இறைவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் C.செல்வகுமார் தயாரிக்க, ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா, புதுமுகம் அமலா, சார்லி ஆகியோர் நடிக்க,
நீண்ட நெடிய அனுபவமும் திறமையும் கொண்ட விஜய் சங்கர் இயக்கி இருக்கும் படம் ‘ஒரு கனவு போல’
மறுமலர்ச்சி, பாரதி கண்ணம்மா , முதற்கொண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வரை பல படங்களுக்கு இணை இயக்குனராகப் பணியாற்றி ,
இன்று பிரபலமாக இருக்கும் பல இயக்குனர்களின் முதல் படங்களில் தன பங்களிப்பைத் தந்து ,
அந்த இயக்குனர்களின் உருவாக்கத்துக்குப் பக்க பலமாக இருந்தவர் விஜய் சங்கர் . இவர் மிகச் சிறந்த இலக்கிய ஆர்வலரும் கூட !

அப்படிப்பட்ட விஜய் சங்கர் இயக்கத்தில், பல பிரபல இயக்குனர்கள் பார்த்து சிலிர்த்து வியக்கும் வண்ணம் சிறப்பாக உருவாகி,
இப்போதே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘ஒரு கனவு’ போல படத்தின் இசை வெளியீட்டு விழா , மிகப் பெரிய இலக்கிய மற்றும் சமூக அரசியல் திருவிழா போல நடந்தது .
அதே நேரம் தொழில் நுட்ப நவீனத்திலும் இயக்குனர் விஜய் சங்கரும் , தயாரிப்பாளர் செல்வகுமாரும் சோடை போனவர்கள் இல்லை என்பதை முரசறைந்து அறிவிக்கும் வகையில்
தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக இந்தப் படத்தின் பாடல்களை பென் டிரைவில் வெளியிட்டு அசத்தினார்கள் .

விழாவில் நடிகர் சார்லி, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக், நடிகை ரோகிணி, இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம் , கார்த்திக் சுப்புராஜ்,
இவர்களுடன் பெப்ஸி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நட்பு, பெண்ணியம் , காதல், ஒழுக்கம் ,
மன சாட்சி , கலாச்சாரம், பக்தி உள்ளிட்ட விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு தமிழ்ப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .

ராம் இசையில் புலமைப் பித்தன், முத்து லிங்கம் , சினேகன் ஆகியோர் எழுதிய பாடல்கள், வார்த்தைகள் புரியும்படியும் நல்ல தமிழிலும் இனிமையாகவும் ,பொருள் பொதிந்தும் இருந்தன .
விஜய் சங்கரின் படமாக்கல் ஒரு வித காவியத் தனமையோடு மிகச் சிறப்பாக இருந்தது . ஐந்து முறை கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றவரும்,
தலை சிறந்த ஒளிப்பதிவாளருமான அழகப்பனின் ஒளிப்பதிவு கண்களுக்குள் கவிதை பாடியது .
நாயகர்களாக ராம கிருஷ்ணனும் சவுந்திராஜாவும் சிறப்பாக நடித்திருப்பது புரிந்தது . தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகி கிடைத்து விட்டார் என்று,
இப்போதே சொல்ல முடியும் என்கிற அளவுக்கு மிக குடும்பப் பாங்கான முகத் தோற்றத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார் புது முகம் அமலா .
இப்படி பாடல் வெளியீட்டு விழாவே படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது .
நிகழ்ச்சியின் பாட்டுடைத் தலைவனாகவே இருந்தார் இயக்குனர் விஜய் சங்கர் . அந்த அளவுக்கு வந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் விஜய் சங்கரை மனப்பூர்வமாக உண்மையாகப பாராட்டிக் கொண்டாடினார்கள் .
நடிகர் சார்லி பேசும்போது ” பல பெரிய இயக்குனர்களின் முதல் படத்துக்கு முதுகெலும்பாக இருந்த இணை இயக்குனர் விஜய் சங்கர் .
இந்த இணை இயக்குனர் இனி ஓர் இணையற்ற இயக்குனர் ஆகப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை . எனது அனுபவத்தில் இந்தப் படத்தில் அவர் என்னை இயக்கிய விதமும் அதை உறுதி செய்தது ” என்றார் .
பழம்பெரும் கவிஞர் முத்து லிங்கம் தன் பேச்சில் ” நான் பாடல் எழுதிய பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் சங்கர் .
