A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க,
ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்,
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் விக்ரமன், “திடீரென ஏற்பாடு செய்த இந்த விழாவுக்கு வந்ததற்கு விமல் நன்றி சொன்னார். ஆனால் நான் ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை இயக்கியபோது அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்க விமலை அணுகினேன்.
அதற்கு முன் அவருடன் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் நான் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கமாட்டேன். ” என்றார்
இயக்குனர் பேரரசு, “விமலின் இழப்புகளுக்கு ஈடாக இந்தப்படம் லாபம் சம்பாதித்து கொடுக்கும் என்பது உறுதி”. என்றார்.
ரோபோ சங்கர் தன் பேச்சில் ‘ சில படங்களில் நடிக்கும்போதே தெரிந்துவிடும் அது நிச்சயம் ஹிட்டாகும் என்று. அது இந்தப்படத்திலும் தெரிந்தது. மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப்போல, இந்த ‘மன்னர் வகையறா’வும் காமெடியில் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வடிவேலுக்கு எப்படி ‘வின்னர்’ அமைந்ததோ அப்படி எனக்கு இந்தப்படம் இருக்கும்” என கூறினார்.
கதாநாயகி ஆனந்தி பேசும்போது , “இந்தப்படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன்.
நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன்.” என பேசினார்.
இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய் பேசியபோது, “துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து, இந்தப்படத்தில் வேறு ஜானரில் இசையமைத்துள்ளேன்.” என்றார்
இயக்குனர் பூபதி பாண்டியன் “இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம்.
ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார்.
ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார். தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் தன் பேச்சில் “இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது அந்த சமயத்தில் வெளியான விமலின் படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை.
ஆனாலும் கதையின் மீது இயக்குனர் பூபதி பாண்டியன் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொதுவாக விமலின் படங்களுக்கு ஆகும் பட்ஜெட்டைப்போல மூன்று மடங்கு இதற்கு செலவழித்துளோம். ஆனால் இந்த நிமிடம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தின் வியாபாரம் முடிந்து நாங்கள் படத்திற்காக செலவழித்த பணம் திரும்பி வந்துவிட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 83 நாட்கள் நடந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 18 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கியுள்ளோம்.. நிச்சயம் இந்தப்படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
விமல் இந்தப்படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப்படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண்போகாது. 2018ல் அவர் நடிப்பில் 6 படங்கள் தயாராக இருக்கின்றன.
ஜனவரி-17ல் வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி டைரக்சனில் விமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.பொங்கல் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாவது உறுதி. நிறைய படங்கள் வருகின்றதே என சிலர் கேட்டார்கள்.. இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும் பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீசாவது உறுதி” என்றார் சிங்காரவேலன்.
படத்தில் ‘அண்ணனுக்கு பயமில்ல .. அப்பனுக்கும் பயமில்ல.. ஊருக்கும் பயமில்ல .. ஒலகத்துக்கும் பயமில்ல… வாடா ஓடிப்போலாம் ” என்று கதாநாயகி பாடுவது போல ஒரு பாடலை இயக்குனர் பூபதி பாண்டியன் எழுதி உள்ளார் .
இப்படி ஒரு கருத்து மிக்க பாடலை எழுத வேண்டும் என்று அவர் கேட்டு எந்தக் கவிஞரும் எழுத மனமில்லாமல் தெறித்து ஓடி விட்டார்கள் போலிருக்கிறது . அவரே எழுதி விட்டார் . டைட்டிலில் ‘கட்டாயக்கவிஞர் ‘ என்று ஒரு (நாள்)பட்ட பெயரையும் போட்டுக் கொண்டுள்ளார்.
அவரால முடிஞ்ச சமூக சேவ… சமூக சேவ…