மகளிர் மட்டும் @ விமர்சனம்

 2 டி  எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா , கிரிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் தயாரிப்பில்,

ஜோதிகா , ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா பொன்வண்ணன் , கவுரவத் தோற்றத்தில் மாதவன், விதார்த், லுத்புதீன்

இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல் நடிப்பில் , குற்றம் கடிதல் படத்தைக் கொடுத்த பிரம்மா இயக்கி இருக்கும் படம் மகளிர் மட்டும் .

பெருமை  கிட்டுமா ? பார்க்கலாம் . 

ஆவணப் பட இயக்குனரும் பெரியாரியவாதியுமான பிரபாவதியும் (ஜோதிகா) அவளது வருங்காலக் காதல் கணவனின் ( மாதவன் ) அம்மாவும்,
 
 கணவனை இழந்தவருமான  கோமாதா என்கிற கோமதியும் (ஊர்வசி) இப்போதே ஒரே வீட்டில் நெருங்கிய தோழிகளாக வாழ்கிறார்கள் .  
 
கத்தாரில் நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் சமையல் கலைஞனாக பணியாற்றும் மகனோடு ஒரு நிலையில் ,
 
மருமகள் போய் விடுவாள் என்ற எண்ணத்தில் இருக்கும் கோமாதாவின் மனதில் ஒரு பெரியகுறை உண்டு . 
 
சிறுவயதில் கட்டுப்பாடு மிக்க கிறிஸ்தவப் பள்ளியில்  ஹாஸ்டலில் தங்கிப் படித்த கோமாதாவுக்கு ராணி அமிர்தகுமாரி, சுப்புலட்சுமி என்று இரண்டு தோழிகள்.
 
ஒவ்வொருவரும் ஒரு வகையில் குடும்பத்தின் அன்பை இழந்த காரணத்தால் மூவரும் உயிருக்கு உயிரான தோழிகளாக பழகுகிறார்கள் . 
 
பசு மாட்டுக்குப் பிரசவம் பார்க்கிறார்கள் . சிறு சிறு தவறுகள் செய்து சிஸ்டர் மேடத்திடம் சிக்குகிறார்கள் . 
 
கமல் , ரஜினி ரசிகைகளாக மட்டுமே  பிரிந்து  கொள்ளும் இவர்கள்  அவள் அப்படித்தான் படம் வெளியான தினத்தன்று –
 
சினிமா பார்க்கும் ஆசையில் ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்து   தியேட்டருக்குப் போக ,  விஷயம் அறிந்து அங்கு வரும் சிஸ்டர் மேடத்திடம் மாட்டிக் கொள்கிறார்கள் . 
 
அடுத்த நாள் ஒரு மழை நேரத்தில் சுப்புலக்ஷ்மியின் பெற்றோரும் ராணி அமிர்த குமாரியின் பெற்றோரும்,
 
 தத்தம் மகளை லுக்கட்டாயமாக இழுத்துப் போய் விட,  உயிர் நட்பு ஒரு நிகழ்வில் பிரிக்கப் படுகிறது . 
 
அதன் பிறகு 38 வருடங்களாக தன் தோழிகளைப் பார்க்காத  கோமாதாவுக்கு அது பெரிய குறை . 

அதை உணரும் இன்றைய தோழியும் வருங்கால மருமகளுமான பிரபாவதி, தனது கலப்புத் திருமண சேவை, ஆணவக் கொலைகளை தடுக்கும் வேலை , பழங்குடி மக்கள் நலன்,

– இவற்றோடு தனது ஆவணப் பட வேலைகளுக்கும் இடையே கோமாதாவின் தோழிகளை முகநூல் மூலம் கண்டு பிடிக்கிறாள்.
 
வட இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கட்சியின் லோக்கல் புள்ளியாக திகழும் கோதண்டராமனுக்கு (நாசர்),
 
 மனைவியாக வாழும் ராணி அமிர்தகுமாரியை (பானுபிரியா ) முகநூல் மூலம் கண்டு பிடிக்கிறார்கள் . 
 
கோதண்டராமனும் அவரது மூத்த மகன் கார்த்தியும் (பாவல்) பெண்களை மனிதராகவே மதிக்காத ஆணாதிக்கவாதிகள் . மிருக குணம் கொண்டவர்கள் .
 
இளையமகன் பாலாஜியும் (அம்புலி கோகுல்) மகளும் கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலை . 
 
