பசங்க புரடக்ஷன்ஸ் , விஷால் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்க, விஷால் நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கும் கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷால், பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி , நடிகர் கருணாஸ் , மைம் கோபி , ஆத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசிய போது “கதகளி படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பலரும் ‘ இது உங்கள் படம் போல் இல்லையே?’என்று கேட்கின்றனர். இந்தப் படம் விஷாலுக்கு நிச்சயம் புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
படத்தின் கதை என் நண்பர் ஒருவர் கூறிய நிஜ சம்பவத்தையும் அது தொடர்பான விசயங்களையும் கோர்வையாகக் கொண்டது.
இயக்குநர் சுசீந்திரன் மூலம் விஷால் சாரை சந்தித்து இரண்டு கதைகல் சொன்னேன்.
முதலாவதாக நான் கூறிய கதை குடும்பப்பாங்கான ஆக்ஷன் படத்துக்கான கதை. அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் அவரிடம் இன்னொரு கதையும் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் கேட்டார். இரண்டாவதாக சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
” இந்தக் கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் இது உள்ளது நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன்” என்று சொல்லி நடித்தார். . படத்தில் மொத்தமே இரண்டே பாடல்கள் முதலில் நாங்கள் குத்துப் பாடல் ஒன்றை சேர்த்திருந்தோம். படத்தை பார்த்த பிறகு படத்தின் இரண்டாம் பாதியில் பாடல்களே தேவை இல்லை.என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.
நாங்கள் படத்தில் இடம் பெற வேண்டாம் என்று நினைத்த வசனங்களை கூட ‘மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள்’ என்று கூறி படத்தில் அதை இடம் பெற வைத்தார் விஷால் . படத்தில் நாயகி கேத்ரீன் தெரேசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
கதகளி என்ற பெயர் இருப்பதால் இது நடனம் பற்றிய படம் அல்ல . ஒருவன் ஒரு செயலை ஆவேசமாக செய்யும்போது கதகளி ஆடிட்டான்யா என்று சொல்வோம் இல்லையா? அந்த அர்த்தத்தில்தான் பெயர் வைத்தோம் ” என்றார்
நடிகர் விஷால் தன் பேச்சில் “
கதகளி என்னும் தலைப்பு தமிழ்தான் என்று தெரிந்த பின்னர்தான் படத்துக்கு வைத்தோம். நான் முதன் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் உடன் இனைந்து பணியாற்றுகிறேன். இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை.
படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், நியாயமும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு.
படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகச் சிறப்பாக படத்தை படம்பிடித்துள்ளார். என்னை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு மிக அழகாக காட்டி இருக்கிறார். கேத்ரீன் தெரேசா அவர்களின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
என்னை பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் , நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் , என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன்” என்றார்