நாடெங்கும் எத்தனையோ அனாதை இல்லங்கள் . முதியோர் இல்லங்கள் . அவற்றில் உணவு உடை முதலிய அடிப்படை வசதிகளுக்காகவும் கல்வி போன்ற ,முன்னேற்ற வசதிகளுக்காகவும் ஏங்கும் உள்ளங்கள் .
அவைகளில் கூட நகர்ப் புறங்களில் உள்ள இல்லங்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதால் பல உதவும் உள்ளங்களின் பலன் அவைகளுக்கு ஓரளவாவது கிடைத்து விடுகிறது .
ஆனால் நகர்ப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அநாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் இருக்கும் காய்ந்த வயிறுகளுக்கு கஞ்சி கிடைப்பதே கஷ்டம் .
காரணம் அவர்களைப் பற்றி அதிகம் யாருக்கும் தெரியாது . பாதை தெரிந்தால்தானே உதவுவதற்கு பாதங்கள் போகும் .
அப்படி, இருப்பது தெரியாமல் இருக்கும் இல்லங்களைத் தேடி சென்று உதவுவது எவ்வளவு பெரிய அறிவார்ந்த மனிதாபிமானம் !
அப்படி ஒரு பணியை செய்யும் வகையில், அநாதை குழநதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் , ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு ,
அவர்கள் இருக்கும் இல்லங்களுக்கே சென்று .செய்யும் அமைப்புதான் குழலோசை அறக்கட்டளை சென்னை பாடியில் இருக்கிறது இந்த அமைப்பு .
எஞ்சினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த நாற்பது நல்ல உள்ளங்களால் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு,
சென்னைக்கு வெளியே திருநின்றவூர் , எண்ணூர் . வேலூர் பகுதிகள் என்று, வெளிச்சத்துக்கு வராத முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு உதவி என்னும் விளக்கேற்றி வருகிறார்கள் .
எம். ராஜேஷ் என்பவரை நிறுவனர் மற்றும் தலைவராகவும் , வி. கோபால கிருஷ்ணன் என்பவரை செயலாளராகவும் ஜே.ராஜேஷ் என்பவரை பொருளாளராகவும் கொண்டு, குழலோசை இயங்கி வருகிறது
இந்த அமைப்புக்கு திரையுலகக் கலைஞர்கள் பலர் உதவி வருகிறார்கள் .
தேவை மிக்க உதவிகளை செய்து வரும் இந்த குழலோசை அமைப்பு ஒவ்வொரு வருடமும் இசைக் கச்சேரி, ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி பாட்டுப் போட்டி மிமிக்ரி இவற்றை நடத்தி ,
நன்கொடை வசூலித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள் . சென்ற ஆண்டு இது போல நிகழ்ச்சி நடந்தது
அந்த வகையில் குழலோசை அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் கலை நிகழ்ச்சிகளின் மூலம் நன்கொடை திரட்டும் நிகழ்ச்சியும் சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது .
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றதோடு ஒரு லட்ச ரூபாயை குழலோசை அமைப்புக்கு நன்கொடை வழங்கினார், டார்லிங் 2 மற்றும் விதி மதி உல்டா படத்தின் நாயகன் ரமீஸ் ராஜா .
விழா நிகழ்வுகளை ரமீஸ் ராஜாவின் மனைவி ஜெனிபர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
இவர் தவிர நடிகர் சிரிஷ், கதை திரைக்கதை வசனம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் , சான்ட்விச் ஸ்கொயர் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தன்வீர் ஆகியோர் நன்கொடை அளித்துள்ளார்கள் .
நிகழ்ச்சியில் ரமீஸ் ராஜா அவரது மனைவி ஜெனீபர், நடிகர்கள் சென்றாயன் , சந்தோஷ் பிரதாப், நடிகை மாயா ஆகியோரோடு,
கலையரசன், காளி வெங்கட், மைம் கோபி, அஷ்வின் , சிரிஷ், இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, சதீஷ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
உடலை ஒரு வளையம் தொடர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் நிலையில் பரத நாட்டியம் கரகம ஆடி உலக சாதனை புரிந்த கோட்டீஸ்வரி ,
அதே நிகழ்ச்சியை மேடையில் நடத்திக் காட்டி சிலிர்க்க வைத்தார் . இது போல பல சிறப்பான கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன .
ஹெச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட நிலையில் தம்மைப் போல பாதிக்கப் பட்டோருக்கு உதவும் இல்லம் ஒன்றை, பல கோடி ரூபாய் நன்கொடை திரட்டி சிறப்பாக நடத்தி
பலரையும் பரமாரித்து வரும் நூரி என்ற திருநங்கை, இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார்
குழலோசை அமைப்பு பற்றியும் இந்த நிகழ்ச்சி பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ரமீஸ் ராஜா ” முழுக்க முழுக்க சுயநலம் இல்லாத சேவை மனதுடன் இயங்கும் அமைப்பு இது .
சென்னைக்கு வெளியே ஏழு இல்லங்களை இவர்கள் பராமரிக்கிறார்கள் . அங்குள்ள அநாதை குழநதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் , ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு,
வேண்டிய உணவு , உடை இருப்பிடம் ,மருத்துவக் கட்டணம், நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் கட்டுவது ,
புத்தகங்கள் வாங்கித் தருவது போன்றவற்றை முழு மனதுடன எந்த சார்பும் இன்றி செய்கிறார்கள்
இது தவிர அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவர் மட்டுமே உள்ள பிள்ளைகளுக்கும் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட — ஆதரவு இல்லாத குழநதைகளுக்கும் உதவி,
இவை தவிர தவிர பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் , ரத்த தானம், கற்றல் நிகழ்ச்சிகள், மரம் வளர்ப்பது சுற்றுப் புறத்தை பாதுகாப்பாக வைப்பது பற்றிய பயிற்சிகள்,
பொது ஆலோசனை, தகவல் பரிமாற்றம் , ஆபத்துக் காலத்தில் உடனடி உதவி என்று , பல நல்ல சேவைகளை செய்கிறார்கள் . எனவே இந்த அமைப்புக்கு செய்யும் உதவி சரியான உதவியாக இருக்கிறது ” என்றார் .
குழலோசை அமைப்பின் செயலாளர் கோபால கிருஷணன் நம்மிடம் ” அண்ணா நகரில் ஓர் அநாதை இல்லம் இருந்தால் அது எல்லோருக்கும் தெரியும் . அதற்கு உதவிகள் கிடைக்கும் .
ஆனால் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இல்லங்கள் அப்படி இல்லை . எனவேதான் நாங்கள் அப்படிப்பட்ட இல்லங்களை,
எங்கள் குழலோசை அமைப்பின் மூலம் தேர்ந்தெடுத்து உதவுகிறோம் . உதவ விரும்புபவர்களை அறிமுகப்படுத்துகிறோம்
அப்படி ஒரு இல்லத்துக்கு போதுமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் நிலை வந்ததும் அதை உதவுவோரிடம் ஒப்படைத்து விட்டு வேறு இல்லத்தை தேடிப் போய் உதவ ஆரம்பித்து விடுவோம் .
அதற்கான தொடர் தேடல்களிலும் எப்போதும் இருப்போம் . விரைவில் இன்னும் இரண்டு இல்லங்களை இணைக்க இருக்கிறோம்
எங்கள் இல்லத்துக்கு பணம் உதவிதான் செய்ய வேண்டும் என்று இல்லை . திறமை உதவி சேவை உதவியும் செய்யலாம் .
இந்த கலை நிகழ்ச்சிக்கு கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்கிறோம் . இதில் கலை நிகழ்ச்சி நடத்தும் எல்லோருமே அப்படி,
பணம் வாங்காமல் இலவசமாக நிகழ்ச்சி நடத்தி திறமை உதவி செய்கிறார்கள் . கோட்டீஸ்வரி கூட அப்படிதான் இன்று நடன நிகழ்ச்சி நடத்தினார்.
இது தவிர இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்துதல், சமைத்துப் போடுதல் , போன்ற சேவை உதவிகளையும் செய்யலாம் ” என்றார் .
குழலோசை அமைப்பின் பொருளாளர் ஜே. ராஜேஷ் ” போன வருடம் நடந்த கலை நிகழ்ச்சியில் ஐநூறு டிக்கட்டுகள் மற்றுமே விற்றன . இந்த வருடம் ஆயிரத்து ஐநூறு டிக்கட்டுகள் விற்றுள்ளன .
ரமீஸ் ராஜா போன்ற திரைப் பிரபலங்கள் பண உதவி செய்வதோடு, நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதால் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கூடுகிறது .
இன்னும் நிறைய உதவி தேடும் உள்ளங்களுக்கு உதவ முடியும் என்ற சந்தோசம் வருகிறது ” என்கிறார் .
நெகிழ்ந்து போகிறது மனசு
குழலோசை தொடர்ந்து ஒலிக்கட்டும் . உதவ விரும்பும் உள்ளங்கள் அதில் உருகி உதவட்டும் . தேவைப்படும் உயிர்கள் பலன் பெறட்டும் !