தமது  கட்சியின் இன்னொரு அரசியல்வாதியை எதிர்த்து எப்படியாவது கவுன்சிலர் சீட்டை பிடித்து விட வேண்டும் என்பது கோதண்ட ராமன் மற்றும் கார்த்தியின்  திட்டம் .
 
 பிரிந்தவர் கூடிய நிலையில் போனில் கோமாதாவும் ராணியும் பேசி அழுது நெகிழ்ந்து மகிழ்கிறார்கள் . 
 
தொடர்ந்த பிரபாவதியின் முகநூல் தேடலால் ஹைதராபாத்தில் சுப்புலட்சுமி (சரண்யா பொன்வண்ணன் ) இருப்பது தெரியவருகிறது . 
 
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அம்மாவுக்கு பயந்து மறுத்து , சுப்புவைக் கல்யாணம் செய்து கொண்டு —  
 
மன சாட்சியோ நேர்மையோ தனித்தன்மையோ  இல்லாத –சுய நலம் மட்டுமே பார்த்து வாழ்கிற  குடிகார கணவனுக்கு ( லிவிங்ஸ்டன்) வாக்கப்பட்டு,  
 
கர்ப்பத்தில் முதல் குழந்தை பெண்ணாக உருவான காரணத்தால் வலுக்கட்டாயப்படுத்தி கர்ப்பம் கலைக்கப்பட்டு , 
 
 அடுத்து குழந்தை பிறக்க முடியாத நிலையில் மலடி என்ற அவச் சொல் சுமந்து— 
 உடல்நிலை சீர்கெட்டு படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரை,
 
 கவனித்துக் கொண்டு  வாழும் வாழ்க்கையில் வெறுமையாக இருக்கிறாள் சுப்புலட்சுமி . 
 
ஜார்க்கண்டில் ஆவணப் பட வேலைக்காக தன் குழுவோடு செல்ல வேண்டிய  பிரபாவதி அதற்கும் முன்பாக,
 
 அதை விட முக்கிய வேலையாக கோமாதாவையும் சுப்புவையும் அழைத்துக் கொண்டு ராணியைப் பார்க்க போகிறாள்
 
பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆணாதிக்க மனோபாவமும் மிருக குணமும் கொண்ட ராணியின் வீட்டுக்குள் இவர்கள் நுழைகிறார்கள் . 
 
தோழிகள் சந்திப்பு மகிழ்ச்சி நெகிழ்ச்சி !
 
அந்த நேரத்தில் ராணி இருக்கும் பகுதியின் கவுன்சிலர் தேர்தலில் அந்த பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட ,
 
வேண்டா வெறுப்பாக ராணியை நிறுத்துகிறது அந்தக் குடும்பம் .  ஜெயித்தால் வீட்டில் சமையல் செய்து கொண்டு,
 
 கணவன் நீட்டிய இடத்தில் கையெழுத்து மட்டுமே போடுகிற அதே இந்திய பெண் கவுன்சிலர் பதவி !
 
கோபம் கொண்ட சக அரசியல்வாதி , ராணி குடும்பத்தில் ராணி உட்பட யாரையாவது கொலை செய்யவும் தயங்கமாட்டான் என்பது நிலைமை. 
 
ராணி அந்த வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக இருப்பதைக் காணும் பிரபாவதி,தோழிகள் மூவருக்கும் சந்தோஷமான பயண அனுபவம் தருவதற்காக ,
 
பழங்குடி மக்கள் வாழும் ஒரு அழகான அருவியை நோக்கி வட இந்தியா முழுக்க  நீண்ட ஒரு கார் பயணத்தில் அழைத்துச் செல்கிறாள். 
 
கேட்டால் அனுமதி கிடைக்காது என்பதால் ராணி சொல்லாமல் வந்து விட, முதலில் சக அரசியல்வாதியை சந்தேகப்பட்டு ,
 
பிறகு அம்மாவின் பயணம் பற்றி அறியும் முரட்டு மகன் கார்த்திக் , கடும்  கோபத்தோடு ஆயுதங்களுடன் கிளம்புகிறான் . 
 
இங்கே தோழிகள் சந்தோஷ போதையில் கணவன் மற்றும் குடும்பத்தார் செய்த கொடுமைகளை குத்துச் சண்டைப் பொதியைக் குத்திப் பழிவாங்கி இலகுவாக ,
 
அங்கே கார்த்திக்  மிலிட்டரி, பெண்கள் ஆயுதப்படை இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறான் . 
 
