உழைப்பில் விருப்பும் உத்வேகத்தில் நெருப்பும் திறமையில் இருப்பும் கொண்டிருந்தால்….
அடுத்தடுத்த சாதனைகளுக்கு வயது ஒரு தடையே இல்லை. இந்த ஒரு பிறவியிலேயே மீண்டும் மீண்டும் வெவ்வேறு மாதிரி பிறந்து வெவ்வேறு வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக ஆகி இருக்கிறார், சாதனைகள் படைத்த இயக்குனரும் , விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திர சேகர்
எழுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி விட்டு, விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை தன் வீட்டிலேயே உருவாக்கி விட்டு , இப்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புகிற முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார்.
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க , பா.விஜய். சாந்தினி, எம்.எஸ்.பாஸ்கர்,, விஜி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் விஜய கிரண் என்ற 19 வயது இளைஞர் இயக்கி இருக்கும் படம் நையப்புடை. இந்தப் படத்தின் மூலம்தான் பலரும் ஆச்சர்யப்படுகிற அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார் அவர் .
மேற்படி நையப்புடை படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்றுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ” எனக்கும் தாணு அவர்களுக்கும் ‘சச்சின்’ படத்திலிருந்து நெருங்கிய பழக்கம். நாங்கள் ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராகப் பழகியதில்லை. நண்பர்களாக இருக்கிறோம். அப்படி, யதார்த்தமாகப் பழகுபவர் தாணு.
‘தயாரிப்பு, இயக்கம் எல்லாம் இனி வேண்டாம்…. ஒய்வெடுக்கலாம்….’ என்று மனைவியிடம் கூறி முடிவெடுத்து இருந்த நேரம். சும்மா டூர் போன போது, தனியாகப் போகாமல என் உதவியாளர்களுடன் போனேன் . அப்படியே ஒரு கதை பண்ணி சும்மா ஜாலியாக ஒரு படம் எடுத்தோம். அதுதான் ‘டூரிங் டாக்கீஸ்’ .தாணு அதைப் பார்த்துவிட்டு ‘நன்றாக நடிக்கிறீர்கள் தொடர்ந்து நடிக்கலாம் ‘என்றார்.
பிறகு ஒரு நாள் திடீரென்று என்னை போனில் கூப்பிட்டு ” எங்கு இருக்கிறீர்கள்?” என்றார் . “வீட்டில் இருக்கிறேன்” என்றேன். “10 நிமிடத்தில் வருகிறேன்” என்றார். வந்தார்.
வந்தவர், என்னையும் என் மனைவியையும் அழைத்து என் கையில் முன்பணம் கொடுத்து விட்டு ‘நீங்கள் நடிக்கிறீர்கள்’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஒன்றும் பேச வேண்டாம். நான் ஒரு பையனை அனுப்புகிறேன். கதையைக் கேளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
சொன்ன மாதிரியே அந்தப் பையன் என் அலுவலகம் வந்தார்.” தம்பி எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்?” என்றேன். ‘ஒரு நிமிடம்’ என்று கூறி லேப் டாப் எடுத்து வைத்தார் .”என்னப்பா இது?க தை சொல்லத் தெரியாதா.? எனக்கு வாய்வழியாக கதை சொல்லி, கேட்டுத்தான் பழக்கம்” என்றேன்
‘ஏனென்றால், குஷி’ படத்தின் போது எஸ்.ஜே.சூர்யா கதை சொன்னார் .நானும் விஜய்யும் கதை கேட்டோம். மூன்று மணிநேரம் கதை சொன்னார்..எஸ்.ஜே.சூர்யா. வஜ்ராசனம் போட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு வசனம், காட்சி ,சிறு சிறு நடிப்பு, நுணுக்கமான சில்மிஷங்கள் உள்பட எல்லாம் செய்துகாட்டிக் கதை சொன்னார். ‘பூவே உனக்காக’ படத்துக்காக விக்ரமன் இடையில் பாட்டெல்லாம் பாடிக் கதை சொன்னார்.இப்படிக் கதை சொல்லிக் கேட்டுத்தான் பழக்கம்.
ஆனா இந்தப் பையன் இப்படி இருக்கிறாரே என்று நினைத்தேன். ‘எனக்குக் கதை சொல்ல வராது; லேப் டாப்பைப் பாருங்கள் ‘என்று என் பக்கம் லேப்டாப்பைத் திருப்பி வைத்தார். ‘இதுதான் புதிய தலைமுறையின் அணுகுமுறை போல..’ என்று நினைத்தேன் அப்படி லேப்டாப் முலம்தான் விஜயகிரண் கதை சொன்னார். படப்பிடிப்பும் லேப்டாப் உதவியுடன்தான் போனது.
ஆரம்பத்திலேயே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். ‘நான் காலையில் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் வருகிறேன். மாலை 6 மணிக்கு மேல் என்னால் வேலைசெய்ய முடியாது’ என்று. .அப்படிக் காலை 7 மணிக்கு அவர்களை பழக்குவதற்கு சில நாள் ஆனது.
ஒரு நாள் காலை மணி ஒன்பதே முக்கால் ஆகியும் முதல் ஷாட் எடுக்க வில்லை. எல்லாரும் வந்து விட்டார்கள். ‘என்னாச்சுப்பா?’ என்றேன். ‘காஸ்ட்யூம் பாக்ஸ் வரவில்லை’ என்றார்கள் ‘ஷாட் எடுக்க காஸ்ட்யூம் பாக்ஸ் ஏன் ? எல்லாருமே சரியாக அவரவர் காஸ்ட்யூமை போட்டுதானே இருக்கிறார்கள், இனியும் ஏன் முதல் ஷாட் தொடங்கவில்லை?’ என்றேன்
‘காஸ்ட்யூம் பாக்ஸ் வேண்டும். அதில்தான் என் லேப்டாப் இருக்கிறது ‘என்றார் விஜயகிரண்.
