
ஓ…போடு…” போன்ற குத்து பாடல்களாகட்டும், “உன்னை பார்த்த பின்பு தான்…” போன்ற காதல் பாடல்களாகட்டும்
அல்லது “ஒவ்வொரு பூக்களுமே…” போன்ற தத்துவப் பாடல்களாகட்டும், “அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…” என்ற குடும்ப உறவுகள் குறித்து சொல்லும் பாடல்களாகட்டும்…
வெவ்வேறு வகையில் தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பரத்வாஜ்.
‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘காதல் மன்னன்’, ‘ஆட்டோகிராப்’, ‘பாண்டவர் பூமி’ என்று சுமார் 100 க்கும் மேற்பட்ட , தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள, பரத்வாஜின் இசையில் உருவாகியுள்ள மூன்று படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த பரத்வாஜ், 1330 திருக்குறள் மற்றும் அதன் அர்த்தங்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டதால் ,
திரைப்படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார்.
தமிழ் மட்டும் இன்றி பிரெஞ்ச், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திருக்குறள்களை பாடலாக்கியவர், அதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாடகர்களை பாட வைத்திருப்பதோடு,
அப்துல் கலாம், சங்கரச்சாரியார் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களையும் திருக்குறளுக்கான அர்த்தத்தை பேச வைத்திருக்கிறார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணியில் ஈடுபட்டவர் தற்போது திருக்குறள் இதை முழுவதுமாக முடித்துவிட்டு,
மீண்டும் திரைப்படங்களில் இசையமைப்பதில் கவனம் செலுத்தி வருவதோடு, மேடை இசை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
பொதுவாக இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான் என்றாலும்,
பரத்வாஜ் ஆரம்பத்தில் மேடை இசை நிகழ்ச்சிகள் மீது பெரிய அளவில் நாட்டம் இல்லாமல் இருந்தார். ஆனால், தற்போது பொதிகை தொலைக்காட்சியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி பலரைக் கவர்ந்துள்ளதால், இனி மேடை இசை நிகழ்ச்சிகள் மீது அதிக ஈடுபாடுகாட்ட முடிவு செய்துள்ளார்.
பொதிகை தொலைக்காட்சி முதன் முறையாக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த ‘இன்னிசை என் உயிர் – பரத்வாஜ்’ என்ற இசை நிகழ்ச்சி ,
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி 12 மணி முதல் 1 மணி வரை பொதிகை தொலைக்காட்சியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து வெளிநாடோ அல்லது உள்நாட்டிலோ, பெரிய அளவிலான நிகழ்ச்சியோ அல்லது சிறிய அளவிலான நிகழ்ச்சியோ,
எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்துவிதமான மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்துவதென்று முடிவு செய்துள்ள பரத்வாஜ்,
தற்போதைய காலக்கட்டத்தில் பாடல்கள் புரியும்படி இல்லாமல் ஏனோ தானோ என்று இருக்கிறது, என்று வருத்தப்பட்டதோடு,
”ஒரு திரைப்படத்திற்கு பாடல்கள் பக்கபலமாக இருப்பதுடன் அந்த திரைப்படத்தின் உணர்வையும் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில் தான் எனது அனைத்து பாடல்களும் இருக்கும்.
அதற்கு எனது அனுபவமே காரணம். ஆனால், தற்போது வரும் சில இசையமைப்பாளர்கள் முன் அனுபவம் ஏதுமின்றி,
தொழில்நுட்பங்களின் உதவியால் இரைச்சல் தரக்கூடிய சப்தங்களை போட்டுவிட்டு இசை என்கிறார்கள்” என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்
தான் இசையமைத்த பாடல்களை மட்டுமே மேடை நிகழ்ச்சிகளில் பாடுவேன் என்று இல்லாமல், ”ரசிகர்கள் விரும்பும் பாடல்களையும் பாடி அவர்களை மகிழ்விப்பதே எனது நோக்கம்”என்று கூறும் பரத்வாஜ்,
தற்போது துபாய், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் நடக்கும் தனது இசைப் பயணத்துக்குப், பிறகு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கும் பயணப்பட இருக்கிறார்.
இளையராஜாவின் காப்பிரைட் விவகாரம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”காப்பிரைட் என்பது ரொம்ப சாதாரணம விஷயம்.
ஆனால், இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விஷயத்தில் அது பெரிய பிரச்சினையானது எப்படி என்பதுதான் புரியவில்லை.
காரணம், இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் அந்த பாடலின் உரிமம் வைத்திருப்பவர்களிடம் உரிமம் பெறுவதற்கான தொகையை கொடுக்க வேண்டும்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர்களுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த காப்பிரைட் விவகாரம் பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இன்றி சுமூகமாக நடைமுறையில்தான் இருக்கிறது” என்கிறார்.