
கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் சசிகுமார் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையராக வெற்றிவேல் படத்தில் நடித்த நிகிலா வர்மா நடிக்க ,
தர்புகா சிவா இசையில் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிரசாத் முருகேசன் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி இருக்கும் படம் கிடாரி .
வளர்ந்த ஆண் மாடு எருது . இளம் ஆண் மாடு காளை.அதே போல வளர்ந்த பெண் மாடு பசு. இளம் பெண் மாடு கிடாரி .
இன்னொரு பக்கம் கிராமப் புறங்களில் யாருக்கும் அடங்காமல் சுற்றும் நபர்களை கிடாரி என்று சொல்வது உண்டு .
இந்த இரண்டாவது அர்த்தத்தில்தான் இந்தப் படத்துக்கு பெயர் வைக்கட்டுள்ளது என்பது …
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டததைப் பார்த்தபோது தெரிந்தது.
கிராமத்துப் பெரிய ஆளின் (எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி ) விசுவாசக் கையாளாக — அவரது மகளால் துரத்தித் துரத்திக் காதலிக்கப்படும் நபராக வருகிறார் சசிகுமார்.
படத்தில் மண்ணும் மனமும் புழுதியும் பூரிப்புமாக நிறைய கதாபாத்திரங்கள் .
நேட்டிவிடியோடு காட்சிகளை எடுத்து இருந்தார் இயக்குனர் .
தர்புகா சிவாவின் இசையில் வண்டியில நெல்லு வரும் பாடலின் கிராமிய மணம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது .
சசிகுமாரின் டிசைனுக்குள் அடங்கிய ஒரு நல்ல கிராமியப் படமாக இது இருக்கும் என்பது புரிகிறது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பிரசாத் முருகேசன்
” இந்தக் கதையை எழுதும்போதே சசிகுமார் சாருக்கு என்றுதான் எழுதினேன் . அவரிடம் மட்டுமே சொன்னேன் . அவரே தயாரித்தார் .
படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது . படம் நன்றாக வந்திருக்கிறது . சசிகுமார் சாருக்கு மறக்க முடியாத நன்றிகள் ” என்றார் .
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் எழுத்தாளர் வசு.மித்ர
“முக நூலில் எனது புகைப்படத்தை போட்டு இருந்தேன். அதை பார்த்து சசிகுமார் சார் அழைத்தார் .
இயக்குனரும் ஒளிப்பதிவாளர் கதிரும் இல்லாவிட்டால் நான் நடித்து இருக்க முடியாது ” என்றார் .
நடிகை சுஜா வாருணி பேசும்போது “இந்தப் படத்தில் எல்லோரும் பாராட்டும் அளவுக்கு ஒரு கேரக்டர் ரோல் பண்ணி இருக்கேன் .
இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பைக் கொடுத்த சசிகுமார் சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி ” என்றார் .
நிகிலா வர்மா தன் பேச்சில் ” வெற்றிவேல் படத்தில் அமைதியான கேரக்டர் . இதில் துறுதுறுப்பான கேரக்டர் . இந்த கேரக்டர் எனது ஒரிஜினல் கேரக்டரோடு சம்மந்தப்பட்டது என்பதால்
விரும்பி நடித்தேன் ” என்றார்
இசையமைப்பாளர் தர்புகா சிவா பேசும்போது ” முதல் படத்தையே இவ்வளவு பெரிய படமாக அமைத்துக் கொடுத்த சசிகுமார் சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி .
நான் கிராமிய இசை படித்தவன் .
அது எனக்கு இந்தப் படத்தில் பெரிய உதவியாக இருந்தது ” என்றார்
இயக்குனர் சசிகுமார் பேசும்போது ” இந்தப் படம் சிறப்பாக உருவாக்கி வந்துள்ளதைப் பார்க்கும்போது இந்தப் படத்தை நாமே டைரக்ட் செய்து இருக்கலாமே என்று தோன்றுகிறது .
அவ்வளவு சிறப்பான கதை திரைக்கதை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன் .
படத்தில் வேல. ராம மூர்த்தி, மு.ராமசாமி, வசு. மித்ர ஆகிய மூன்று எழுத்தாளர்கள் நடித்துள்ளார்கள் .
இதுவரை கவர்ச்சி நடிகையாகவே அறியப்பட்ட சுஜா வாருணி இந்தப் படத்தில் ஒரு சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் .
இசையமைப்பாளரை இயக்குனர்தான் அறிமுகம் செய்தார் . அவர் என்னிடம் ஆரம்பத்தில் போட்டுக் காட்டிய ஐந்து டியூன்களை அப்படியே ஒகே செய்தேன் . படத்தில் அந்தப் பாடல்கள் அப்படியே படத்தில் வந்துள்ளன .
வெற்றிவேல் படத்தில் நிகிலாவின் கேரக்டர் அமைதியாக இருக்கும் . ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் துறுதுறுவென இருப்பார் . இந்தப் படத்துக்கு ஒரு புதுமுகம்தான் போட நினைத்தோம் .
அப்புறம் அவரது அந்த துறுதுறுப்பு ஞாபகம் வந்து அவரையே கதாநாயகி ஆக்கினோம்.
நான் எல்லா கதாநாயகிகளோடும் இரண்டு படங்களில் நடிப்பேன் . நிகிலாவுடன் இது இரண்டாவது படம். மியா ஜார்ஜுடன் இரண்டாவது படம் நடிக்கவில்லை . விரைவில் அவருடனும் நடிப்பேன் .
எனக்கு படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடு கிடையாது .
வரலாற்றுப் படங்களில் நடிப்பதை விட இயக்கம் ஆர்வம் உண்டு . விரைவில் அதை செய்வேன்.
எனது குருநாதர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தையும்
அவரது குருநாதரும் எங்கள் பிதாமகருமான பாலு மகேந்திரா அய்யா இயக்கத்தில் தலைமுறைகள் படத்தையும் தயாரித்ததை பெருமையாக நினைக்கிறேன் ” என்றார் சசிகுமார்
வாழ்த்துகள் !