‘ஏம்ப்பா சீன் நீதானே பண்ணின ? வாயால் சொல்லுப்பா, லேப்டாப் வேண்டாம்’ என்றேன் ஆனால் அவர் ‘அது சரிப்பட்டு வராது’என்று தவிர்த்தார்.
இப்போது தப்பைக்கூட சரியாக நம்பிக்கையாகச் செய்கிறார்கள். தப்பைக்கூட சரியாகச் செய்தால் அது தப்பே இல்லை என்று பாடலே பாடுகிறார்கள்.
படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் 75 வயது ஆன எனக்கு டூப் எல்லாம் வைத்து தயாராக வைத்திருந்தார்கள். இருந்தாலும் ”உங்களால் முடியும், இயல்பாக இருக்கும்” என்று எல்லாம் கூறி ஊக்கப் படுத்தியதால், என்னையே டூப் இல்லாமல் காரில் ஏறி குதிக்க செய்து விட்டார் இயக்குநர்.
இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார்., நடனம் ஆட வைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிக்க வைத்துள்ளார். இப்படி திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண்.
படம் பார்த்து நானே மிரண்டு போனேன். அடுத்து வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இப்போது பலரும் என்னை நடிக்க அழைத்துள்ளார்கள்.
சினிமாவில் நடிக்க விஜய் விரும்பிய போது நான் அவரிடம் ‘நடிகராவது சுலபமல்ல, நடிகராக ஆசைப் பட்டால் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் ‘ என்றேன் . காலை 4.30 மணிக்கு எழும்பி சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கத்துடன் பீச்சுக்கு போவோம். விஜய்யை குதிரையில் தாவி ஏற வைப்போம். குதிரை மீது சவாரி செய்து வந்து நின்று , குதிரை மீது நின்று அப்படியே தாவி கடலில் குதிக்க வைப்போம்.
நடிகராக முதல் தகுதி ஆக்ஷன் செய்ய வேண்டும் குழந்தைகளும் விரும்ப வேண்டுமென்றால் நடனம் ஆடத் தெரியவேண்டும்.
ஆக்ஷன், நடனம் இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம். அப்புறம் மற்ற இயக்குநர்கள் வந்து நடிகர் ஆக்கிவிடுவார்கள். ஆக்ஷன் நடனம் இந்த இரண்டையும் வைத்து நான் விஜய்யை கதாநாயகன் ஆக்கினேன். பிறகு ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் மூலம் இயக்குநர்கள் அவரை நடிகராக்கி விட்டார்கள்.
இப்படி வளர்ந்துதான் விஜய் வியாபார ரீதியான கதாநாயகன் ஆனார்.
அந்த வகையில் என்னை நடிகராக்கியுள்ள இந்த ‘ நையப்புடை’ படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்” என்றார்.
கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது ” இந்தக் கதை நெகிழத் தக்க, மகிழத் தக்க கதை. தம்பி விஜயகிரண் என்னிடம் கதை சொன்னதும் ”யாரை வைத்து இயக்க இருக்கிறாய் ‘? என்றபோது ”எஸ்.ஏ.சந்திரசேகர்” என்றார். எனக்கே ஆச்சரியம் , ஆனால் அப்படியே ஏற்று அவரை நடிக்க வைத்தேன் . இப்போது படத்தைப் பார்த்தால் எஸ்.ஏ.சி பிரம்மாதமாக நடித்துள்ளார் . இந்தியில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிப்பது போல தமிழில் விஜய்யும் எஸ் ஏ சியும் சேர்ந்து நடிக்கும் காலம் விரைவில் வரும்.
தாஜ்நூர் நன்றாக இசையமைத்து இருக்கிறார். ” என்றார்
பா. விஜய் பேசும் போது ” இந்தப் படத்தில் தன் மகன் விஜய்க்கு இணையாக எஸ் ஏ சி சார் ஆக்ஷன்,நடனம் எல்லாமும் செய்திருக்கிறார்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், ” 73 வயதான சந்திர சேகர் சார் நாயகனாக நடிக்க, அந்தப் படத்தை 19 வயதே ஆன ஒருவர் இயக்கி இருக்கிறார் என்றால் , இது அனுபவமும் ஆர்வமும் சங்கமிக்கிற படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
இயக்குனர் விஜய கிரண் பேசும்போது ஓர் இயக்குனராக தான் விளக்கிய காட்சியை தனது அப்பா ஒளிப்பதிவாளராக படமாக்கினார் என்று குறிப்பிட்டார். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு . வேறு யாருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை . என் அப்பா சாகும்போது நான் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர்தான் . நான் என்ன செய்கிறேன். என்ன ஆவேன் உருப்படுவேனா இல்லையா என்பதே என் அப்பாவுக்கு, அவர் சாகும்போது தெரியாது . ஆனால் விஜய்கிரன் பெரிய அதிர்ஷ்டசாலி” என்றார் .
பலரது கண்களிலும் கண்ணீர்
விழாவில் நடிகை சாந்தினி, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள். பி.எல்.தேனப்பன்.,டி.சிவா, சத்யஜோதி பிலிம்ஸ். டி.ஜி.தியாகராஜன்,கதிரேசன், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன்,இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின், பி.டி.செல்வகுமார், இசையமைப்பாளர் தாஜ்நூர், நடிகர் ஜீவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்