ஒரு நிலையில் அருவிப் பகுதியில் இவர்களை அவன் சந்திக்க, 
 
 அப்புறம் என்ன நடந்தது ? சுப்புவின் கணவன் மற்றும் மாமியார் நிலை என்ன ? திட்டமிட்டபடி அங்கு வருவதாக சொன்ன —
 
கோமாதாவின் மகனும் பிரபாவின் வருங்காலக் கணவனுமான சுரேந்தர் அங்கு வந்தானா ?
ஆம் எனில் நடந்தது என்ன? இல்லை எனில் நடந்தது என்ன என்பதே இந்த மகளிர் மட்டும் !
போற்றுதல்கள்  இயக்குனர் பிரம்மா !
 
தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் குறிப்பாக கதாநாயகி போன்ற முக்கிய பெண் கதாபாத்திரங்கள் , 
கழுத்துக்கு மேல் கவனிக்கப் படுவதே இல்லை என்ற அசிங்கத்தை அடித்து நொறுக்கிய படைப்பாண்மைக்காக! 
எம் ஜி ஆர் முதல்வர் ஆன பிறகும் மகாதேவி பட போஸ்டரில் சாவித்திரி முகத்தை பெரிதாகப் போட்டு,
 
 எம் ஜி ஆர் முகத்தை சின்னதாகத்தான் போடுவார்கள் . காரணம் அது மகாதேவி என்ற பெண் கதாபாத்திரத்தின் படம் !
 
சிவாஜி என்ற நடிப்பு சிங்கத்தை வைத்துக் கொண்டு இணையான கேரக்டரில் பாலாஜியை வைத்துக் கொண்டு , படித்தால் மட்டும் போதுமா படத்தின் இறுதிக் காட்சியை ,
 
சாவித்ரியின் முகத்தில் முடிப்பார் பீம்சிங் . காரணம் அது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மன்னிக்கும் குணத்துக்கு மகுடம் சூடும் படம் . 
 
அப்படி எல்லாம் இருந்து பின்னர் நாம்  இழந்த பெருமையை இந்தப் படத்தில் மீட்டெடுத்து இருக்கிறீர்கள் . 
 
பாராட்டுகள் இயக்குனர்  பிரம்மா ! 
 
சூர்யா போன்ற பெரிய நடிகரின் தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்புக் கிடைத்த பிறகும் உங்களுக்கு முதல் படம் கொடுத்து உங்களுக்கு வெளிச்சம் தந்து,
 
 ஒரு நிலையில் இருட்டுக்குள் போன கிறிஸ்டி சிலுவப்பனை இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த பண்புக்கு .
 
நன்றி உணர்ச்சி இல்லாதவன் எப்படி நல்ல கலைஞனாக இருக்க முடியும் ?
வாழ்த்துகள் இயக்குனர் பிரம்மா !
                                                                                                           இயக்குனர் பிரம்மா

“மாமா..  மச்சி.. மாம்ஸ் …மாப்ள … “என்று ஆண்களின் நட்பு குறித்தே சிறப்பாகவும் மோசமாகவும் மாறி மாறி சித்தரித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில்,

 சில எளிய பெண்களின் நட்பை அடிப்படையாக வைத்து ஒரு படம் கொடுத்ததற்காக ! (இதற்கு முன்பு,
 
 பாரதிராஜாவின்  மண்வாசனை படத்தில் இரண்டே காட்சிகளில் மட்டூம் அழுத்தமாக வந்த விஷயம் அது )
 
தூய்மை இந்தியா திட்டம் குறித்த சுவர் விளம்பரப் பின்னணியில் கழிவு நீர் சாக்கடைக்குள் மூழ்கி சுத்தம் செய்யும் தொழிலாளி மேலே எழுந்து வாயில் உள்ள கழிவு நீரை,
 
 எறிந்து உமிழும் காட்சியும் அதன் கருத்தாக்கமும் அபாரம்அதை புரிந்து கொள்ளத்தான் உணர்வு சார்ந்த அறிவு வேண்டும் . 
 
ஒரு தமிழ் சினிமா கதாநாயகியை பெரியாரியவாதியாக பார்க்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணை ஏது ? 
 
