார வாழ்த்தினார். தொடர்ந்து அவர் பேசும் போது,,

“எனக்கு நேற்றிரவு இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை, பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம்.
நான் ஒவ்வொருபடம் செய்யும் போதும் அது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று பார்த்துதான் செய்வேன். அப்படித்தான் என் ஒவ்வொரு படத்தையும், கதையையும் அணுகுவேன்.
படம் பேச வேண்டும்; இந்தப்படம் பற்றி நான் பேச விரும்பவில்லை.இது ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்கும்.
ஆனந்த் சங்கரும் இந்தப் படத்துக்காக 9 மாதங்கள் காத்திருந்தார் .இந்தக் கதை ஓகே ஆனபிறகு வேறொரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கவும் அவருக்கு வாய்ப்பு வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்காகக் காத்திருந்தார்.

நான் இதில் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். அந்த பாத்திரத்தை வேறொருவர் செய்வதாக இருந்தது. ஏன் நாமே செய்தால் என்ன என்று தோன்றியது.,நடித்தேன்.
நான் நடிக்கும் இரண்டாவது பாத்திரத்தின் பெயர் ‘லவ்’ .
ஆனந்த் சங்கர் இளைஞர்தான். வயதில் சின்னவர்தான் ஆனால் முதிர்ச்சியோடு செயல்படுபவர்.
தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் துணிச்சல்காரர். நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோரை நடிக்க வைத்து படத்தைப் பெரிதாக்கி விட்டார்.
ஹரி இயக்கத்துள் நான் நடிக்கும் ‘சாமி2’ படத்தை அவரே தயாரிக்கவும் தயாராகிவிட்டார்
(விழாவில் ஹரி இயக்கத்தில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விக்ரம் நடிக்கும் சாமி 2′ புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப் பட்டது .)

ஹரரிஸ் ஜெயராஜ் எனக்கு எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அந்த ‘மூங்கில் காடுகளே’ எனக்குப் பிடித்த ஒன்று. இன்றும் அது என் போனில் ஒலிக்கிறது.
இதில் பாடல்களை அருமையாக கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அருமை.
ஆர்.டி. டிராஜசேகர் ‘பீமா’ வைப் போலவே இதிலும் தன் ஒளிப்பதிவில் என்னை அழகாகக் காட்டியுள்ளார்.
படத்தின் முக்கால் பாகம் கதை மலேசியா, தாய்லாந்தில் நடக்கிறது. ஆனால் எல்லாமும் அங்கு எடுக்க முடியாது.
எனவே கலை இயக்குநர் சுரேஷ் மலேசியா, தாய்லாந்து போலவே செட்களை இங்கேயே போட்டுப் பிரமிக்க வைத்தார்.
நயன்தாரா பிரேமில் இருக்கும் போது ஒரு மேஜிக் நிகழும். இதிலும் அந்த ஹெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.. நித்யாமேனன் அந்த பாத்திரத்துக்குள் புகுந்து வாழ்ந்து இருக்கிறார்.
சிவ கார்த்திகேயன் இன்னமும் பெரிய ஆளாக வருவார். அவர் ‘ரெமோ’ வில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.நான் ரெமோ என்றது கடந்த காலம் ,இனி சிவாதான் ரெமோ .
நான் செய்தது ஊறுகாய் மாதிரி ,அவர் பிரியாணியே போடுவார்.” என்றார்.