எம் ஜி ஆரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி தமிழ் நாட்டை சும்மா தெறிக்க விட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில் எமது அடுத்த தயாரிப்பு ; கிழக்காப்பிரிக்காவில் ராஜு என்று ஓர் அறிவிப்பு வரும் .
ஆம்! உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பிறகு எம்ஜி ஆர் தயாரித்து இயக்க இருந்த படம் அது .
ஆனால் அதற்குள் எம் ஜி ஆர் தேர்தலில் வென்று முதல்வர் ஆகி விட்டதால் அந்தப் படம் தயாரிக்கப்படவே இல்லை . அந்தப் படத்தின் கதை என்ன என்பது இப்போது ஒரு வேளை ஆர் எம் வீரப்பனுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு உண்டு .
நூற்றாண்டு விழா கண்ட எம்ஜிஆரின் கனவுப் படமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் தற்போது அனிமேஷனில் உருவாகிறது.
எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் கல்வியாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் . பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.
அனிமேஷனில் உருவாகும் இந்த படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, டி இமான் இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங்கில், ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, ராக்கி ராஜேஷ் சண்டைப்பயிற்சியாளராக பணி புரிகிறார். இந்த படம் அடுத்த ஆண்டில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா அவரது பிறந்த நாளான இன்று சென்னையில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது.
விழாவில் தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைக்க, உலகநாயகன் கமல்ஹாசன் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். முன்னதாக விழாவில் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய தொகுப்பையும், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் ஒரு முன்னோட்டத்தையும் பட்டனை அழுத்தி துவக்கி வைத்தார் கமல்ஹாசன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் எம்ஜிஆர் பிறந்த நாளில் நடந்த இந்த விழாவில் ஒன்றாக கலந்து கொண்டு சிறப்பித்தது ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆரவாரத்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி விஸ்வநாதன், எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் ஏசி சண்முகம், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குனர் மரியாஜீனா ஜான்சன், ஜேப்பியார் கல்லூரி இயக்குனர் ரெஜினா ஜேப்பியார்,
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன், ராதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் பாஸ்கரன், ராஜேஷ், கே ராஜன், எம்ஜிஆரின் செயலர் பிச்சாண்டி, சசி புரடக்ஷன்ஸ் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி, நடிகை லதா, சச்சு, ஷீலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கவிரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். விழாவில் எம்ஜிஆர் பாடல், நடனம் என கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவை குட்டி பத்மினி தொகுத்து வழங்கினார்.படம் அடுத்த ஆண்டு ஜனவரி 17 எம் ஜி ஆர் பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் என்கிறார் ஐசரி கணேஷ்.
தலைவருக்கு ரொம்ப பிடிச்ச பண்டிகை பொங்கல் . அதனால பொங்கலுக்கே ரிலீஸ் பண்ணுங்க . !