சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தனது எண்பத்தி எட்டாவது படமாகத் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ் , நிக்கி கல்ரானி, லக்ஷ்மி ராய் நடிப்பில் சாய் ரமணி இயக்கி இருக்கும்
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டை முடித்து விட்டு, சூட்டோடு சூடாக அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
கமர்ஷியல் கமர்கட்டாக இருந்த டிரைலரில் ”நான் எல்லாம் பற குப்பம்” என்று ராகவா லாரன்ஸ் திட்டவட்டமாக தலித் அரசியல் பேசுவது கவனிக்க வைக்கிறது . நடனத்திலும் சண்டையிலும் புழுதி பறக்கிறது
நடிகை ஜெய சித்ராவின் மகனும் சில படங்களில் நடித்தவருமான அம்ரேஷ் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும் இந்தப் படத்தின் மூன்று பாடல்களை நிகழ்ச்சியில் திரையிட்டார்கள் .
அவற்றில், குடியிருந்த கோயில் படத்தில் எம் ஜி ஆர் – விஜயலட்சுமி ஆடிய ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலை இந்தப் படத்துக்காக ரீமிக்ஸ் செய்தா பாடலும் ஒன்று.
இந்தப் பாடலுக்கு ராகவா லாரன்சும் நிக்கி கல்ராணியும் ஆடுகிறார்கள் . பாடலின் முடிவில் எம் ஜி ஆரின் போட்டோவுக்கு லாரன்ஸ் பூ போட்டு வணங்க ,
‘பொன்மனச் செம்மல் – புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுவோம்’ என்ற வரிகள் திரையில் ஜொலிக்கின்றன .
இன்னொரு பாடலுக்கு (மட்டும் ) லக்ஷ்மி ராய் ராகவா லாரன்சுடன் ஆடுகிறார் .
நிகழ்ச்சியில் எல்லோரையும் வரவேற்றுப் பேசிய ஆர் வி சவுத்திரி ” இந்தப் படம் போன வருடமே வர வேண்டியது . சில காரணங்களால் தள்ளிப் போனது .
இப்போது நல்ல படியாக பிரச்னைகள் முடிந்து வரும் பதினேழாம் தேதி திரைக்கு வருகிறது . படம் கமர்ஷியலாக சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது ” இந்தப் படம் வெளிவர முக்கியக் காரணமாக இருந்த தமிழ்நாடு விநியோகஸ்தர் கூட்டமைப்புக்கு நன்றி .
பைனான்சியர்கள் தங்களுக்கு வர வேண்டிய பணத்தைக் குறைத்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தனர் .அவர்களுக்கு நன்றி
எல்லோருக்கும் முன்பாக லாரன்ஸ் மாஸ்டர் தனது முழு சம்பளத்தையும் விட்டுக் கொடுக்க முன் வந்ததோடு மேற்கொண்டும் பணம் கொடுக்க முன்வந்தார் .
‘படம் வர வேண்டும் . என் ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை ‘என்பது அவர் நோக்கமாக இருந்தது. அப்புறம்தான் மற்றவர்களும் விட்டுக் கொடுக்க முன்வந்தனர் .
படம் வெளிவர பெரிதும் ஒத்துழைத்த ராதா கண்ணனுக்கு நன்றி .
காஞ்சனா படத்துக்குப் பிறகு லாரன்ஸ் ஒரு உயர்ந்த இடத்துக்கு போனார் . அதை விட உயர்ந்த நிலைக்கு இந்தப் படத்துக்குப் பிறகு முன்னேறுவார் ” என்றார்
லக்ஷ்மி ராய் ” நான் நடனம் ஆடிய பாடலை எனக்கு லாரன்ஸ் மாஸ்டர் அனுப்பி வைத்தார் . பாடல் பிரம்மாதமாக இருந்தது . உடனே ஒத்துக் கொண்டு ஆடினேன் .
அந்தப் பாடல் இப்போதே சூப்பர் ஹிட் ஆனதில் சந்தோசம் ” என்றார் .