பெண்ணுரிமை காரணமாக  ஆட்சி அதிகாரத்துக்கு வரும் பல பெண்களும் வீட்டு ஆண்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு,
 
 கொடுக்கிற பணத்தை பீரோவில் வைத்து விட்டு பத்துப் பாத்திரம் தேய்க்கப் போகும் பாவைகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்லும் இடத்தில்,
 
 படைப்பாளியின் வலியும் ரசிகனின் வலியும் ஒன்றுக்கு ஒன்று கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொள்கிறது . 
 
இன்று பல வீடுகளில் சாப்பாட்டு நேரச் சண்டைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் — சாப்பாட்டில் தலை முடி கிடக்கும் விசயத்தில்,  
 
ஆண்களுக்கு இருக்கும் ஆணவத்தை ஒரு குட்டு மூலம் சொல்லும் காட்சி, அந்த எண்ணம் உள்ள ஆண்கள் அனைவரின் தலையிலும் மானசீகமாக கொட்டுகிறது .
 
(தாம்பத்ய நேரத்தில் மட்டும் அது  மணம் வீசும்  செறி எயிற்று அரிவை கூந்தலாக இருக்குல்ல ?) சிறப்பு ! 
 
தாய்மையின் இழப்பை, பெண்களின் சக்தியை பயண வழியில் பாவல் உணரும் காட்சிகள் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை
 
 (இதில் ஒரு பிரச்னை இருக்கிறது . அதை விமர்சனத்தின் கடைசியில் பேசுவோம் )
தோழிகளின் அந்த 38 வருடம் முந்தைய  நினைவுகூரல்(பிளாஷ்பேக்)  காட்சிகள் ,
 
அந்தப் படமாக்கல் , அதற்கான நிறத் திண்மை (tone) ஒவ்வொரு நொடியும் அழகியல் கவிதையாக விரிகிறது . ரம்மியம் ! ரம்மியம் !! 
                                                                  ஒருவர் போட்டோதான் கிடைச்சது . மற்ற இருவரும் மன்னிக்க !

ரஜினி ரசிகை கமல் ரசிகை கலந்த இந்தத் தோழிகள் சேர்ந்து பார்ப்பதற்கு இளமை ஊஞ்சலாடுகிறது , ஆடு புலி ஆட்டம் என்று பல படங்கள் இருக்கு .

ஆனால் அவள் அப்படித்தான் படத்தை தேர்ந்தெடுத்த பிரம்மாவின் கலை நேர்மை பாராட்டுக்குரியது .
 
ஏனெனில் ஆணாதிக்க மனப்பான்மையின் கோரப் பற்சக்கரங்களில் சிக்கி சிதைந்த ஒரு நேர்மை மிக்க,
 
 சுதந்திர உணர்வு உள்ள பெண்ணின் அவலத்தை இதயம் துடிக்கச் சொன்ன படம், ருத்ரைய்யா எழுதி இயக்கிய அவள் அப்படித்தான் . 
 
சிறப்பு பிரம்மா !
 
பெண் சிசுக் கொலை , மலடி பிரச்னை , ஆண்களின் குடிப்பழக்கம் பெண்களுக்கு தரும் வெறுமை , ஆண்களின் பேடித்தனம் , பெண்மையின் சக்தி….
இப்படி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களை பேசிக் கொண்டே போகும் விதம் சிறப்பு மற்றும் செய்நேர்த்தி !
நாம் பழங்குடிகளை நாகரிகம் இல்லாதவர்கள் என்று சொல்கிறோம் . ஆனால் ஆண் பெண் சமத்துவத்தில் பழங்குடி இன மக்களுக்கு இருக்கும்,
 
 நாகரிகம் , பண்பாடு , கலாச்சாரம் , பெருந்தன்மை எல்லாம் நமக்குத்தான் இல்லை . உண்மையில் நாம்தான் ,
 
அந்த விசயத்தில் நாகரிகமற்ற ஆணாதிக்கக் காட்டுமிராண்டிகள் என்று நிறுவும் காட்சி  கொண்டாடுதலுக்கு உரியது .
 