அப்போது எல்லாம் பாடல் வரிகளில் இந்த வார்த்தைக்குப் பதிலாக இந்த வார்த்தையை போடலாமே என்று கருத்துக் கூறுவார் . அவர் சொல்வது எல்லாம் மறுக்க முடியாத அளவு சிறப்பாக இருக்கும் ” என்றார் .
பேரரசு பேசும்போது ” எத்தனையோ இயக்குனர்களுக்கு தன் உழைப்பைக் கொடுத்தவர் விஜய் சங்கர் . சினிமாவில் அசிஸ்டன்ட் ஆகி , நான் இயக்குனர் ஆன சில ஆண்டுகளுக்கும் எப்படா டைரக்டர் ஆவ ?” என்று,
என்னை கேலிகளால் துளைத்தவர்கள் அதிகம் . அப்படியானால் விஜய் சங்கர் அந்த எவ்வளவு கேலிகளை கேள்விகளை சந்தித்து இருப்பார் ?
அந்த கேளிவிகளுக்கு எல்லாம் பதிலாக இந்த படத்தை அற்புதமாக படைத்துள்ளார். நான் படத்தைப் பார்த்து விட்டேன் . அற்புதமான படம் .
மவுன ராகம் படம் பார்க்கும்போது இப்படி ஒரு படம் நம்மால பண்ண முடியலியேன்னு ஏக்கம் வந்தது . அப்புறம் அழகி ..! இப்படி எனக்கு உள்ள ஓரிரு படங்கள் வரிசையில்,
இந்தப் படத்தைப் பார்த்தபோது இப்படி ஒரு படம் பண்ணனுமேன்னு எனக்கு ஏக்கம் வந்தது . அப்படி ஒரு அற்புதமான படம் இந்த ‘ஒரு கனவு போல’ ” என்றார்
இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் தன் பேச்சில்
“பல இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு ஆல மரமாக இருந்தவர் விஜய் சங்கர் . நான் உதவி இயக்குனராக முயலும் போது,
‘விஜய் சங்கர் சாரை பாரு..யார்ட்டயாவது சேர்த்து விடுவாரு’ன்னு சொல்வாங்க . அவ்ளோ நல்ல மனிதர். அவர் மனம் போலவே,
இந்தப் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் கண்ணியமாக அழகாக இருக்கிறது . அவரும் இந்தப் படமும் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் . ஜெயிக்கும் ” என்றார் .
இயக்குனர் பொன்ராம் பேசும்போது ” திரை உலகில் நீண்ட நெடிய அனுபவமும் திறமையும் உழைப்பும் கொண்டவர் விஜய் சங்கர் . பலருக்கு பக்க பலமாக இருந்தவர் .
அவர் இயக்கி இருக்கும் இந்தப் படம் கண்டிப்பபா வெற்றி பெறும் . அதற்கு என் வாழ்த்துகள் ” என்றார் .
இயக்குனர் செல்வமணி ஒரு படி மேலே போய் ” இயக்குனர் சங்கத் தேர்தல் சமயத்தில் எல்லோரும் ‘விஜய் சங்கர் கிட்ட ஆதரவு கேளுங்க ..
ஏன்னா அவர் நிறைய பேரை அசிஸ்டன்ட் டைரக்டரா உருவாக்கி இருக்கார் . அவர் கையில நிறைய ஓட்டு இருக்கு’ன்னு சொல்வாங்க . அவரை ஒரு வாக்கு வங்கியாவே நாங்க பாப்போம் .
அப்படின்னா அவர் எவ்வளவு பேருக்கு உதவி செய்து இருப்பார்னு பார்த்துக்குங்க . இந்தப் படம் மனசுக்கு நெருக்கமா இருக்கு . இது மாதிரி படங்கள் வரணும் .
சினிமாகாரர்கள் மக்கள் கிட்ட இருந்து ஒதுங்கி நிக்கக் கூடாது . நாம அவங்க கிட்ட இருந்து ஒதுங்கி நின்னா , மக்கள் சினிமாவிடம் இருந்தே ஒதுங்கிடுவாங்க ” என்றார் , மிகச் சரியாக !
விஜய் சங்கருக்கு அடுத்து நிகழ்ச்சியின் பாடு பொருளாக இருந்தவர் நடிகர் சவுந்திர ராஜா . ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எந்த சார்பும் சுயநலமும் இல்லாமல் களமாடிய நேர்மை மிக்க அன்புத் தம்பி இந்த சவுந்திர ராஜா .
