கேமராவுக்குப் பின்னால் ஒளிப்பதிவாளராக அசத்திக் கொண்டு கேமராவுக்கு முன்னால் வெகு ஜன ரசிப்பு ஹீரோவாக ஜொலிப்பவர் நட்டி என்கிற நட்ராஜ்.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் முதல் வருண் தேவ் வரை அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருப்பவர் நட்டி (எ) நட்ராஜ்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட 21 படங்களுக்கு இதுவரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தவிர 1000 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும்,
அறுபதுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழில் நாளை என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து மிளகா, சக்கர வியூகம், முத்துக்கு முத்தாக, கதம் கதம், மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை போன்ற படங்களிலும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
நிவின் பாலியுடன் அவர்கள் மற்றும் தற்பொழுது வெளியாக உள்ள எங்கிட்ட மோதாதே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
எங்கிட்ட மோதாதே படம் பற்றி பேசும் நட்டி ” கமல் – ரஜினி என்ற இரண்டு பெரிய நாயகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் பிரச்சனை எப்படி அரசியலாக மாறுகிறது என்பதுதான், என்கிட்ட மோதாதே படத்தின் கதை.
1987 ஆம் ஆண்டு கமல் சார் நடித்த நாயகன் படமும் ரஜினி சார் நடித்த மனிதன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது .
தமிழகத்தில் பல ஊர்களில் ஒரே தியேட்டர் காம்ப்ளகசில் வெளியானது . பல ஊரில் ரசிகர் மன்ற மோதல்கள் நடந்தன. அப்படி அந்தப் படம்,
திருநெல்வேலி நகரில் ஒரே தியேட்டர் காம்ப்ளக்சில் வெளியான போது அங்கு நடந்த சில சம்பவங்கள் அதில் நடந்த அரசியல் விவகாரங்களே இந்தப் படம்
படத்தில் நான் ரஜினி சாரின் ரசிகனாக நடித்துள்ளேன் .எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார் . அவரும் ரஜினி ரசிகையாக வருகிறார் .
கதைப்படி சஞ்சிதா ஷெட்டியின் அண்ணனாக நடிக்கும் ராஜாஜி கமல் ரசிகராக வருகிறார்
இந்த படத்தில் நான் கட் அவுட் வரையும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சினிமா ரசிகர்களின் பிரச்சனை எப்படி அரசியலாக மாறுகிறது …
அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அந்த அரசியல் வாதிகளை ரசிகர்கள் எப்படி சமாளித்து பிரச்சனையிலிருந்து வெளியே வருகிறார்கள் என்பதை எதார்த்தமாக சொல்லும் படம் இது ” என்கிறார் .
“படத்தில் நீங்கள் ரஜினி ரசிகர் , இன்னொருவர் கமல் ரசிகர் எனும்போது வசனந்த்தில் நீங்கள் கமல்ஹாசனை திட்டுவது போல அல்லது விமர்சிப்பது போல காட்சிகள் வருமே .
அந்த தர்மசங்கடத்தை எப்படி சமாளித்தீர்கள்?” என்றேன்.
” இல்லை. படத்தில் அப்படி ஏதும் காட்சிகள் இல்லை. அவரவருக்கு பிடித்த ஹீரோவை அவரவர் கொண்டாடுவது போலத்தான் காட்சிகள் வருகிறது .
தவிர படத்தில் தொழில் , நட்பு , காதல் , பகை , இவையே பிரதானம் ” என்றார் நட்டி