ஜிப்ரானின் பாடல் இசை துள்ளித் திரிகிறது . பின்னணி இசை சிறு சிறு உணர்வுப் பள்ளங்களையும் அபாரமாய் நிரப்பி படத்துக்கு பலம் சேர்க்கிறது 
கதை நிகழும் கால கட்டங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் ஆகட்டும் … சூழலின் உணர்வுகளை திரையில் விரிப்பதாகட்டும்…மணிகண்டனின் ஒளிப்பதிவு மணி மணியாய் ஜொலிக்கிறது . 
உமாதேவி எழுதி இருக்கும் அடி வாடி திமிரா பாடல்  தடை உடைத்து நடைபோட, பிரம்மா எழுதி இருக்கும்  மூன்று நினைவுகூரல் காலப் பாடல்கள் ,
 
அந்த காலகட்டத்துக்கான தமிழ் திரையின் மண் சார்ந்த வார்த்தைகளோடு மணக்கிறது 
 
படத்தின் அடிப்படைக் கதை என்பது மூன்று வேறு பெண்கள் சம்மந்தப்பட்டது என்றாலும் அதை இணைக்கும்  கதாபாத்திரம்தான்,
 
 நாம் நடிக்க இருப்பது என்ற நிலையிலும் அதை ஏற்று அற்புதமாக நடித்துள்ள ஜோதிகாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் . 
 
அதிலும் அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதத்தில் அவர் காட்டி இருக்கும் மனப்பாங்கு (attitude) பிரம்மிப்பானது . 
 
இது போல நிறைய படங்கள் நடியுங்கள் ஜோதிகா . அதை செய்யாமல் புடலங்காய் நறுக்குவதற்கா போர்வாள்? 
 
நீங்கள் நடித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை . அதுவே உங்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கவும் நல்ல நடிப்பை கொடுக்கவும் உதவும் . 
 
ஆனால்  .. இது போன்ற சமூக அக்கறைக் கதாபாத்திரங்களில் நடிக்கும்போது , உங்கள் நடிப்பில்  இருக்கும்,
 
 மேற்கத்திய பாணி தாக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள் .   உயரங்கள் பல உங்களுக்காக காத்திருக்கின்றன . 
 
ஊர்வசி என்ற நடிப்பு ராட்சசிக்கு பதட்டமில்லாமல் ஈடு கொடுத்துள்ளார்கள் சரண்யாவும் பானுபிரியாவும் .  
 
ஆனால் இவர்களது கதாபாத்திரங்களின் இளவயதுப் பெண்களாக நடித்திருக்கும் அந்த மூன்று பெண்களும் நடிப்பிலும் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார்கள் .
 
(பேரு தெரியல . மன்னிசுக்குங்க கண்ணுகளா !) அவர்களின் நடிப்பில் இயக்குனர் பிரம்மாவின் பயிற்சி உழைப்பும் தெரிகிறது.
 
துளி கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு அட்சர சுத்தமான நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் பாவல்.
 
நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் , குற்றம் கடிதல் படத்திலும் கலக்கிய இவர் . வாழ்த்துகள் !
                                                                                                       பாவல் (வேறு படப் புகைப்படம்)

ஆரம்ப காட்சியில் ஒரு மனைவியின் வேலைச்சுமையை ஒரே ஷாட்டில் கீச்சுக்குரலில் சொல்லும் பெண்ணே ,

 நடிப்பில் அசத்துகிறார் எனும்போது மற்றவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது ? 
 
அந்தக் காலத் தோழிகளோடு பிரபாவை இணைக்கும் அந்தக்  கடைசிக் காட்சியின்  அழகியலை கவிதைத் தன்மையை படைப்பாற்றலை நுண்ணுணர்வை,
 
 எண்ணி எண்ணி சிலிர்க்க வைக்கிறீர்கள் பிரம்மா . டைட்டானிக் படத்துக்குப் பிறகு நமக்குத் தெரிந்து அப்படி ஓர் அற்புதமான இறுதிக் காட்சி  ! 
 
பாராட்ட வார்த்தைகளே இல்லை . 
 
கோமாதாவின் இரண்டு தோழிகளையும் பிரபா மிக சுலபமாக முக நூல் மூலமாகவே கண்டு பிடிப்பது என்பது,
 
என்னவோ முகநூல்தான் சகலமும் என்ற போலி உணர்வை ஏற்படுத்துகிறது . சுப்புவை கண்டுபிடிக்க வேறு வழி யோசித்து இருக்கலாம் 
 
இரண்டாம் பகுதியில் இறுதிக்  காட்சியை அடைவதற்கான நேரம் இன்னும் இருக்கிறது ; அதுவரை நேரம் வளர்க்க வேண்டும் என்பது போல,
 
 சில காட்சிகளை வம்படியாக சொருகிய உணர்வு வருவதால் (அவை நல்ல விசயங்கள் என்றாலும் கூட !)
 
