பிரபாகரன் மூவீஸ் சார்பில் கானா வினோதன், குப்பன் கணேசன் ஆகியோர் தயாரிக்க, சுபாஷ் சந்திர போஸ், நேஹா , மனோ பாலா . லொள்ளு சபா சுவாமிநாதன் . மனோகரன் மற்றும் பலர் நடிப்பில்,
கதை திரைக்கதை வசனம் எழுதி முக்கியப் பாத்திரத்தில் நடித்து கணேஷன் இயக்கி இருக்கும் படம் காதல் செய்.
இவர் முன்பே ஈழப் போரில் தியாகியான இசைப்பிரியா பற்றிய போர்க்களத்தில் ஒரு பூ படத்தை இயக்கியவர் . நல்ல தமிழ உணர்வாளர் . கன்னடத்தில் பதினெட்டு படங்களை இயக்கியவர்
காதல் செய் படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா இளையராஜா ஸ்டுடியோவில் நடந்தது . இதுவரை யாருக்கும் இது போன்ற விழாக்களுக்கு அனுமதி தராத இளையராஜா கணேஷனுக்கு கொடுத்திருக்கிறார் என்பதன் மூலம் இளையராஜாவிடம் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்

விழாவில் பாரதிராஜா , பி வாசு ஆகியோர் சிராப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்
திரையிடப்பட்ட முன்னோட்டமும் பாடல்களும் சிறப்பாக இருந்தன . மலேசியாவின் அழகான இடங்களில் படமாக்கப்பட்டு இருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா ” நானும் ராஜாவும் சினிமாவுக்கு வந்த காலத்தில் இவ்வளவு மீடியாக்கள் கிடையாது . ராஜா தமிழர்களின் பெருமை . படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தது . கணேசன் வெற்றி பெற வேண்டும் ” என்றார்
“இளையராஜாவும் பாரதிராஜாவும் இருக்கும் மேடையில்,நானும் இருப்பது எனது பாக்கியம்” என்று ஆரம்பித்த இயக்குனர் பி வாசு , ” நடிப்பவர்கள் பேசும் மாடுலேஷனுக்கு ஏற்ப சுருதி பிடித்து இசை அமைப்பார் இளையராஜா.

நான் இயக்கிய மன்னன் படத்தில் அவர் கொடுத்த அம்மா என்று அழைக்கத உயிரில்லையே பாடல் என்னை பெரிய உயரத்துக்குக் கொண்டு போனது. திருச்சி அருகில் உள்ள அம்மா கோவில் என்ற கோயிலில் அது பூசைப் பாடலாக உள்ளது. ” என்று வியந்து விட்டு “காதல் செய் படத்தின் பாடல்கள் அருமையாக உள்ளது . படம் வெற்றி பெறட்டும் . கணேஷனுக்கு வாழ்த்துகள் ” என்று வாழ்த்தினார்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் மாஸ்டர் மகேந்திரன், ” கணேஷன் எனக்கு பொருளாதார ரீதியாக நிறைய உதவிகள் செய்தவர். இன்று அவர் இயக்கும் படத்தில் அவரது மகன் சுபாஷ் சந்திர போஸ் நாயகனாக அறிமுகம் ஆகி இருப்பது பெரும் மகிழ்ச்சி. சின்னப் பையனாக அவனை நான் பார்த்திருக்கிறேன். அவன் இப்படி வளர்ந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது”என்றார்

சுபாஷ் சந்திர போஸ் தனது பேச்சில் , “மகேந்திரனின் பேச்சு உணர்ச்சிவசப்பட வைத்தது . அவருக்கு நன்றி. என்னை உருவாக்கி இருக்கும் அப்பாவுக்கு நன்றி. ராஜா சாரின் இசையில் நடிப்பது பெருமை. எங்களை வாழ்த்த வந்திருக்கும் பாரதிராஜா சார் , வாசு சார் அனைவர்க்கும் நன்றி “என்றார்
ஹீரோயின் நேகா எல்லோருக்கும் நன்றி சொன்னார்
கணேஷன் பேசும்போது, “போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் நான் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். அப்போது பலரும் அந்தப் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைத்துக் கொடுக்க மாட்டார் என்றார்கள் .
ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி இசை அமைத்துக் கொடுத்ததோடு , இந்தப் படத்தில் நீ ஏன் பிரபாகரனைக் காட்டவில்லை என்று என்னிடம் கேட்டார் . அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் இளையராஜா .

எத்தனையோ அம்மா பாடல்களை கொடுத்த இளையராஜா இந்த காதல் செய் படத்துக்காகக் கொடுத்திருக்கும் அப்பா பாடல் பெரிய அளவில் கொண்டாடப்படும்.
திரை உலகில் பலரும் பாரதிராஜாவை அப்பா என்று அழைப்பார்கள். ஆனால் அவர் என்னை மகனே என்று அழைப்பார் . எங்களை வாழ்த்த வந்திருக்கும் அவருக்கும் வாசு சாருக்கும் நன்றி ” என்றார் .
இளையராஜா தனது பேச்சில், ” ஒரு சூரியன்தான். ஒரு சந்திரன்தான். அது போல ஒரு இளையராஜா ஒரு பாராதிராஜாதான். இந்த காதல் செய் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் “என்றார் .