
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க,
வ குவார்ட்டர் கட்டிங், ஓரம்போ ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் — காயத்ரி இணையர் இயக்கி இருக்கும் படம் விக்ரம் வேதா .
போலீஸ் அதிகாரியாக மாதவன் , கேங்க்ஸ்டர் ஆக விஜய் சேதுபதி . மாதவன் ஜோடி ஸ்ரத்தா. விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை . இவர்கள் தவிர முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி, கதிர் ஆகியோரும் !
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டம் , ஆக்ஷன், காதல், கிளாமர், திரில், மாதவனின் புன்னகை, விஜய் சேதுபதியின் அசத்தல் சிரிப்பு எல்லாம் கலந்து இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சசிகாந்த் “ஒய் நாட் என்பது கேள்வி அல்ல . என்னைப் பொறுத்தவரை அது பதில். வித்தியாசமான படங்களை முயற்சிகளை செய்ய முடியுமா ? என்ற கேள்விக்கு,
ஏன் முடியாது என்று பதில் கேள்வியாகவே நான் தரும் பதில்தான் ஒய் நாட் . இந்தப் படமும் எல்லாரும் கவரும் படி இருக்கும் ” என்றார் .
கதிர் தன் பேச்சில் ” மாதவன் , விஜய் சேதுபதி போன்றவர்கள் நடிக்கும் படத்தில் நானும் ஒரு முக்கியப் பாத்திரம் ஏற்று இருப்பதில் மகிழ்ச்சி .
படம் மிக நன்றாக வந்துள்ளது ” என்றார்
விஜய் சேதுபதி பேசும்போது ” மாதவன் சீனியர் நடிகர் . அவரோடு நடிப்பது எப்படி இருக்கும் என்ற ஆரம்பத் தயக்கம் எனக்கு இருந்தது . பலவாறு யோசனையில் போனேன் .
இருண்ட அறைக்குள் தடுமாறும்போது பளீர் என்ற வெளிச்சம் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி முதல் நாள் பழகும் விதத்திலேயே என்னை இயல்பாக்கினார் . நல்ல நண்பராக ஆனார் .
இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இருவருக்கும் என்ன வேண்டும் என்பது ஃபிரேம் பை ஃபிரேம் தெளிவாக தெரியும் . அவர்கள் சிறப்பாக இயக்கி உள்ளனர்.
வித்தியாசமான படங்களை தயாரிக்க வேண்டும் என்பது சசிகாந்தின் போதை. இந்தப் படமும் அப்படியே . அவருக்கு இந்த போதை என்றும் இருக்க வேண்டும் ” என்றார் .
மாதவன் பேசும்போது ” விஜய் சேதுபதி என்னைப் பற்றி சொன்னார் . ஆனால் அவர் மிகச் சிறந்த நடிகர் . அவரோடு நடிப்பதில் நானும் ஆவலாக இருந்தேன் . இயல்பாக பழகினார் . அவர் மிகச் சிறந்த மனிதரும் கூட,
மொத்தமாகவே இது திறமை சாலிகள் நிறைந்த யூனிட் . இந்தப் படத்தை இந்த யூனிட்டை இதே நடிகர்களோடு அப்படியே இந்திக்குக் கொண்டு போகவும் எனக்கு சம்மதமே” என்றார் .
இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி பேசும்போது ” இரண்டு பெரிய நடிகர்களை வைத்து இயக்கும்போது அவர்களை சமாளிப்பது சிரமம் என்பார்கள் . ஆனால் இருவருமே இயல்பாக இருந்தனர் .
அது படத்துக்கு மிக உதவியாக இருந்தது . கேமராமேன் பி எஸ் வினோத் எங்கள் பெரும்பலம் . எல்லோருமே இந்தப் படத்துக்கு பெரும் பக்கபலமாக உழைத்தனர் .
எங்களுக்கு ஏதாவது கதை தோன்றினாலே நாங்கள் அதை சசிகாந்த் சாரிடம்தான் சொல்வோம் . வழக்கமாக ஏதாவது சொன்னால் இதில் ஒன்றும் எக்சைட் ஆக இல்லையே என்று சொல்லிவிடுவார் .
இந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்தது ” என்றார் .
“விக்ரம் – வேதா என்ற பெயர் அம்புலி மாமா கதையில் வரும் விக்கிரமாதித்தன் வேதாளம் கதையில் இருந்து வந்த பெயரா ?” என்று நான் கேட்டேன் .
அதற்கு பதில் சொன்ன இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி ” ஆமாம். விக்கிரமாதித்தன் போன்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் மாதவன் . வேதாளம் போன்ற கேங்க்ஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி .
பொதுவாக ஒவ்வொரு விக்ரமாதித்தன் வேதாளம் கதையிலும் கடைசியில் ஒரு நீதி சொல்லப்படும் . இந்தப் படத்திலும் அது உண்டு ” என்றார்கள்.
தலை வெடிக்காமல் வெல்லட்டும் !