படத்தின் வேகம் குறைவதை தவிர்த்து  திரைக்கதையை நகர்த்தி இருக்கலாம் .
 
அல்லது 
 
ராணியின் மகன் கார்த்திக் தன் பயண வழியில் அடையும் மனமாற்றத்தை இப்படி நேரிடயாக வெளிக்காட்டாமல் அவனை கடுமையாகவே  முரட்டுத்தனமாகவே காட்டி ,
 
அம்மாவையும் அவளது தோழிகளையும் சந்திக்கும் போது அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்ற பதைபதைப்பை வளர்த்து , 
 
கடைசியில் மட்டும் அந்த திருப்புமுனைக் காட்சியை கொண்டு வந்திருந்தாலாவது இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்கும் . தவற விட்டு இருக்கிறார்கள் . 
 
“இந்த பழங்குடி இனத்துல ஆண்கள்தான் வரதட்சனை தரணுமாம்” என்று சந்தோஷமாக ஒரு வசனம்!  வரதட்சணை தருவதே தப்பு எனும்போது,
 
 அதை ஆண் வீட்டார் தருவதையும்  கண்டிக்க வேண்டும்தானே . அது அந்த கதாபாத்திரத்தின்  மன நிலை என்று சொல்லி தப்பிக்க முடியாது பிரம்மா .
 
 சமூக அக்கறைப் படங்களில் அது படைப்பாளியின் குரலாகவே பார்க்கப் படும்.  
 
சுப்புவின் கணவனுக்கும் கோமாதாவின் காதலனுக்கும் உள்ள தொடர்பை கடைசியில் வெளிப்படுத்தாமல்  விட்டது ஏன் .?
 
கடைசியில் சொல்லி இருக்கலாமே . கோமாதாவின் குடும்பமும் சுப்புவின் குடும்பமும் சந்திக்காமலா இருக்கப் போகிறார்கள் ? 
 
வெளிப்படுத்தாமல் விடுவதுதான் அழகு என்றால் , திரைக்கதையில் அப்படி  ஒரு விசயமே தேவை இல்லை .
 
அது ஒன்றும் அரங்கை அதிர வைக்கும் நகைச்சுவையாகவும் அமையவில்லையே ?
 
அப்புறம் … க்கும் … க்கும் …. நியாயமான கோபத்தைக் கூட அளவான போதையில் காட்டுவதும் கூட பெண்ணுரிமையில் வருமா பிரம்மா ?
 
அப்புறம் குடிகாரக் கணவனை கண்டிக்கும் உரிமை எப்படி இருக்கும் ?
 
                                                                                                                              படக் குழு

இப்படி சிற்சில கேள்விகள் எழுந்தாலும் … 

 மிக நேர்மையான பெண்ணியப் படமாக வந்திருக்கும் வகையிலும் 
 
பொதுவாக இது போன்ற படங்களில் சொல்லப் படுவது போல …. புழுவில் இருந்து மனிதன்  வரை ஆண்கள் எல்லாமே ஏ ஏ ஏ … மோசம் என்ற,
 
 வன்மங்கள் இல்லாத படமாக வந்திருக்கும் வகையிலும்….
 
 (ஆண்கள் எல்லாமே மோசம் இல்ல . இந்த சிஸ்டம்தான் சரி இல்ல ” என்று ஒரு வசனம் . இதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கு பிரம்மா !) ….
 
பெண்ணியக் கதைக்கு அப்பாற்பட்டு சாதி ஆணவக் கொலை , பழங்குடி இனம் பற்றிய கருத்தாக்கத்துக்கு மதிப்புக் கூட்டல் ..
 
இப்படி பொது வெளியிலும் சிறப்பான பங்களிப்பைத் தரும் வகையிலும்.. 
 
புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறது படம் . 
 
இப்படி ஒரு படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கு  பாராட்டுகள்  . 
 
மொத்தத்தில்,  மகளிர் மட்டும் …. எல்லோருக்கும் !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
பிரம்மா, ஜிப்ரான், ஜோதிகா , மணிகண்டன், பாவல் , சிறு வயசு தோழிகளாக நடித்துள்ள அந்த மூன்று நடிகைகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *