நகுல் – சுனைனா நடிப்பில் ஒன்பது வருடம் முன்பு வந்து பலரையும் கவர்ந்த படம் காதலில் விழுந்தேன் .
விஜய் ஆண்டனி இசையில் பி வி பிரசாத் எழுதி இயக்கிய இந்தப் படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு , படத்தில் இடம் பெற்ற தோழியா என் காதலியா பாடல் கமர்ஷியல் விளம்பரங்களில் ஆட்சி செய்தது .
பட்டையைக் கிளப்பிய அட்ராட்ரா நாக்கமுக்க பாடல் 2011 இல் பங்களாதேஷ் மிர்பூரில் நடந்த உலகக் கோப்பை துவக்க விழா நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டு உலகையே தெறிக்க விட்டது .
அந்த பிவி பிரசாத் இப்போது தனது பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன் “
நாயகியாக பானு நடிக்கிறார். மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை கலைவாணர் அரங்கில் நடத்திய பி வி பிரசாத் , அதே தினத்தில் தனது அடுத்த படமான வேலையில்லா விவசாயி படத்தை துவக்கி இருக்கிறார் .
வேலையில்லா விவசாயி படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி இசைஅமைத்து தயாரித்து கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் P.V.பிரசாத்.
இந்தப் படத்தின் நாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர் நடிக்கிறார்.
விழாவில் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி , கருணாஸ் எம்.எல்.எ, தயாரிப்பாளர் சங்கத் தலைவவர் மற்றும் நடிகர் சங்கச் செயலாளர் விஷால்,
தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம்,
பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குனர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி.
நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே., கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பட்டியல் சேகர், எஸ்.எஸ்.துரைராஜ், சேதுராமன், செந்தில், திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய p.v .பிரசாத் ”காதலில் விழுந்தேன் எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ அது மாதிரி சகுந்தலாவின் காதலனும் வெற்றி பெறும்.
இதில் அத்தனையும் சமமாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன்.
எனக்கும் என் கதாபாத்திரத் தன்மைக்கும் என்ன மாதிரியான இசை ஒத்து போகுமோ அதை மட்டுமே நான் பயன் படுத்தி இருக்கிறேன்.
காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப் பட்டதோ அதை போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற- நான் நடித்துள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.
ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கான திரை வடிவமே இந்தப் படம்..
காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும் ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை.
இதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறோம். சொல்ல வந்த இந்தக் கதையை,
ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கிச் சொல்லி உள்ளோம். 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது..
சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது .
அதே போல எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்..செய்யாரைச் சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது. இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இப்போது இருக்கிறது என்று சொல்ல முடியாது.
கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாகக் காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டது.
எல்லாம் இருக்கிறது. சோறுதான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலை முறை மக்களின் குரலாக ஒலிக்க போகிறது.
ஐய்யோ தவறு செய்து விட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம்.எந்த தொழிற் புரட்சியும் பசியைப் போக்காது.
எந்த விஞ்ஞானமும் பூமித் தாயைப் போல அரிசியையும் கோதுமையயும் விளைவிக்காது.
பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன்ஊ? ருக்கெல்லாம் சோறு போட்ட நாம் அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
செய்யாறில் பண்ணையாராகவும் விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச் மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச் மேனாகவும் பார்த்திருக்கிறேன்.
தன் நிலத்தை வாங்கியவர்கள் அதே ஏ.டி.எம் களில் வந்து கை நிறைய பணத்தை எடுக்கும் அவர்களை ஏக்கமாக பார்க்கும் அவலத்தையும் பார்த்திருக்கிறேன்.
இதையெல்லாம் தான் விவசாயியின் குரலாக இதில் பதிவு செய்கிறோம்.
செய்யாறு காஞ்சிபுரம் அதை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம் என்றார் “
விஷால் பேசும்போது” இந்த படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏன் என்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை. குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.
மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்..சினிமாவைக் காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியைப் போட்டுக் கஷ்டபடுத்த வேண்டாம்.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிகத் தொகை செலவிட வேண்டி உள்ளது.
இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதைச் சரி செய்ய வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் ” என்றார்
விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது ”கலைவாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அது நடக்க வில்லை. தமிழ்நாட்டை சினிமாக்காரர்கள்தான் அதிகம் ஆண்டார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமா காரர்களை வரி போட்டு வதைகாதீர்கள்.
அதே போல் தியேட்டர் அதிபர்களும் பார்கிங் மற்றும் தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
எம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது கொய்யால என பாடல் எழுதுகிறார்கள், ஆபாச வரிகள் வருகிறது.
உங்கள் பேரன் ‘கொய்யால பாடலை எழுதியவர் எங்கள் தாத்தாதான்’ என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கேவலம்.
“ வானத்தை போல மனம் படைத்த மன்னவனே “ என்ற பாடலை நான் எழுதினேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார் இயக்குனர் விக்ரமன். இப்ப உள்ள பாடல்களை தலைப்பாக வைக்க முடியுமா?” என்றார்.
ஆர்.கே செல்வமணி பேசும்போது ” டிக்கட் விலை எங்கோ போகிறது . மக்கள் கஷ்டப்படுகிறார்கள் . ஆனால் தயாரிப்பாளருக்கும் லாபம் வரவில்லை .
பார்க்கிங் விலை குறையணும் . தின்பண்டங்கள் விலை குறையணும் . இன்டர்நெட்டில் டிக்கட் புக் பண்ண அதிக கட்டணம் வசூலிக்கிறாங்க .
இப்படி மக்களுக்கும் சுமை ஏற்றி தயாரிப்பாளருக்கும் லாபம் வராம இருந்தா சினிமா தாங்காது ” என்றார்
இயக்குனர் சாய் ரமணி தனது பேச்சில் ” ஒரு நல்ல சூழல் என்றால் மதுவின் விலையை விட சினிமா டிக்கட் விலை கம்மியா இருக்கணும் . அப்படி இருந்தாலே குடிக்கு அடிமையானவங்களை இழுப்பது கஷ்டம் .
ஆனா இப்ப நம்ம மாநிலத்துல குவார்ட்டர் விலை கம்மியா இருக்கு . சினிமா டிக்கட் விலை அதை விட அதிகமா இருக்கு . அப்புறம் எப்படி சினிமா நல்லா இருக்கும் ? சமூகமும் நல்லா இருக்கும் ? ” என்றார்.
நியாயமான கேள்வி !