மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,
நீது சந்திரா, நாசர், இனியா, கோமல் ஷர்மா, எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் ஆர் கே செல்வமணி, சிங்கமுத்து , ஜான் விஜய் , சுமன் ஆகியோர் நடிக்க ,
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகிய நட்சத்திரங்களை இயக்கிய ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ். நம்பி டிக்கட் போடலாமா ? பார்க்கலாம் .
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரசில் ஒரு நாள் இரவுப் பயணத்தில் , ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் (கோமல் ஷர்மா),
ஒரு எம்.பி.யின் (சுமன்) மைத்துனி , கோட்டையூர் சமஸ்தான வாரிசான ஒரு பெண் (நீது சந்திரா ) ஆகிய மூவர் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் .
அதில் இருவர் இறந்து விட, சமஸ்தான வாரிசு மட்டும் பலத்த காயங்களோடு உயிர் பிழைக்கிறார் .
அந்த ரயிலில் ஒரு தீவிர வாதி (ஆர் கே செல்வமணி ) , ஒரு டி வி நடிகை (இனியா) அவரது அக்கா (அர்ச்சனா) அக்காவின் கூஜா கணவர் ( மதன் பாப்) , நான்கு மருத்துவர்கள் (பவன், சுஜா வாருணி மற்றும் இருவர்)
ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞன் , அவனது அப்பா (சிங்கமுத்து) – அம்மா என்று பல பயணிகள் .
தவிர ரயில் கிளம்பியதுமே சீட்டாட ஆள் தேடும் டி டி ஆர் ( எம் எஸ் பாஸ்கர் ) , ஏ சி கூப்பே அட்டெண்டர் (அனூப் சந்திரன்) என்று பல கதாபாத்திரங்கள் .
ஆரம்ப கட்ட விசாரணை நடத்தும் லோக்கல் இன்ஸ்பெக்டர் (நாசர்) இந்த வழக்கு ரொம்ப சிக்கலானது என்று முடிவு செய்கிறார் .
எனவே இந்த வழக்கில் துப்பு துலக்கும் பணியை திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரி ஷர்புதீனிடம் ( ஆர் கே) ஒப்படைக்கிறார் எம் பி .
ஷர்புதீனுக்கு ஒரு போலீஸ் உதவியாளர் (ரமேஷ் கண்ணா) , தவிர லோக்கல் இன்ஸ்பெக்டரும் நாயகனுக்கு உதவுகிறார் .
விசாரணை வளையத்துக்குள் கோட்டையூர் சமஸ்தானத்து நபர்கள் சிலரும் வருகிறார் .
பெண்களைக் கொலை செய்தது யார்? என்ன காரணம் ? குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டர்களா ? ஆம் எனில் மன்னிக்கப்பட்டர்களா ? தண்டிக்கப்பட்டர்களா என்பதே இந்தப் படம் .
திரைக்கதையிலும் படமாக்கலிலும் அசத்தி இருக்கிறார்கள் .
ஒரே ரயிலில் ஒரே பயணத்தில் ஒரே இரவில் நடந்தாலும் மூன்று பெண்களின் மீதான கொலைத் தாக்குதலுக்குமான பின்னணி வேறு . .நபர்கள் வேறு .
அந்த மூன்று டிராக்குகளில் சில கேரக்டர்கள் ஒன்றை ஒன்று லேசாக உரசிக் கொண்டாலும் மூன்று கொலைகளுக்கான மோட்டிவ் வேறு வேறு . சம்பவங்கள் வேறு வேறு .
சிறு சிறு வேர்கள் ஒன்று கூடி ஒரு முக்கிய வேராக வளர்வது போல வளர்ந்து, பிறகு வேர்கள் மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு பெரிய வேராகி மரத்துக்கு ஆதாரமாவது போன்ற திரைக்கதை .
ஏகப்பட்ட கேரக்டர்கள் ஏகப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொன்றும் வெளிப்படும் போது ஏகப்பட்ட பிளாஷ்பேக்குகள் .
கொஞ்சம் சறுக்கினாலும் படம் பார்ப்பவர் நிலவரம் கலவரம் ஆகி விடும்
அவ்வளவு சிக்கல்கள் உள்ள திரைக்கதையை குழப்பம் ஏற்படாத அளவுக்கு தெளிவாக தெறிப்பாக பரபரப்பாக விறுவிறுப்பாக சொல்லி இருப்பது வியப்போடு சபாஷ் போட வைக்கிறது . சூப்பர் .