இசை அமைப்பாளர் அம்ரேஷ் தன் பேச்சில் ” இவ்வளவு பெரிய சாதனையாளர்கள் சம்மந்தப்பட்ட படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த சவுத்திரி சார், இயக்குனர் , லாரன்ஸ் மாஸ்டர் அனைவருக்கும் நன்றி .
லக்ஷ்மி ராய் நடனம் ஆடிய அந்தப் பாடல் ஹிட் ஆன பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது. படம் சூப்பராக இருக்கிறது ” என்றார் .
அந்தப் பாடலை எழுதிய கவிஞர் சொற்கோ பேசும்போது ” அம்ரேஷ் மிகச் சிறந்த இசை அமைப்பாளராக வருவார். சாய் ரமணி பல்துறை வித்தகர் .
அம்மா கிரியேஷன்ஸ் சிவா சாருக்குள் ஒரு நல்ல பாடலாசிரியர் இருக்கிறார் . லாரன்ஸ் மாஸ்டரின் உழைப்பை திறமையை உதவும் குணத்தை எண்ணி வியந்து போனேன் ” என்றார்
இயக்குனர் சாய் ரமணி தன் பேச்சில் ” படம் தாமதம் ஆனது நல்லது என்றே இப்போது தோன்றுகிறது . லாரன்ஸ் மாஸ்டருக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இப்போது அதிகம் ஆன நிலையில் படம் வருகிறது .
ஆடலுடன் பாடல் கேட்டு பாடலை நாங்கள் இயல்பாக ரீமிக்ஸ் செய்தோம் . ஆனால் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா சமயத்தில் இப்போது அந்தப் பாடலுடன் படம் வருவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார்
முத்தாய்ப்பாகப் பேசிய ராகவா லாரன்ஸ் ” பல்வேறு சிக்கல்களைக் கடந்து இந்தப் படம் வெளிவர உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி .
ஒரு காலத்தில் சவுத்திரி சார் வாக்கிங் போகும் இடம் , அவர் அலுவலகம் , வீடு என்று அவர் போகும் வழிகளில் எல்லாம் அவருக்கு ஒரு வணக்கம் சொல்லக் காத்திருப்பேன் .
அப்படி பல காலம் கடந்த பிறகுதான் அற்புதம் படத்தில் எனக்கு ஒரு பாடல் கொடுத்தார் . இப்போது அவர் படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளதை விட சந்தோசம் வேறு ஏதும் இல்லை .
பொதுவாக எனது படங்களில் நிறைய நல்ல கேரக்டர்களும் நடிகர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன் .
அப்படி காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்தது போல இந்தப் படத்தில் சத்யராஜ் சார் ஒரு நல்ல கேரக்டரில் நடிக்கிறார் .
அம்ரேஷும் சொற்கோவும் நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார்கள் .
ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு ஆடிய போது நிக்கி கல்ராணிக்கு காலில் அடிபட்டு இருந்தது . அதையும் மீறி அவர் சிறப்பாக ஆடிக் கொடுத்தார் .
படத்தில் இன்னொரு கிளாமர் இருக்கட்டும் என்று எண்ணித்தான் லக்ஷ்மி ராயை ஒரு பாடலுக்கு ஆட அழைத்தேன் . அவர் எனது லக்கி ஹீரோயின் .
அப்படி இருந்தும் ‘ஒரு பாட்டுக்கு மட்டும் அழைக்கிறாங்களே…’ என்று எண்ணாமல் வந்து சிறப்பாக ஆடிக் கொடுத்தார் .
இப்போதும் இரண்டு நாட்களாக வந்து தங்கி படத்தின் விளம்பரத்துக்கு உதவுகிறார் . இதை நான் மறக்க மாட்டேன் . தொடர்ந்து எனது பல படங்களிலும் லக்ஷ்மி ராய் இருப்பார் .
இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் .” என்றார்
வாழ்த்துகள் !