நடிகை ரோகினி பேசும்போது ” சவுந்திர ராஜா மிக நல்ல பிள்ளை . திறமை சாலி . அவர் மிக உயர்ந்த இடத்துக்கு வருவார் ” என்றார் .
எஸ் ஆர் பிரபாகரன் தன் பேச்சில் ” சுந்தர பாண்டியன் படத்தில் சசி குமாருக்கு எதிராக எனக்கு மூன்று வில்லன்கள் அல்ல .. மூன்று ஹீரோக்கள் தேவைப் பட்டார்கள்.
விஜய் சேதுபதி, இனிகோ ஆகியோரை அடுத்து மூன்றாவது கேரக்டருக்கு ஆள் கிடைக்கவில்லை .
கதைக்களம் உசிலம்பட்டி என்பதால் உசிலம்பட்டி நபர் என்று அறிந்து சவுந்திரராஜாவை வரவைத்துப் பேசினேன். ஆனால் அவருக்கு உசிலம்பட்டி பேச்சு வழக்கு அப்போது வரவில்லை . திருப்பி அனுப்பி விட்டேன் .
உடனே அவர் உசிலம்பட்டிக்கே போய் ஒரு ஷார்ட் பிலிம் எடுத்து அதில் அந்த பேச்சு வழக்கில் பேசி கொண்டு வந்து காட்டினார் . சிறப்பாக இருந்தது . அப்புறம் நடிக்க வைத்தேன் . அவர் விடா முயற்சி உள்ளவர் ” என்றார் .
கார்த்திக் சுப்புராஜ் ” என்னை ஒரு முறை வாய்ப்புக் கேட்டு சந்தித்த சவுந்திர ராஜா தனக்கு மூன்று லட்சியங்கள் இருப்பதாகக் கூறினார் தமிழ் சினிமாவை மாற்ற வேண்டும் . நல்ல ஹீரோவாக வேண்டும்.
அப்புறம் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் இவையே அந்த லட்சியங்கள் . முதல் இரண்டு அவரால் முடியும். மூன்றாவது என்ன ஆகுமோ தெரியாது . ஆனால் அவர் போராடக் கூடியவர் ” என்றார்
சவுந்திர ராஜா பேசும்போது ” மற்ற படங்கள் எல்லாம் நடித்து விட்டேன் . ஆனால் இந்த கேரக்டர் அவ்வளவு கனமானது . என்னால் ஆரம்பத்தில் நடிக்கவே முடியவில்லை .
டைரக்டர் விஜய் சங்கர் கூட ‘இவன் நடிப்பனான்னு தெரியலையே’ன்னு யோசிக்க ஆரம்பிச்சார் . நான் அழுதுட்டேன் .
அப்புறம் என்னை விஜய் சங்கர் சாரிடம் அறிமுகப்படுத்திய வைரமணி அண்ணன் (வி சேகரின் இணை இயக்குனர்) படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து பேசி என்னை நடிக்க வைத்தார் .அவருக்கு நன்றி ” என்றார் .
ராம கிருஷ்ணன் பேசும்போது “இது மிகச் சிறந்த படமாக வந்திருக்கிறது .கண்டிப்பாக வெற்றி பெறும் . சவுந்திரராஜா, அமலா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் ரோகினி அய்யங்கார் இங்கே வந்து இருக்கிறார் . அவர் படக் குழுவைப் பாராட்டுகிறார் “என்று கூற ,
ரோகினி அய்யங்கார் மலர்க்கூடை வழங்கினார் .
இலக்கியச் செறிவோடு அன்பு, மனித நேயம் , நேர்மை இவற்றை வலியுறுத்தி, தமிழ் சினிமாவின் பழைய பாடல்களை கண்ணதாசன், வாலி இவர்களின் வரிகளை மேற்கோள் காட்டி,
விழாப் பேருரை ஆற்றிய இயக்குனர் விஜய் சங்கர் ” அறிஞர் ஒருவர் பைபிளைப் பற்றி அதில் உள்ள சிறப்பான கருத்துக்களைப் பற்றி நான்கு மணி நேரம் உரையாற்றிவிட்டு இறங்குகிறார் .
அப்போது ஒருவர் அவரை நெருங்கி ” அய்யா நீங்க பேசினத முழுமையா கேட்டேன் . எனக்கு ஒண்ணுமே புரியல . நான் பாமரன் . எனக்கு புரியற மாதிரி, ஒரு வாக்கியத்தில் சொல்லுங்க என்றார் .
