தென்னிந்திய ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு இது.
இதை ஒட்டி வரும் ஆகஸ்டு 26 ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் அடங்கிய பொன் விழா கொண்டாட்ட நிகழ்வை நேரு உல் விளையாட்டு அரங்கில் நடத்துகிறது ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் .
அதில் இந்திய அளவில் பல மொழி நடிகர்களும் நடிகைகளும் பங்கேற்க உள்ளனர் .
இது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு கூறும்போது “ சினிமாத் துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும்,
ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைக்கிறார்கள் . அப்படி உழைத்துதான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது.
எல்லோரும் கூட்டுக் குடும்பமாக உழைத்துத்தான் ஒரு படம் திரைக்கு வருகிறது அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப் பட்ட எங்கள் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம்.
இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்..
இன்று எங்களோடு இல்லா விட்டாலும்
யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் ஐம்பதாம் ஆண்டை கடந்திருக்கிறோம்..
இந்த சந்தோஷத்தை , பொன்விழாவை ஆகஸ்ட் 26 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்..
நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும்,
எல்லா நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும்.
அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம். எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம்.
விழாவில் எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை கெளரவப்படுத்த உள்ளோம்..
சுமார் 6 மணி நேரம் நடை பெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் நடை பெறும்..
கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான இந்த கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. கலை நிகழ்ச்சி இயக்குனராக மானாட மயிலாட புகழ் கோகுல் நாத் பணியாற்றுகிறார்
பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் சார் நியமிக்கப்பட்டு இருக்கிறார் . மிக மூத்த ஸ்டண்ட் மாஸ்டரான அவர் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை.” என்றார்
சங்கத்தின் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜான் மற்றும் இணை செயலாளர் ஆர்.நாராயணன் துணை செயலாளர் பரமசிவம் துணைத்தலைவர் ராக்கி ராஜேஷ் உபதலைவர் கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
பத்திரிக்கயாளர் சந்திப்பில் பல ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.