ஒரு காலத்தில் குடித்து விட்டு ஊருக்குள் வருவதே அவமானமாகப் பார்க்கப்பட்ட தமிழ் நாட்டில் இப்போது குடிப்பழக்கம் இல்லாதவனை எகத்தாளமாகப் பார்க்கும் பழக்கம் வந்து விட்டது .
ஒரு தவறை சாதாரண மனநிலையில் செய்பவனை அதிகம் தண்டிக்கும் வழக்கம் இருந்த நம்ம ஊரில் இப்போது குடிகாரர்கள் செய்யும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வாழும் சூழல் . காரணம் மதுப் பிரியர்களுக்கு எதிராகப் புகார் செய்பவரை முறைத்துப் பார்க்கும் நிலைமை .
அப்படி ஒரு நிலைமைதான் இங்கேயும் ?
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள பழவேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கும் அதை ஒட்டிய பாரும் (BAR) இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்குகிறதாம் .
அங்கு குடிப்பவர்கள் வேண்டுமானால் தள்ளாடலாம் . மயங்கலாம் . ஆனால் டாஸ்மாக்கும் பாரும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து தள்ளாடாமல் மயங்காமல் இயங்கி வருவதாக சொல்கின்றனர் . (அரசு கஜானாவை குடிமகன்களின் ரத்தம் ஊற்றி நிரப்ப அல்லும் பகலும் உழைக்குதோ என்னவோ ?)
“பாருக்கு ஒரு பக்கம் நூறு மீட்டர் தொலைவில்தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது . மறுபக்கம் ஐம்பது மீட்டர் தொலைவில் குடி இருப்பவர்கள் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. மது அருந்தி விட்டு கலாட்டா செய்பவர்களால் பல தொல்லைகளுக்கு ஆளாகிறோம் . போலீசில் புகார் செய்தும் பலன் இல்லை ” என்று கண்ணீர்க் குரல்கள் . (அரசுக்கு வருவாய் வரும் திட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி BARக்காரர்கள் மக்கள் மீது புகார் சொல்லி காவல்துறை அவர்களைக் கைது செய்யாமல் இருந்தால் சரி )
இது நமக்கு புகைப்படங்களோடும் ஒரு காணொளியோடும் வந்த தகவல்.
ஒருவேளை இது உண்மை எனில் இதைப் பற்றி விசாரித்து அரசு நடவடிக்கை எடுப்பது நல்லது .
அரசுக்கு குடிமகன்கள் முக்கியமாக இருக்கலாம் . ஆனால் கொஞ்சமாச்சும் குடிமக்களும் முக்கியம்தானே?
ஏதோ அந்தக் காலத்தில் ஊருக்கு பழவேடு என்று பெயர் வைத்து விட்டார்கள் . அதற்காக மக்களை எப்போதும் புளித்துப் போன பழ நாற்றத்தில் முக்கியடிப்பது என்ன நியாயம்?
காணொளி கீழே