நாலு மணி நேர உரையை எப்படி ஒரு வாக்கியத்தில் எப்படி சொல்வது? சில நொடிகள் தயங்கிய அந்த பேச்சாளர் உடனே “ஒண்ணுமில்ல .. எல்லாகிட்டையும் அன்போடு இருங்க. அதைதான் சொன்னேன் ” என்றார் .
நாலு மணி நேர உரைக்கு இணையாக ஆனது அந்த வாக்கியம் . காரணம் அன்பு என்ற வார்த்தை. வார்த்தையே அப்படின்னா வாழ்க்கை?
இங்கே இத்தனை பேர் எனக்காக வந்து இவ்வளவு நேரம் இருந்து என்னை பேச காரணம் வேற என்ன ?அன்புதான். அன்பில்லாமல் வேற என்ன இருக்கு ? அதை சொல்லும் படம் இது .
இது நட்பை வலியுறுத்தும் படம் மட்டும் இல்லை . பெண்ணியத்தைப் போற்றும் படம் . ஒரு வீடு என்பது செங்கல்லால் அமைவதில்லை . பெண்ணால்தான் அமைகிறதுன்னு சொல்வாங்க .
அதை சொல்லும் படம் இது . படத்தைப் பார்த்து விட்டு பேரரசு ஒரு மணி நேரம் என்கிட்டே பேசினார் . ஏன் ? இது மனதின் உணர்வுகளை தட்டி எழுப்பும் படம் .
என் வாழ்வில் நான் சினிமா மூலம் நல்ல விஷயம் மட்டுமே சொல்லனும்னு இருந்தேன். இத்தனை வருட வாழ்வில்
என் மனைவியும் பிள்ளைகளும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல . (அழுகிறார் . அரங்கிலும் கண்கள் கசிகின்றன ) என் நண்பன் செல்வகுமார் தயாரிப்பாளரா வந்தார் . இந்த படம் வந்தது .
படம் ரொம்ப நல்லா வந்திருக்கு . இந்தப் படம் எனக்ககாக ஓடுவது இரண்டாவது விஷயம்தான் . நல்ல பண்புகளை அன்பை நேர்மையை நட்பை வலியுறுத்தி பெண்மையை உயர்த்தி ஒரு படம் பண்ணி இருக்கேன் .
இந்தப் படம் ஓடினா நல்ல படங்கள் ஓடும் வாய்ப்பு வரும் ” என்று முடித்தபோது அரங்கம் முழுக்க கைதட்டல்களால் அதிர்ந்தது
விழாவில்சிறப்புரை ஆற்றிப் பேசிய விஷால் ” நிச்சயமா இந்தப் படம் நன்றாக இருக்கும். நன்றாக ஓடும் என்பதை இந்த மேடை சொல்கிறது .
நிகழ்ச்சி துவங்கும் முன்பு இயக்குனர் செல்வமணி அண்ணன் ‘நெடுவாசல் விசயத்தில் நாம் எதாவது செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள் . அதை நான் அப்படியே ஏற்கிறேன் .
இந்த மேடையில் இப்போது நடிகனாகவோ நடிகர் சங்கச் செயலாளராகவோ பேசவில்லை .ஒரு மனிதனாக பேசுகிறேன். காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும் இறங்க இருக்கிறோம் .அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.
நான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்.
இந்த விழாவிற்கு தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வரவில்லை என்று ,
நிச்சயமா கலாட்டா செய்வார்கள். அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும்
சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான்
ஆனால் இந்த ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால்தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்” என்றார்
நிகழ்ச்சி முடிந்த நிலையில், விழாவில் கலந்து கொண்டதற்காக விஷாலுக்கு பரிசு ஒன்று தருவதாக சவுந்தர்ராஜா கூறினார். ஆனால் ” எனக்கு எதுவும் வேண்டாம் ” என்று விஷால் கூறிவிட்டார்.
அதனால் படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும் நடிகர் சவுந்தர்ராஜாவும், ”நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு உதவ,
முதல் நன்கொடையாக நாங்கள் இதை தருகிறோம்” என்று விஷாலிடம் 25000 ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தனர்.
ஒரு கனவு போல படம் வெற்றி அடைய மனப்பூர்வமான வாழ்த்துகள் !

















