ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த் , நடிப்பில் ஞானவேல் இயக்கி இருக்கும் படம் கூட்டத்தில் ஒருத்தன்
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேற்பட்டவர்களோடு எடிட்டர் லியோ ஜான் பால் , ஒளிப்பதிவாளர் பிரமோத் , கலை இயக்குநர் கதிர் , சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரையிடப்பட்ட முன்னோட்டம் பாடல்கள் சிறப்பாக இருந்தன.
நிகழ்வில் பேசிய ப்ரியா ஆனந்த் ”நான் இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் முன் எந்தப் படத்திலும் இனி நடிக்கக் கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை இருந்தது.
கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது.
மிகச் சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். நிவாஸ் கே பிரசன்னாதான் படத்துக்கு இசை என்றதும்,
எனக்கு நல்ல காதல் பாடல்கள் கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது” என்றார்
எஸ்.ஆர்.பிரபு தன் பேச்சில் ” கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் இதுவரை யாரும் பேசாத மிடில் பெஞ்சர்ஸ் வர்கக்கத்தைப் பற்றிப் பேசும் படமாகும்.
இந்த படத்தின் கதை கேட்டதும் நிச்சயம் இந்த படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். பல பிரச்சனைகளைத் தாண்டி ,
தடைகளைத் தாண்டி கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள்தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள்.
மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. மக்களுக்காகத்தான் சினிமா , சினிமாவுக்காக மக்கள் அல்ல “ என்றார்
அசோக் செல்வன் தன் பேச்சில் “கூட்டத்தில் ஒருத்தன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாதான்.
என்னுடைய அக்காவின் திருமணத்தை முன்னிட்டு நான் நிவாஸ் கே பிரசன்னாவுக்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன்.
அப்போது அவரிடம் அவர் என்ன? என்ன ? படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கேட்டேன் அப்போது இந்த படத்தை பற்றியும் இந்த படத்தின் கதையை பற்றியும் என்னிடம் கூறினார்.
கூடத்தில் ஒருத்தன் படத்தின் கதை சுருக்கத்தை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. என்னென்றால் நானும் இப்படத்தின் கதையில் வருவது போல் ” மிடில் பெஞ்சர் “தான்.
கூட்டத்தில் ஒருத்தன் கதைக்கு கதாநாயகன் முடிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டு நான் இயக்குநர் ஞானவேல் அவர்களை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன்.
அவரை சந்தித்து நான் ‘கூட்டத்தில் ஒருத்தன் ‘ கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான். என்னோடு ஒத்துப்போகும் கதையில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றேன்.
இயக்குநர் ஞானவேல் நான் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதித்த பிறகு இந்த கதைக்காக நான் வேற மாதிரி மாற வேண்டும் என்று கூறி என்னை முற்றிலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றினார்.
கூட்டத்தில் ஒருத்தன் முதல் பார்வை போஸ்டரை பார்த்த என்னை தந்தையால் அதில் இருப்பது நான்தான் என்று கண்டுபிடிக்கவில்லை.அதே போல் கூட்டத்தில் ஒருத்தன் படப்பிடிப்பு ஒரு கல்லூரியில் நடைபெற்றது .
கேரவனில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் கல்லூரிக்குள் நான் நுழைய முயன்ற போது வாட்ச் மேன் என்னை உள்ளே விடவில்லை. அவர் என்னிடம் உள்ளே ஷூட்டிங் நடக்கிறது அங்கே செல்ல கூடாது என்று கூறினார்.
அதன் பின் படக்குழுவினர் வந்துதான் என்னை அவரிடம் இவர்தான் இப்படத்தின் ஹீரோ என்று அறிமுகம் செய்து உள்ளே அழைத்து சென்றனர்.
இதுவே நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் ,
கூட்டத்தில் ஒருத்தன் மிகவும் பாசிடிவான திரைப்படமாக இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல எண்ணத்தை விதைக்கும். தெகிடி படம் போலவே
இந்த படத்துக்கும் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிகப்பெரிய பலம். என்னுடைய வெற்றியில் நிவாசுக்கு ஒரு தனி இடம் உள்ளது. இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன்.
எப்போதும் மிகச்சிறந்த படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களோடு பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி.
ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் முதல் பெஞ்ச் மாணவி வேடம் அந்த வேடத்துக்கு அவர் சரியாகப் பொருந்தியுள்ளார்.
அவர் எப்போதும் செட்டில் கலகலப்பாக இருப்பார். அவரோடு இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்” என்றார்
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தன் பேச்சில் ”கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படமாகும்.
இயக்குநர் கதை சொல்ல என்னை அணுகியபோது நான் அவரிடம் ஸ்கிரிப்டை படிக்க வேண்டும் என்று கேட்டேன். படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நானும் பள்ளியில் படிக்கும் போது மிடில் பெஞ்சர்தான்.அதனால் கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான கதையாக அமைந்தது.
இந்தப் ” ஏன் டா இப்படி ” பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது.அந்த பாடலை எஸ்.பி.பால சுப்ரமணியம் சார் பாடியுள்ளார்.இந்த பாடலை ஒரு வித்தியாசமான முயற்சியாக செய்தோம்.
படத்தில் ஹீரோவைப் பற்றி விவரிக்கும் பாடலாக இது இருக்கும். கிப்ட் சாங் என்ற பாடல் வெளிவந்து இணையதளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.
அந்த பாடலில் சூர்யா , சிவ கார்த்திகேயன் , ஆர்யா , விஜய் சேதுபதி போன்ற பலர் தோன்றி உள்ளனர். . அசோக் செல்வனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி .
இயக்குநர் ஞானவேல் அவர்கள் இப்படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். அடுத்ததாக கும்கி -2 , ” சேதுபதி ” குழுவுடன் ஒரு படம் என்று பயணித்து வருகிறேன். லைவ் கான்செர்ட் பலவற்றில் நான் பணியாற்றியுள்ளேன்.
அப்படி லைவில் பணியாற்றும் போது ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை நாம் நேரில் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும்.
அந்த அனுபவம் இன்று கைகொடுக்கிறது ரசிகர்கள் நாம் எப்படி இசையமைத்தால் ரசிப்பார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது ”என்றார்
எல்லோருக்கும் அறிமுகம் கொடுத்துப் பேசினார் இயக்குனர் ஞான்வேல்






