MDPC கிரியேஷன்ஸ் அண்டு ப்ரடக்ஷன்ஸ் சார்பில் Dr. எம்.டி.சுரேஷ் பாபு தயாரிக்க, ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா நடிப்பில் பிரவீன் இயக்கி இருக்கும் படம் காதல் அம்பு .
ஒளிப்பதிவு – விக்னேஷ் நாகேந்திரன், இசை – சன்னி டான், படத்தொகுப்பு – சுரேஷ் பாபு, இணை தயாரிப்பு – நவீன் குமார்
படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு, சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கம் , நடிகர்கள் ஆரி ‘ஜூனியர்’ பாலையா, மற்றும் . பெரு. துளசி பழனிவேல், விஜய முரளி ஆகியோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
தயாரிப்பாளர் சுரேஷ் பாபு பேசும்போது, “இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகம்.மற்றும் அனைவரின் முயற்சியில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம்|” என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசும்போது,”வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். வாழ்த்துகள் நடிகர் ஆரியின் சமூக சேவையைப் பாராட்டுகிறேன்.
மேலும், மதுபானம் குடிப்பது போல படம் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று படக்குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்
நடிகர் ஆரி பேசும்போது, ” இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்.
சுபஸ்ரீயின் மரணம் மனதை மிகவும் பாதிக்கிறது . யாருக்கோ வைத்த பேனர் அது விழுந்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.
இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.
அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,”ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன், தமிழில் இதுதான் முதல் படம் என்றார். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிற மொழிகளில் வெற்றி பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்.
இயக்குநர் பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘இன்று போய் நாளை வா’, ‘காதலிக்க நேரமில்லை’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.
இப்போது எந்த காரணமாக இருந்தாலும் மது அருந்துவது தான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. அது மாற வேண்டும் ஆகையால், இதுபோன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம் ” என்றார்.
இறுதியில், ‘காதல் அம்பு’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.
