முள்ள மூட்டில் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, S.P.சினிமாஸ் வெளியிட,
மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே திரைப்படங்களில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடிக்க,
இவர்களுடன் சாயா சிங், யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்க
அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்கும் “பட்டினப் பாக்கம்”ஒளிப்பதிவு ராணா. இசை இஷான் தேவ்.
பட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன்,
குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது.
இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன? நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை,
விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறும் படம்தான் பட்டினப்பாக்கம் என்கிறார் இயக்குனர் ஜெயதேவ்
“சரியாக சொல்ல வேண்டுமானால் ஐந்து கதைகளின் சங்கமம் இது . நாயகனின் கதை, பெரும் பணக்கார குடும்பத்தில் இருந்து ஒரு தவறான செய்கையால் பெரும் விபரீதத்தை சந்திக்கும் ஒரு பெண் (சாயா சிங்) ,
ஒரு நேர்மையான பத்திரிகையாளர் ( எம் எஸ் பாஸ்கர்) , ஒரு போலீஸ் அதிகாரி இப்படி பல கதைகள் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்தோ சேராமலோ பயணிக்கும் ” என்கிறார் .
”சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவின் கதையா இது ?”
“இல்லை . சென்ற தலைமுறை வரை பட்டணம் என்ற பெயரே சென்னையைத்தான் குறிக்கும் .
அப்படி ‘பட்டணம் போய் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சென்னைக்கு வந்தவர்களால் நிரம்பியது சென்னை .
பட்டினப்பாக்கம் பகுதியே அதுதான் . எனவே சென்னை என்பதன் குறியீடாகவே இந்தப் பெயரை வைத்தேன். இது ஒரு திரில்லர் ஆக்ஷன் படம் ” என்றவர்
நடிக நடிகையரைப் பற்றி சொல்லும்போது ” கலையரசனை பற்றி சொல்லவே வேண்டியதில்லை . எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து விடுவார் .
அப்படி நான் எல்லா ஷாட்களையும் ஒரே டேக்கில் ஒகே செய்து கொண்டு இருக்க , ஒரு நிலையில் அவர், நான் ஏதோ கடமைக்கு எடுக்கிறேன் என்று எண்ணி குழம்பி விட்டார் .
நான் என்ன செய்யட்டும் . அவர் ஒரே டேக்கில் அட்டகாசமாக நடித்து விடுகிறார் . . அப்புறம் அதை அவருக்குப் புரிய வைத்தேன்.
சாயாசிங் மிக பிரம்மாதமாக நடித்துள்ளார் . அனஸ்வரா, ஜான் விஜய் போன்றோரும் கலக்கி உள்ளனர் ”
என்று கூறும் இயக்குனர் ஜெயதேவ், நடிகை பாவனாவின் அண்ணன்..(பல வருடங்களுக்கு முன்பு மலையாள டெலிபிலிம் ஒன்றில் இவர் ஹீரோவாகவும் பாவனா ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார்கள் )
படம் பற்றிக் கூறும் நடிகர் கலையரசன் ” இன்று விரைவில் எப்படியாவது பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று எண்ணும் நபர்கள் அதிகம் ஆகி விட்டார்கள் .
அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள் . அப்படிப் பட்ட மனிதர்களால் நெருக்கப்படுகிறது சென்னை . அதனால் ஏற்படும் பிரச்னைகளை படம் சொல்கிறது .
படத்தின் கதையும் என் கேரக்டரும் நன்றாக இருந்ததால் நடித்தேன் . இன்று வரை அப்படித்தான் செய்கிறேன் . பணத்தை முக்கியமாகக் கருதாமல் நல்ல கேரக்டர் பார்த்தே நடிக்கிறேன் .
எனவே இதுவரை நான் ஹீரோவாக நடித்த எந்த படத்திலும் பேசிய சம்பளத்தை யாரும் முழுசாக எனக்குக் கொடுத்தது இல்லை . இந்தப் படத்தின் புரடியூசர் வரை !
படம் நன்றாக வந்துள்ளது ” என்றார்







