2 டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக அபர்ணா முரளி , மற்றும் ஊர்வசி, கருணாஸ், மோகன்பாபு நடிப்பில்,
விஜயகுமாரின் வசனத்தில், உஷா , கணேஷா , ஆலிப் ஆகியோரோடு சேர்ந்து திரைக்கதை எழுதி , கதை எழுதி சுதா கொங்காரா இயக்கி இருக்க, அமேசான் பிரைம் தளத்தில் வெளிவந்திருக்கும் படம் சூரரைப் போற்று.
ஆந்திராவைச் சேர்ந்த டெக்கான் ஏர் நிறுவன அதிபர் கோபிநாத் , தனது நிறுவனத்தைக் கட்டமைத்த விதம், அவரது fly simply நூல், மற்ற சில தனியார் துறை விமான சேவை நிறுவனங்கள் உருவானதன் பின்னணியில் உள்ள சவால்கள் இவற்றில் இருந்து உருவாக்கி இருக்கும்.
சொந்த ஊருக்கு மின்சாரம் போன்ற வசதிகளை அமைதி முறையில் போராடி வாங்கிய சோழவந்தான் ராஜாங்கம் வாத்தியாரின் மகன் மாறன்( சூர்யா) , தன ஊர் வழியே போகும் விரைவு ரயிலுக்கு தனது ஊரில் நிறுத்தம் அமைக்க, கல்லக்குடி கருணாநிதி பாணியில் போராடி வெல்கிறார்.

ஆனால் அவருக்கு விமானப் பயணக் கட்டணத்தை மலிவாக்கி, எல்லா மக்களையும் பயணிக்க வைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க ஆசை.
பேக்கரி வைத்து சம்பாதிக்கும் லட்சியம் உள்ள பெண்ணுக்கும் அவருக்கும் கல்யாணம். ஒரு சில மனச்தாபங்களுக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் உதவி என்ற நிலைக்கு வருகின்றனர
மாறனின் திட்டத்தை விரும்பாத கார்ப்பரேட் கம்பெனிகளும் அதற்கு துணை போகும் அரசு இயந்திரமும் அவரை சிதறடிக்க முயல, தோல்விகளின் ஆழங்களுக்கும் உயரங்களுக்கும் இடையே அலைகழிக்கப் படும் மாறன் அதை எப்படி சாதித்தார் என்பதே சூரரைப் போற்று .
சோழவந்தான் கிராமத்தான், தேசிய பாதுகாப்பு அகாடமி வீரர், தொழிலதிபராக முயலும் குடும்பத் தலைவர் என்று கதாபாத்திரத்தின் அத்தனை நிலைப்பாடுகளுக்கும் தோற்றம், உடல் மொழி, நடிப்பு என்று எல்லா வகையிலும் அசத்தலான நியாயம் செய்து ஆடித் தீர்த்திருக்கிறார் சூர்யா . சூரர் ! போற்றலாம்.
சுயமுன்னேற்ற நூல் தன்மை உள்ள ஒரு கதையை எமோஷனலான கதாபாத்திரங்கள், நெகிழ்வான சம்பவங்கள் ஆழமாக இறங்கும் திரைக்கதை , நேர்த்தியான இயக்கம் என்று எல்லா வகையிலும் சிறப்பாக செய்து கொடி பிடிக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. இறுதிச் சுற்று கொடுத்தவரின் அடுத்த, அடடே ஆகாயச் சுற்று இது.
நாயகி, நாயகன் , இருவரையும் ஆக்ரோஷமான கதாபாத்திரமாக அமைத்த விதத்தில் சுதா கொங்கரா தெரிகிறார் .துருத்தால் தெரிகின்ற பெண்ணிய சிந்தனைகள் சிறப்பு
நாயகியாக நடித்து இருக்கும் அபர்ணா முரளி, சினிமாத்தனம் இல்லாத முகம். ஆனால் பேச்சில் மலையாள வாசனை அந்நியத்தனம் !
அப்பாவைப் பார்க்க சூர்யா வருவது , அடுத்து நடக்கும் காட்சிகளில் சற்று லாஜிக் மீறல் இருந்தாலும் நெகிழ்வும் உருக்கமும் ஒன்று சேர்ந்து நிஜ சம்பவத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. கார்ப்பரேட் உலகின்
கடைசி வரை பரபரப்பு ஏற்றும் திரைக்கதை அருமை.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சிறப்பு
ஏழு கவிஞர்களின் வரிகளில் கி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
மோகன்பாபு கேரக்டர் சினிமாத்தனம். ஆரம்பத்தில் படம் ஒரு தனி மனிதனின் கனவு என்றே ரீதியில் போவதை மாற்றி ஏழை மக்களின் ஆசை என்பதையும் கதையில் அழுத்தமாய் சொல்லி இருந்தால் இன்னும் நெருக்கம் கிடைத்து இருக்கும்.
எனினும் முற்றிலும் திரை தொடாத அதுவும் டாக்குமெண்டரித் தோற்றம் வர வாய்ப்புள்ள ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை எமோஷனலாக , பரபரப்பான விறுவிறுப்பாக கமர்ஷியலாக சொன்ன வகையில் இந்த படத்தைப் போற்றலாம் .
சூரரைப் போற்று…. போற்றலாம்