துவங்கிய உடனேயே படம் பறக்கிறது . இடைவேளை வருவதே தெரியவில்லை . இரண்டாம் பாகமும் அப்படியே பரபரத்துப் பயணித்து , ஒரு நிலையின் நின்று நிதானித்துக் கதை சொல்கிறது .
படத்தின் முக்கியப் பகுதியாக வரும் கோட்டையூர் சமஸ்தானத்துக் கதையில் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டும் எதிர்பாராத ஒன்று . பாராட்டுகள் !
பெரும்பாலும் ரயிலில் நடக்கும் கதை . படமாக்குதலில் தீவிர உழைப்பு தேவைப்படும் நிலையில் சஞ்சீவ் ஷங்கரின் ஒளிப்பதிவில்,
மிக அருமையான ஷாட்கள் வைத்து அட்டகாசமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ் .
ரயில் பெட்டிக்குள் இருந்து வெளியே வரும் கேமரா சி ஜி யின் உதவியோடு மிகப் பெரிய லாங் ஷாட் ஆக மாறி, முழு ரயிலையும் காட்டும் படியான ஷாட்கள் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கின்றன . சபாஷ் ஷாஜி கைலாஷ் .
சர்புதீனாக வரும் ஆர் கே கேரக்டருக்கு சிறப்பாக கமர்ஷியல் நியாயம் செய்துள்ளார் .
லேசான கன்னக் குழி சிரிப்போடும் கூர்மையான பார்வையோடும் அவருக்கே உரிய பாணியில் அழுத்தம் திருத்தமாக வசனம் பேசி நடிக்கிறார் .
ஆக்ஷன் காட்சிகளில் பெரும் உழைப்பைக் கொடுத்து சிறப்பாக செய்துள்ளார் . சண்டை இயக்குனருக்கும் பாராட்டுகள் .
இது போன்ற விசாரணையை மட்டும் விவரிக்கும் கதைகளில் வசனகர்த்தாவுக்கு மேட்டர் ஆஃப் ஃபேக்ட் சொல்வதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் .
ஆனால் அதையும் மீறி ஆங்காங்கே வசனத்துக்கு சபாஷ் போட வைக்கிறார் பிரபாகர் . சிறப்பு.
பாடல் இல்லாத குறையை பின்னணி இசையில் சரி செய்கிறார் எஸ் எஸ் தமன் . ஒலி அமைப்பும் மிக சிறப்பாக பின்னணி இசையோடு கலந்து பயணிக்கிறது .
நடிப்பில் நாசரும் , அனுப் சந்திரனும் அசத்துகிறார்கள் . மறைந்த கல்பனாவின் பின்னணிக் குரலில் அர்ச்சனா நடித்துள்ள கேரக்டர் சிறப்பாக வந்துள்ளது .
நாயகிகள் எல்லோரும் பதுமைகள் .
வைகை எக்ஸ்பிரஸ் என்பது பகலில் ஓடி பகலிலேயே முடியும் ரயில் . நிஜத்தில் அது பயணிக்கும் ரூட்டிலேயே கதை சொல்லி விட்டு அதை இரவு ரயிலாக சொல்வது ஏன்?
மூன்று கொலைத் தாக்குதல்களையும் ஒரு நிலையில் ஒரு புள்ளியில் இணைத்துக் கதை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் வாய்ப்பு உண்டு .
நடந்து முடிந்த சம்பவத்தை விசாரித்து அதை ஓர் ஒற்றை கதாபாத்திரத்தின் மீது நிறுத்தி அதற்கு ஒரு கதைப் போக்கு சொல்லி அதோடு படம் முடிவதால் போகப் போக திரைகதையின் விஸ்தீரணம் குறைகிறது .
எல்லாம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் எதிர்பாராத ஒரு புதிய சிக்கலை உருவாக்கி இன்னும் பேரதிர்ச்சி கொடுத்து,
அதற்கு ஏற்ற ஓர் ஆக்ஷன் ஏரியா அமைத்து படத்தை செலுத்தி முடித்து இருந்தால் படம் இன்னும் ஒரு படி மேலே எகிறி இருக்குமே .
ஆனாலும் என்ன …
விசாரணை ஆக்ஷன் இரண்டும் சரியாக கலந்த வகையில் படம் கவர்க்கிறது
வைகை எக்ஸ்பிரஸ் …. பரபர சுறுசுறு விறுவிறு தடதட கடகட அதிரடி ஆக்ஷன் வண்டி .









